திருச்செந்தூர் கோவிலில் 17-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் வள்ளி குகையில் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளி்ல் 2வது படைவீடாக திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் விளங்குகிறது. திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் பல லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த படிவுப்பாறை உள்ளது. இம்மலையின் குடைவறையில் மூலவர் பாலசுப்பிரமணியனின் கருவறை, பஞ்சலிங்கம், பள்ளி கொண்ட பெருமாள், வள்ளி குகையும் உள்ளது. இந்த குகை கோவிலுக்குள் செல்லும் குடைவரை வழியில் நான்கரை அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட பலகை கல்வெட்டு ஒன்று உள்ளது. இதில் அக்கால தமிழ் வடிவத்தில் 34 வரிகள் உள்ளன.
இக்கல்வெட்டை கண்டறிந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரும், திருச்செந்தூர் செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தமிழாசிரியருமான தவசிமுத்து கூறுகையில்,
கிபி 1656-ம் ஆண்டில் திருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட போது திருச்செந்தூரில் முத்தைய ஜோசியர் என்பவர் திருமலை உத்தரவின் பேரில் வள்ளி குகையில் முன் மண்டபத்திற்கு வெளியே கிணறு ஏற்படுத்தி தினசரி வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்தார்.
இக்கல்வெட்டு வைகாசி மாதம் 4-ம் தேதி பொறிக்கப்பட்டது. முருகப் பெருமானை திருமணம் செய்ய வள்ளியம்மன் சிவபெருமானை லிங்க வடிவத்தில் வழிபட்டது இக்குகையில் தான் என்று திருசெந்தூர் தல புராணம் கூறுவதையும் இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
கிபி 1648-ம் ஆண்டில் டச்சுக்காரர்கள் திருமலை நாயக்கருக்கு எதிராக படையெடுத்து திருச்செந்தூரில் இருந்து சிலைகள், நகைகளை கொள்ளையடித்துச் செல்லும்போது எழில்மிகு சிற்பங்கள், கடற்கரை குடைவரை சிற்பங்கள், கட்டிடங்களையும் சிதைத்து சென்றதாக வரலாறு சொல்கிறது. இக்கல்வெட்டு வாயிலாக 1656-ம் ஆண்டு திருமலை நாயக்கர் சிதைவுற்ற பகுதியை சீர்செய்து திருப்பணிகள் மேற்கொண்டதை அறிய முடிகிறது என்றார்.