குவைத்தில் நடந்த முப்பெரும் விழா: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்(K-Tic) ஒவ்வொரு ஆண்டும் சங்கத்தின் துவக்க நிகழ்ச்சியை ஹிஜ்ரா நிகழ்ச்சியுடன் சேர்த்து கல்வி/ சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் இணைத்து முப்பெரும் விழாவாக நடத்தி வருகின்றது.
அந்த அடிப்படையில் 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)'ஏற்பாடு செய்த (1) ஹிஜ்ரீ 1433 இஸ்லாமியப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி (2) கல்வி/ சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி (3) சங்கத்தின் 7ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி ஆகிய 'முப்பெரும் விழா', 2 நாட்கள், மூன்று இடங்களில் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகத்தின் ஆதரவில் நடைபெற்றன.
சங்கத்தின் தலைவர் விஸ்வகுடி மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இச்சிறப்புமிகு முப்பெரும் விழாவில் தமிழகத்தில் இருந்து வருகை தந்த மலேசியா, கோலாலம்பூர் மஸ்ஜிதே இந்தியாவின் முன்னாள் தலைமை இமாமும், பன்னூல் ஆசிரியரும், சீரிய சிந்தனையாளருமான சென்னை, சூளைமேடு மவ்லானா மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் பேராசிரியர் மு. அப்துல்லாஹ் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
முதல் நிகழ்ச்சி:
முதல் நிகழ்ச்சி 01.12.2011 வியாழக்கிழமை இரவு 6:30 மணி முதல் இஷா தொழுகையைத் தொடர்ந்து இரவு 9:45 மணி வரை குவைத், ஃபஹாஹீல், 'மிஜ்யத் அல் ஹிலால் அல் உதைபீ' பள்ளிவாசலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் ஆலோசகர்கள் முன்னிலை வகிக்க, சங்கத்தின் மார்க்க அறிஞர்கள் (ஜமாஅத்துல் உலமா) குழு உறுப்பினர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா எம்.எஸ். அப்துல் குத்தூஸ் ஹஸனீ பி.ஏ. கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். சங்கத்தின் இணை பொதுச் செயலாளர் அல்ஹாஜ் ஏ.கே.எஸ். அப்துல் நாஸர் பி.ஏ. வரவேற்புரையாற்ற, மிஜ்யத் அல் ஹிலால் அல் உதைபீ பள்ளிவாசலின் இமாம் சிரியாவைச் சேர்ந்த அஷ்-ஷைஃக் ஸாமீ அப்துல் முத்தலிப் அல் பாஜ் அல் ஸக்ரபா ஹிஜ்ராவின் வரலாற்றுச் சுருக்கத்தை அரபியில் அறிமுகவுரையாற்ற நிகழ்ச்சி இனிதே துவங்கியது. இமாம் அவர்களின் சொற்பொழிவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ. தமிழில் மொழிமாற்றம் செய்ததுடன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
தலைவரின் தலைமையுரைக்கு பிறகு மவ்லானா மு. அப்துல்லாஹ் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் 'ஹிஜ்ரத் - ஒரு வெற்றிப் பயணம்' என்ற தலைப்பில் சிந்திக்க வைக்கும் அற்புதமான பேருரையை நிகழ்த்தினார்கள். அவர்கள் தனது உரையில், ஹிஜ்ரத் நடைபெறுவதற்கு முன் நடந்த நிகழ்வுகள், ஹிஜ்ரத்தின் போது நடைபெற்ற சம்பவங்கள், அதற்குப் பின் இஸ்லாமிய சமூகத்தில் ஏற்பட்ட வெற்றிகள், ஹிஜ்ரத்தின் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினைகள், ஆஷூரா நோன்பு குறித்த விழிப்புணர்வு போன்றவற்றை தெளிவாக எடுத்துரைத்தார்கள். ஹழ்ரத் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து பார்வையாளர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. 3 ஆண்கள், 7 பெண்கள் சரியான பதில் அளித்தனர்.
நாட்காட்டி வெளியீடு:
ஆங்கிலம்/ ஹிஜ்ரீ தேதிகள், இஸ்லாமிய முக்கிய தினங்கள் மற்றும் குவைத் அரசாங்க விடுமுறை தினங்கள் போன்றவற்றுடன் தமிழ், அரபி மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகள் உள்ளடக்கிய பெரிய அளவிளான வண்ண நாட்காட்டி(Calendar)யை வருடந்தோறும் வெளியிட்டு மக்களுக்கு அன்பளிப்பாக வழங்குவது சங்கத்தின் பணிகளில் ஒன்றாகும். அந்த வகையில் மூன்றாவது ஆண்டாக 2012 நாட்காட்டி வெளியீட்டு நிகழ்ச்சியும் இந்த முப்பெரும் விழாவில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர் மவ்லானா மு. அப்துல்லாஹ் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் நாட்காட்டியை வெளியிட, முதல் பிரதியை சங்கத்தின் ஆலோசகரும், திருச்சி பிஸ்மில்லாஹ் (அல்-ஷாஃபி) உணவகத்தின் நிர்வாகியுமான அல்ஹாஜ் ஏ. அக்பர் அலி அவர்களும், இரண்டாவது பிரதியை சங்கத்தின் துணைத் தலைவர் அல்ஹாஜ் ஏ. கமாலுத்தீன் அவர்களும், அடுத்தடுத்த பிரதிகளை பொதுநல ஆர்வலர்கள் பொறியாளர் அல்ஹாஜ் எம். அப்துஸ் ஸமது, பொறியாளர் அல்ஹாஜ் எஸ். ஷர்ஃபுத்தீன் மற்றும் அல்ஹாஜ் எம். ஹமீது ஹுஸைன் ஆகியோரும் பெற்றுக் கொண்டனர்.
சங்கத்தின் இணை பொருளாளர் அல்ஹாஜ் ஹெச்.எம். முஹம்மது நாஸர் நன்றியுரையாற்ற, சிறப்பு விருந்தினர் மவ்லானா மு. அப்துல்லாஹ் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் துஆ ஓத, விழாவுக்கு வந்தவர்களுக்கு தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
இரண்டாவது நிகழ்ச்சி:
02.12.2011 நண்பகல் 12:15 மணி முதல் ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து பகல் 1:15 மணி வரை குவைத், ஃகைத்தான் பகுதியிலுள்ள K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலான அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசலில் சிறப்புரை நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர் மவ்லானா மு. அப்துல்லாஹ் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் 'ஜகாத் - நோக்கங்களும், தற்கால நடைமுறைகளும், பைத்துல் மாலின் முக்கியத்துவமும்' என்ற தலைப்பில் சிந்திக்க வைக்கும் அற்புதமான சொற்பொழிவை நிகழ்த்தினார்கள். அவர்கள் தனது உரையில், ஜகாத்தின் நோக்கம், சட்ட திட்டங்கள், கொடுத்தால் கிடைக்கும் வெகுமதிகள், கொடுக்காவிட்டால் ஏற்படும் ஈருலக நெருக்கடிகள், யாருக்கு கொடுக்க வேண்டும்?, எவ்வாறு கொடுக்க வேண்டும்?, பைத்துல் மால் என்றழைக்கப்படும் பொதுநிதி கருவூலம் அமைப்பதின் முக்கியத்துவம் போன்றவற்றை விரிவாக எடுத்துரைத்தார்கள். ஹழ்ரத் அவர்கள் துஆ ஓத நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
மூன்றாவது நிகழ்ச்சி:
02.12.2011 வெள்ளிக்கிழமை இரவு 6:45 மணி முதல் இஷா தொழுகையைத் தொடர்ந்து இரவு 9:45 மணி வரை குவைத் சிட்டி, மிர்காப, 'அல்-ஷாயா' பள்ளிவாசலில் சிறப்புரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் இதழியல் குழு செயலாளர் ஜனாப் ஏ. ஹாமித் அபூ மாஜின் கிராஅத் ஓத, சங்கத்தின் ஆலோசகர்கள் முன்னிலை வகிக்க, சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ காரீ ஹாஃபிழ் அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ வரவேற்புரையுடன் அறிமுகவுரையாற்ற நிகழ்ச்சி இனிதே துவங்கியது.
தலைவரின் தலைமையுரைக்கு பின் மவ்லானா மு. அப்துல்லாஹ் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் 'கல்வியும், ஒழுக்கம் சார்ந்த நெறிகளும், மார்க்கக் கல்வியின் முக்கியத்துவமும்' என்ற தலைப்பில் கருத்தாழமிக்க அற்புதமான பேருரை ஒன்றை நிகழ்த்தினார். அவர்கள் தனது உரையில், கல்வியின் முக்கியத்துவம், பெண் கல்வி, கல்வி கற்கும்போது பேணப்பட வேண்டிய நெறிமுறைகள், ஒழுக்கம் சார்ந்த கல்வி, மார்க்கக் கல்வியின் மாண்புகள், கல்விக்கு செய்ய வேண்டிய உதவிகள் போன்றவற்றை தெளிவாக எடுத்துரைத்தார். ஹழ்ரத் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து பார்வையாளர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. 3 ஆண்களும், 9 பெண்களும் சரியான பதில் அளித்தனர்.
சங்கத்தின் மார்க்க அறிஞர்கள் (ஜமாஅத்துல் உலமா) குழு உறுப்பினர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா எம்.எஸ். அப்துல் குத்தூஸ் ஹஸனீ பி.ஏ. நன்றியுரையாற்ற, சிறப்பு விருந்தினர் மவ்லானா மு. அப்துல்லாஹ் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் துஆ ஓத, கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
இச்சிறப்புமிகு நிகழ்ச்சிகள் அனைத்தையும் சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ. தொகுத்து வழங்கியதுடன் சங்கத்தின் செயற்திட்டங்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சிகளில் பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. கலந்து கொண்ட அனைவருக்கும் சங்கம் வெளியிட்ட 2012ம் வருட நாட்காட்டி அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் சுமார் 750 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.