வெடிக்க மறந்த கிராமங்கள்!

இந்த பட்டாசுத் தடைக்கு, தங்கள் ஊர்களுக்கு வரும் பறவைகளுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என்ற உயரிய காரணம் இதற்குப் பின்னணியில் உள்ளது வியப்புக்குரியது, பாராட்டுக்குரியதாகும்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கூந்தன்குளம் கிராமம் இதில் ஒன்று. இங்கு பல காலமாகவே பட்டாசு வெடிப்பதில்லை. தீபாவளிக்குத்தான் என்றில்லாமல் எப்போதுமே இங்கு பட்டாசு சத்தத்தை கேட்க முடியாது. பட்டாசின் நெடி கூட அண்டாமல் இவர்கள் மிகவும் கவனமாக இருக்கின்றனர். விளக்கேற்றி, இனிப்புகள் செய்து, புத்தாடை அணிந்து அமைதியுடன் கொண்டாடுகிறார்கள் இந்த ஊர் மக்கள்.
கூந்தன்குளத்தில் அழகிய பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு பல்வேறு நாட்டுப் பறவைகளும் வந்து செல்கின்றன. தீபாவளி சமயத்தில் இங்கு வரும் பறவைகளுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக மக்கள் பட்டாசுகளை கையில் தொடுவதில்லை.
அதேபோல புதுவை அருகே உள்ள கழுப்பெரும்பாக்கம் கிராம மக்கள் 5 தலைமுறையாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். வானூர் வட்டத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் தற்போது 1500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 5 தலைமுறையாக பட்டாசுக்கு இந்த கிராமத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு காரணம்,இங்குள்ள ஆலமரத்தின் மத்தியில் மக்களின் எண்ணிக்கைக்கும் அதிகமாக உள்ள வவ்வால்களே.
இரவில் உணவு வேட்டை நடத்தி விட்டு, பகலில் மரக்கிளைகளில் தொங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் பட்டாசு வெடித்தால் வவ்வால்கள் கலைந்து செல்வது மட்டுமின்றி அவைகள் விபத்தில் சிக்கி இறக்கவும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் அதற்காக பட்டாசுகளுக்கு டாட்டா சொல்லி விட்டனர் இந்த கிராம மக்கள்.
இதேபோல சென்னிமலை அருகே வி. மேட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம், தச்சன்கரைவழி, செம்மாண்டாம்பாளையம், மீனாட்சிபுரம், புங்கம்பாடி ஆகிய கிராமங்களில் பட்டாசுகளை ஒருபோதும் மக்கள் வெடிப்பதில்லையாம். இதற்கு காரணமும் இங்குள்ள பறவைகள் சரணாலயம்தான். வெள்ளோடு மேட்டுப்பாளையம் பறவைகள் சரணாலயத்தில் பல்வேறு பறவைகள் தங்கி உள்ளன. அவ்வப்போது வெளி நாட்டு பறவைகளும் வந்து செல்கின்றன. அமைதியை தேடி வரும் பறவைகளுக்கு வெடி தொந்தரவாக இருக்கக் கூடாது என்பதற்காக பறவைகள் சரணாலயத்தை சுற்றி உள்ள கிராமங்களில் தீபாவளிக்கு பட்டாசு வெடி வெடிப்பதை மக்கள் தியாகம் செய்துள்ளனர்.
இதேபோல சிவகங்கை மாவட்டத்திலும் காரைக்குடி அருகே ஒருகிராமத்தில் பட்டாசு வெடிப்பதில்லை அந்த கிராம மக்கள். மனிதனுக்கு மனிதன் நேயம் காட்டத் தவறும் இந்தக் காலத்தில் பறவைகள் மீது பாசம் வைத்து பட்டாசுகளை துறந்துள்ள இந்த கிராமத்து மக்கள் நிச்சயம் மனித நேயத்தின் உச்சகட்டம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.












Click it and Unblock the Notifications