தொட்டுத் தொடரும் இந்த பந்தம் ... என்றும் நிலைத்திருக்கும்...!
காதல் திருமணங்களில் எத்தனையோ சாகசங்கள் நிறைந்ததாக இருந்தாலும் பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணத்தில் எத்தனையோ இடர்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. முதல் பார்வையில் பிடித்துப்போய் திடீரென சில காரணங்களினால் விலக நேரும் போது அந்த நினைவுகளே நம்மை விடாமல் துரத்தி அடிக்கும்.
வேறு எந்த சிந்தனையும் இன்றி எனக்கானவளை நான் கைபிடித்தே தீருவேன் என்ற எண்ணமே மறுபடியும் நமக்கு கிடைக்கும் படி செய்யும். என்னுடைய திருமணமும் அதுபோல ஒரு சாகசம் நிறைந்த காதல் கதைதான். இந்த காதலர் தினத்தில் உங்களுடன் அதனை பகிர்ந்து கொள்கிறேன்.
பொண்ணு புடிச்சிருக்கா ? இந்த கேள்விதான் முதன் முதலாக எனக்கு உரியவளை பார்க்கத் தூண்டியது. அதுவரை தலையை குனிந்து கொண்டு வெட்கப்பட்டு கொண்டிருந்தவளை நேரடியாக பார்த்தேன். பார்த்த நொடியே பிடித்துப்போனது. இருந்தாலும் தனியே பேச வேண்டும் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது.
குடும்பத்தினரின் சம்பிரதாய பேச்சுக்கள் முடிந்ததும் இருவரும் தனியே பேச வேண்டும் என்று கூறியதை எல்லோரும் ஏற்றுக்கொண்டனர். பார்த்த உடன் பிடித்திருந்தாலும் ரசனைகள் ஒத்துப்போகுமா என்பதை பேசித்தானே தெரிந்து கொள்ள முடியும். இருவரின் ரசனைகளும் ஒன்றாக இருக்க ஒன்றாய் சம்மதம் தெரிவித்தோம்.
குடும்பத்தினரும் சந்தோஷத்தில் திளைக்க ஆறுமாதம் கால அவகாசம் கேட்கப்பட்டது. இடையில் ஏற்பட்ட சங்கடங்கள் முறிவுக்கு வழி வகுத்தன. இருந்தலும் மனதளவில் வருத்தம் இருந்தது. எதைப்பற்றியும் பேச முடியவில்லை. வேறு எதைப் பார்த்தாலும் பிடிக்கவில்லை. புதிதாய் பெண் பார்க்க சென்றாலும் என்னவளின் நினைவுகள் எனக்குள்ளே எழுந்தவண்ணம் இருந்தன. ஆறுமாத காலம் அக்னியின் தவிப்பு எனக்குள்ளே இருந்தது.
ஆனால், எதிர்பாராத நேரத்தில், எங்கிருந்தோ ஒரு சொந்தம் வந்து எனக்கு உரியவளை திரும்பவும் என்னிடமே ஒப்படைத்தது. தொலைந்த பொக்கிஷம் மீண்டும் கிடைத்த சந்தோஷம். அதை மீண்டும் தவற விட விரும்பவில்லை. ஊர் கூடி நிற்க, அத்தனை நாட்களாய் அக்னியில் சிக்கித் தவித்த நிலை மாறி, அக்னியை வலம் வந்து நான் விரும்பியவளின் கைபிடித்தேன்.
இடையில் விட்டுச் சென்றாலும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட எங்கள் சொந்தம் தொட்டுத் தொடரும் ஒரு பந்தம்…. இது என்றென்றும் நிலைத்திருக்கும்.