காதல்னாலே இப்படித்தானா...?
காதலிலும் இப்படித்தான். எத்தனை முறை சண்டை போட்டாலும், எப்படிப்பட்ட சண்டை போட்டாலும் கடைசியில் இருவரும் கூடிக்கொள்ளத்தான் செய்கிறார்கள். ஒரு வேளை காதல்னாலே இப்படித்தானா...
என்னதான் சண்டை போட்டாலும், எப்படித்தான் வாதிட்டுக் கொண்டாலும்
கடைசியில் அந்தப் பிரிவின் மெளனம் மனதை அழுத்தி, இருவரையும் மீண்டும்
நெருங்க வைத்து விடுகிறது. அதுதான் காதல்.
உன்னை நான் நேசிக்கிறேன், உண்மையாக நேசிக்கிறேன், உன் பெயரை மட்டுமே சுவாசிக்கிறேன், உனக்காகவே சுவாசிக்கிறேன் என்று கவிதை எழுதும் அளவுக்கு காதலர்கள், கோபதாபங்களை மறந்து குழந்தை போல யாசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். நம் மீதான கோபம் பறந்து போய் விடும் என்ற நம்பிக்கை கலந்த எதிர்பார்ப்புதான் அவர்களிடம் மிஞ்சி நிற்கிறதாம்.
நான் உன்னைக் கைவிடுவதுமில்லை
உன்னை விட்டுப் பிரிவதும் இல்லை
சொன்னது நீதானே...
உன்னை வருத்தியிருந்தால்
மன்னித்து விடு...
இந்த சண்டைக்கு முடிவே இல்லை
பாசத்தின் வெடிப்புதான் இந்த கோபத் துடிப்பு
இன்னும் உன் நினைவிலேயே...
மன்னிக்க மாட்டாயா என் தேவதையே... என்று காதலியைப் பார்த்து காதலன் எந்தக் கல்மிஷமும் இல்லாத மனதுடன் சொல்லும்போது எந்த மனதாக இருந்தாலும் இறங்கித்தானே போகும்...
மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் சட்டென இறங்கி வந்து என்னடா என் மீது கோபமா, மன்னித்து விடடா என்று குழைந்து நிற்கும்போது எப்படிப்பட்ட மனதாக இருந்தாலும் மன்னிக்கத்தானே தோன்றும். இன்னும் சொல்லப் போனால், சண்டை போடப் போட உறவுகள் மேலும் மேலும் வலுக்கவே செய்கிறதாம். மன சஞ்சலங்களை, சங்கடங்களைத் துடைத்துப் போட்டு விட்டு எந்தவிதமான ஈகோவும் இல்லாமல், நீதான் எல்லாம், உனக்காவே எல்லாம், என்னைக் கைவிட்டுவிடாதே என்று மனதார இறைஞ்சி நிற்கும்போது எந்தக் காதலிலும் முறிவுக்கு வாய்ப்பே இல்லையாம்.
காதல்னாலே இப்படித்தான்.. மோதல், கோபம், வேகம் என்று ஒருபக்கம் அலையடித்தாலும், மறுபக்கம் தென்றலைப் போல சத்தமே போடாமல் நேசம் கூடிக் கொண்டேதான் இருக்குமாம்... அதுதான் காதல்...!