மகரவிளக்கு நெரிசலை கட்டுப்படுத்த பம்பாவில் பெருமளவு பக்தர்களை நிறுத்த அதிகாரிகள் திட்டம்
சபரிமலை: சபரிமலையில் மகரவிளக்கு நாளில் ஏற்படும் பக்தர்கள் நெரிசலை கட்டுபடுத்தும் வகையில் பெருமளவு பக்தர்களை பம்பாவில் நிறுத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இதனால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, சபரிமலைக்கு வரும் பக்தர்களை பம்பை கணபதி கோவிலில் உள்ள மெட்டல் டிடெக்டர் மற்றும் ஸ்கேனிங் கருவிகள் மூலம் பலத்த சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் இலவுங்கல், சாலக்கயம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஸ்கேனர் கருவிகள் பொருத்தப்பட்டு சோதனை நடத்தப்படுகிறது.
கேரள போலீசாரின் கமாண்டோ படை, மத்திய பாதுகாப்பு படை உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க தீயணைப்பு படையினரும், வனத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பம்பை மற்றும் சன்னிதானத்தில் பக்தர்கள் செல்லும் பாதைகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களின் தீவிர சோதனைக்குப் பிறகு தான் அனுமதிக்கப்படுகின்றன. சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வரும் பக்தர்களிடம், போலீசார் தீவிர விசாரணை நடத்திய பிறகே அனுமதிக்கின்றனர்.
ஆண்டுதோறும் மகரவிளக்கு அன்று சபரிமலையில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. இந்த ஆண்டு பக்தர்கள் நெரிசலை தடுக்கும் வகையில், பெருமளவிலான பக்தர்களை பம்பாவில் நிறுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மாலிக்கபுரம் கோவில் அருகேயும் பக்தர்களின் எண்ணிக்கையை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சபரிமலை வரும் இதய கோளாறு உள்ள பக்தர்களின் மருத்துவ உதவிக்காக மலைப்பாதையில் பல இடங்களில் மருத்துவ உதவி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 40 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் மலைப் பாதையில் திடீர் என்று இறக்கும் பக்தர்கள் குறித்த விவரங்களை ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள டிவிக்களில் காட்டவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications