கிறிஸ்துமஸ் கேரல் பாடல்கள்!
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களின் பிரிக்க முடியாத அங்கமாகி விட்ட கேரல்கள் குழுவினர் இணைந்து பாடும் பஜனை ரகத்தை சேர்ந்த இசை வடிவம். 13ம் நூற்றாண்டில்தான் கேரல் பிறந்தது.
பின்னர் மத்திய காலத்தில் பாடலை பாடிக்கொண்டே ஆடிப்படும் குழு நடனம் கேரல்கள் என்று அழைக்கப்பட்டன. ஆனால், படிப்படியாக கேரல்கள் மத சம்பந்தப்பட்டதாக மாறியது. இத்தாலியில் துவங்கிய கேரல் பாடல்கள் மெல்ல மெல்ல பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து என பரவத் துவங்கியது.
கடந்த 1426ல் முதன்முதலாக கிறிஸ்தவ மதத் தலைவரும் பிரபல பாடலாசிரியருமான ஜான் ஆடிலே என்பவர்தான் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக 25 கேரல் பாடல்களை பட்டியலிட்டார். இந்த பாடல்களை மதப் பரப்புனர்கள் வீடு வீடாக சென்று பாடிச்செல்லும் மரபு உருவானது.
இதைத்தொடர்ந்து, கிறிஸ்துமஸ் பண்டிகையின் மாண்பை பரைசாற்றும் வகையில் பிரபல இசையாளர்கள் பல்வேறு மகத்துவமான கிறிஸ்துமஸ் கேரல் இசை வடிவங்களை உருவாக்கினர்.
இதனிடையே,1644 ம் ஆண்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மற்றும் கேரல்கள் மத கோட்பாடுகளை மீறுவதாக கூறி கிறிஸ்துமஸ் கேரல்கள் இங்கிலாந்தில் தடைசெய்யப்பட்டன. மேலும், கிறிஸ்துமஸ் கொண்டாடுவதை இங்கிலாந்து பாரளுமன்றம் குற்றமாக அறிவித்தது. இதற்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதன் பின்னர் திரும்பவும் 1660ம் ஆண்டில் இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் கேரல்கள் மீதான தடை நீக்கப்பட்டு பொது இடங்களில் கேரல்கள் பாட அனுமதி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கிறிஸ்துமஸ் கேரல் பாடல்கள் புத்துயிர் பெற்றன.
இதைத்தொடர்ந்து, 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் கேரல்கள் சர்வதேச அளவில் புகழ்பெற்றன. 1880 களில் தேவாலயங்களில் கேரல்கள் பாடப்படும் வழக்கம் முதன்முதலாக துவங்கியது.
கிறிஸ்துமஸ் கேரல் பாடல்கள் நீண்ட வரலாற்றை கொண்டிருந்தாலும் 19ம் நூற்றாண்டிலிருந்து உள்ள கேரல் பாடல்கள் மட்டுமே முழுமையாக உள்ளன. அதற்கு முந்தைய கேரல் பாடல்கள் தற்போது முழுமையாக இல்லை என்பதுதான் துரதிருஷ்டவசமானது.
கேரல்களில் காட் ரெஸ்ட் யூ மெர்ரி ஜென்டில்மேன், ஆஸ் ஐ சேட் ஆன் ஏ சன்னி பேங்க் மற்றும் தி ஹோலி அண்டு தி எல்வி ஆகிய கரோல்கள் நாட்டுப்புற இசை பாரம்பரியத்தை கொண்டது.
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகையின் தத்துவார்த்தத்தையும், மகிழ்ச்சியையும் இரட்டிபாக்குவதில் கேரல்கள் முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையாகாது.