சபரிமலையில் 27-ந் தேதி மண்டல பூஜை!
சபரிமலை: சபரிமலை அய்யப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை டிசம்பர் 27-ந் தேதி நடைபெறுகிறது. தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளை பார்த்தசாரதி கோவிலில் இருந்து 23-ந் தேதி புறப்படுகிறது.
புகழ்பெற்ற சபரிமலை அய்யப்ப சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த சிறப்பு பூஜை திருவிழா காலங்களில் நாட்டின் பல இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து அய்யப்பனை தரிசனம் செய்து செல்கிறார்கள்.
அதன்படி, இந்த ஆண்டின் மண்டல பூஜை 27-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் பகல் 12.30 மணிக்கு கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் சுவாமி அய்யப்பனுக்கு மண்டலபூஜை வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.
இந்த சிறப்பு பூஜையின் போது, சுவாமி அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அப்போது சபரிமலை மற்றும் பம்பை சுற்றுப்புறங்களில் கூடி இருக்கும் லட்சக்கணக்கான பக்தர்களின் சரண கோஷங்கள் மலையெங்கும் ஒலிக்கும். மண்டல பூஜை தினத்தில் சுவாமி அய்யப்பனை வணங்குவதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் கூடுவது வழக்கம்.
மண்டல பூஜையின்போது சுவாமிக்கு அணிவிப்பதற்கான தங்க அங்கி, ஆரன்முளை பார்த்த சாரதி கோவிலிலிருந்து 23-ந் தேதி காலை 7 மணிக்கு ஊர்வலமாக புறப்படுகிறது. இந்த தங்க அங்கி ஊர்வலத்துக்கு வழி நெடுகிலும் பக்தர்கள் சார்பில் அமோக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
திருவிதாங்கூர் முன்னாள் மன்னர் ஸ்ரீசித்திரை திருநாள் மகாராஜா கடந்த 1972-ம் ஆண்டு இந்த தங்க அங்கியை சபரிமலை கோவிலுக்கு சமர்ப்பித்தார். இந்த தங்க அங்கியின் எடை 420 சவரன்.
மண்டலபூஜை தவிர மற்ற நாட்களில் ஆரன்முளை பார்த்தசாரதி கோவிலில் இந்த தங்க அங்கி பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும். அங்கிருந்து, சிறப்பாக உருவாக்கப்படும் ரதத்தில் தங்க அங்கி ஊர்வலமாக பம்பைக்கு புறப்படுகிறது.
தங்க அங்கி ஊர்வலம் வழி நெடுகிலும் பக்தர்களின் அமோக வரவேற்புக்குப் பின், 26-ந் தேதி பகல் 12.30 மணிக்கு பம்பையை வந்தடையும். அங்கிருந்து தங்க அங்கியை பக்தர்கள் தலையில் சுமந்து சன்னிதானத்துக்கு ஊர்வலமாக புறப்படுவார்கள். இந்த ஊர்வலத்துக்கு மாலை 5 மணிக்கு சரம்குத்தியில் தேவசம்போர்டு உயர் அதிகாரிகள் மற்றும் அய்யப்ப சேவா சங்கத்தினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து தங்க அங்கி சன்னிதானம் கொண்டு செல்லப்பட்டு, சுவாமி அய்யப்பனுக்கு அணிவித்து மண்டல பூஜை நடைபெறும்.
மண்டல பூஜைக்கு பின், 27-ந் தேதி இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது. அதற்கு பிறகு மகர விளக்கு பூஜை திருவிழாவுக்காக 30-ந் தேதி மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். ஜனவரி 20-ந் தேதி வரை பல்வேறு சிறப்பு பூஜை-வழிபாடுகள் நடைபெறும்.












Click it and Unblock the Notifications