தேர்தல்: கூட்டணிக் கிளைகளில் பூத்துக் குலுங்கும் ஜாதீயம்!
சென்னை: ஜாதிகள், மதங்கள் குறித்து வீராவேசமாக பேசும் கட்சிகள் வழக்கம் போல இந்தத் தேர்தலிலும் ஜாதிகளை அரவணைத்து தங்களது இரட்டை வேடத்தை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
மதிப்பு, மரியாதை, அங்கீகாரம் உள்ளிட்ட நன்மைகள் செய்யும் கட்சிக்கு தங்கள் ஜாதி ஓட்டுகளைத் தாரைவார்த்து தர பல ஜாதிகளும் முன்வந்துள்ளன. அவற்றை இரு கை ஏந்தி வாங்கி, வலம் வருகின்றன 'மதச்சார்பற்ற, ஜாதிச் சார்பற்ற' திராவிடக் கட்சிகள்.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல்வாதிகளிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்றால் அதற்கு இதைவிட உரிய நேரம் கிடைக்காது. இதை புரிந்து கொண்ட ஜாதிகள் பல இந்த கையில் ஓட்டு, அந்த கையில் எங்களுக்கு நன்மை என்று பச்சையாகவே பேரம் பேசி கூட்டணிக்குள் புகுந்து கொண்டுள்ளன.
இதற்கு சிறந்த முன் உதாரணமே வன்னியர்கள் ஆதிக்கமுள்ள பாமக. தமிழக மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் வன்னியர்கள். அனைத்து கட்சிகளிலும் வன்னியர் தலைவர்கள் உள்ளனர். வட மாவட்டங்களில் வன்னிய சமுதாயத்தினரின் ஒரே பிரதிநிதியாக பாமக மட்டுமே திகழ்கிறது.
கடந்த 1980-ம் ஆண்டு வன்னியர் சங்கம் துவங்கப்பட்டது. 9 ஆண்டுகள் கழித்து பாமகவை டாக்டர் ராமதாஸ் நிறுவினார். வட மாவட்டங்களில் பாமகவுக்கு அதிக செல்வாக்கு உள்ளது. இன்று பாமகவின் ஆதரவு யாருக்கு உள்ளதோ அவர்களுக்கே வன்னியர்களின் பெரும்பான்மையான ஓட்டுக்கள் என்ற நிலை.
அதேபோல தொல். திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வட மாவட்டங்களில் செல்வாக்குள்ளதாக உள்ளது. தலித் சமுதாயத்தினரின் பெருவாரியான ஓட்டுக்களைப் பெற விடுதலைச் சிறுத்தைகளின் தயவு அவசியம்.
தற்போது புதிதாக முளைத்துள்ள ஜாதிக் கட்சி கொங்கு நாடு முன்னேற்றக் கழகம். இந்தக் கட்சியை இப்போது திமுக தனது பிடிக்குள் கொண்டு வந்து விட்டது.
அதேபோல மூவேந்தர் முன்னேற்றக் கழகம். இந்த ஜாதிக் கட்சியின் ஆதரவு இந்த முறை திமுகவுக்கு. கடந்த முறை அது அதிமுகவுக்கு சாதகமாக இருந்தது.
திமுக கூட்டணியில் இப்படி என்றால் அதிமுக கூட்டணியிலும் ஜாதி சாயம் இருக்கத்தான் செய்கிறது. அங்கும் புதிய தமிழகம், கொங்கு இளைஞர் பேரவை, மூவேந்தர் முன்னணிக் கழகம் என்று ஜாதிய அடையாளங்கள் உறுதியாகவே உள்ளன.
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றார் அன்று பாரதி. இன்றோ ஜாதிகள் அவசியம் தேவையடி பாப்பா - 'அட்லீஸ்' தேர்தலுக்காகவது என்று புதிய பாடலைப் பாடுகிறார்கள் 'சார்பற்ற' அரசியல்வாதிகள்!