துபாயில் நடந்த அமீரகத் தமிழ் மன்றத்தின் 'இந்த நாள் இனிய நாள்'
இந்த ஒன்று கூடல் நிகழ்ச்சியில் உறுப்பினர்கள். விருந்தினர்கள், குழந்தைகள் என்று சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். துபாய் மற்றும் ஷார்ஜா நகரங்களில் வசிப்பவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வசதியாக சிறப்புப் பேருந்துகளுக்கு விழாக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
காலையில் உறுப்பினர்கள் பதிவு மற்றும் சிற்றுண்டியுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும், பல்வேறு வயது பிரிவுகளில் குழந்தைகளுக்காகவும் பல்வேறு சுவாரஸ்யமான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. போட்டிகளில வயது வித்தியாசமின்றி அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். மூன்று வயது குழந்தைகளுக்காகவும் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
மதிய உணவிற்குப் பின் ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையேயான பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து சைகை மூலம் பழமொழிகளை அடையாளம் காணும் போட்டியும் நடந்தது. இந்நிகழ்ச்சியிலும் பெண்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். ஆங்கில சொற்களுக்கான தமிழ்க் கலைச்சொல்லைக் கண்டுபிடிக்கும் போட்டி புதிய கலைச்சொற்களை உறுப்பினர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருந்தது.
மாலை தேநீருக்குப் பின்னர் இலங்கையைச் சேர்ந்த 'காப்பியக் கோ' ஜின்னா ஷர்ஃபுத்தீன் அவர்கள் தலைமையில் பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் பேசிய ஜின்னா ஷர்ஃபுத்தீன் அவர்கள் " பெருநகர் வாழ்வின் இறுக்கங்களைத் தகர்த்து மனிதர்களுக்கிடையே மதங்கள் இனங்கள் மறந்த ஒருங்கிணைப்பை உருவாக்குவதால் இதுபோன்ற ஒன்று கூடல் நிகழ்ச்சிகள் மிக அவசியம்" என்றார். இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற அமீரகத் தமிழ் மன்றம் முயற்சி செய்ய வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அமைப்பின் தலைவர் காமராசன், செயலாளர் ஜெஸிலா ரியாஸ், கலைச் செயலாளர் ஃபாரூக் அலியார், பொருளாளர் நஜ்முதீன், இணைச் செயலாளர் இரமணி, ஆலோசகர் அகமது முகைதீன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
விழா நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை ரியாஸ் அகமது, வஹிதா நஜிமுதீன்,பெனாசிர் ஃபாத்திமா, நிவேதிதா, வாணி ஆனந்தன் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் உற்சாகத்துடன் கலந்து கொண்டவர்களுக்கு ஆசிப் மீரான் நன்றி கூறினார்.