கோவையில் நடந்த அமைதித் திருவிழா
கோவை: கோவை சாந்தி ஆஸ்ரம் மற்றும் குமரகுரு கல்லூரியின் சார்பாக அமைதித் திருவிழா(PEACE FESTIVAL) சிறப்புக் கருத்தரங்க நிகழ்வு கோவை குமரகுரு தொழில் நுட்பக் கல்லூரி அரங்கத்தில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சுமார் ஆயிரத்து ஐநூறு(1500) மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மேலும் கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் ஐம்பது தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
உலக அமைதி - வறுமை ஒழிப்பு
இளைய சமூகத்தினிடையே உலக அமைதி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய விஷயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வேண்டியும், நல்ல மாற்றங்களுக்காக பங்களிப்பை செலுத்தும் ஆர்வம் மிக்கவர்களாக வளரும் தலைமுறையை உருவாக்கும் விதமாகவும் இந்நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
ஆகஸ்ட்6ம் தேதி
அதன் ஒரு பகுதியாக இவ்வாண்டும் 2013 ஆகஸ்ட் 6-ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட இந்நிகழ்வில் சிறப்புரைகள், கலை நிகழ்வுகள், ஆய்வறிக்கை சமர்பித்தல், கலந்துரையாடல்கள், சேவை நிகழ்வுகள், கல்வி உதவி வழங்குதல், குறும்படம் திரையிடல் என பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டது.
கோவை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்
இந்த சிறப்பு நிகழ்வில் கோவை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மாணவியர் இஸ்லாமிய அமைப்பு
மேலும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணியின் சார்பாகவும்,இந்திய மாணவியர் இஸ்லாமிய அமைப்பு(GIO) சார்பாகவும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடல்
இந்த சிறப்பு நிகழ்வில் தங்கள் பங்களிப்பை செலுத்தியதோடு, இதில் கலந்து கொள்ள வருகை புரிந்திருந்த பிற தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளோடு பரஸ்பர கலந்துரையாடலகளையும் மேற்கொண்டனர். மேலும் அவர்களுக்கு நினைவுப்பரிசுகளையும், புத்தகங்களையும் வழங்கினர்.
ஆக்கப்பூர்வமான நிகழ்வு
இஸ்லாமிய மாணவியர் அமைப்பு(GIO) வின் சார்பாக கலந்து கொண்ட பிரதிநிதியும், இளங்கலை மாணவியுமான தஸ்னீம் முபீனா கூறுகையில், வளரும் தலைமுறையினரிடையே இது போன்ற ஆக்கப்பூர்வமான நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த கோவை சாந்தி ஆஸ்ரமத்திற்கும், குமரகுரு கல்லூரிக்கும் பெரிதும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.