சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் தித்திக்கும் தீபாவளி திருவிழா
சான் ஃபிரான்சிஸ்கோ: சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் தித்திக்கும் தீபாவளி திருவிழா 2020 என்ற நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 22 நவம்பர் 2020, ஞாயிற்றுக் கிழமை அன்று, சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து தித்திக்கும் தீபாவளி திருவிழா 2020 என்ற நிகழ்வினை, பிரமாண்டமாக கொண்டாடினார்கள். திட்டமிட்ட படி, மிகச் சரியாக, பசிபிக் நேரம் மாலை 5-மணி அளவில் இந்த இணைய விழா, இனிதே துவங்கியது. நிகழ்வின் ஆரம்பத்தில் பகிரப்பட்ட, Count Down காணொளி அனைவரையும், எதிர்பார்ப்பின் உச்சத்தில் கொண்டு சேர்த்தது. ஞாயிறு மாலையில், அனைவரும் தங்களது வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து, ரசித்து பார்க்கும் வண்ணம், கலிபோர்னியா தமிழ் டிவி YouTube மற்றும் தித்திக்கும் தீபாவளித் திருவிழா Facebook பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பப் பட்டது.
முற்றிலும் மாறுபட்ட இந்த இணையக் கொண்டாட்டத்தினை, விழாக்குழு நண்பர் திரு.தயானந்தன் அவர்கள் அனைவரையும் வரவேற்று, துவக்க உரை ஆற்றினார். அவரைத் தொடர்ந்து, விழாக்குழு நண்பர் திரு.ரமேஷ் சத்தியம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். பிறகு விழாக் குழுவின் பெண்கள், மங்கள இசையுடன் விளக்கேற்றி வைத்து, தித்திக்கும் தீபாவளித் திருவிழாவின் கலை நிகழ்வுகளைத் துவக்கி வைத்தனர். அதன் பிறகு, அருமையான பரத நாட்டியம் ஒன்று அரங்கேறியது. அதனைத் தொடர்ந்து Super Singer பட்டம் பெற்ற, பாடகர் கிருஷ்ணமூர்த்தி சில பாடல்கள் படியது மிகவும் சிறப்பாக அமைந்தது. அதன் பிறகு, நடை பெற்ற ஒவ்வொரு நிகழ்வினையும், பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் வரிசைப்படுத்தி இருந்தனர். மேலும் அழகிய குழு நடனங்கள், பரத நாட்டியம் மற்றும் மெல்லிசைப் பாடல்கள் சீரான இடைவெளியில் நடைபெற்றது.
இணையத்தில் விளையாட்டு நிகழ்ச்சி
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில், இணையத்தில் சிறப்பான விளையாட்டு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விளையாட்டில், சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், கலிபோர்னியா தமிழ் TV-யின் புகழ் பெற்ற நிகழ்வான, வீட்டில் இருந்து விளையாடு, தித்திக்கும் தீபாவளித் திருவிழா-விற்காக, பிரத்யேகமாக நடத்தப்பட்டது. கலந்து கொண்ட ஜோடிகள் அனைவரும் சிறப்பாக விளையாடினார்கள். விழாவின் சிறப்பம்சமாக, தமிழ் திரைப்படத் துறையினைச் சேர்ந்த பிரபலமானவர்களும், தமிழ் பேச்சாளர்களும், தமிழிசை பாடகர்களும், வளைகுடாப் பகுதித் தமிழர்களுக்கு தீபாவளித் திருநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்தனர்.
சிறப்பான நகைச்சுவை நிகழ்வு
அதனைத் தொடர்ந்து, வளைகுடாப் பகுதியின் வளர்ந்து வரும் தமிழ் Stand up Comedy Club, Building18 நிகழ்த்திய நகைச்சுவை நிகழ்வு அனைவரையும் மகிழ்வித்தது. குறிப்பாக விஜய் டிவி புகழ் மற்றும் கொஞ்சம் நடிங்க பாஸ் நிகழ்வின் நாயகன், திரு.ஆதவன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பல திறமைகளின் சங்கமமாக இருக்கும் திரு.ஆதவன் அவர்கள், பல குரல்களில் பேசுவது மட்டுமல்ல, பல பாடல்கள் பாடுவதிலும் சிறந்தவர் என்பதை நிரூபித்தார். வளைகுடாப் பகுதியின் தமிழ் மக்களுள் சிலர், திரு.ஆதவன் அவர்களுடன், கொஞ்சம் நடிங்க பாஸ் நிகழ்வில் நேரலையில் கலந்து கொண்டது அனைவரையும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.
அசத்தல் கலைநிகழ்ச்சிகள்
வளைகுடாப் பகுதியில் சிறந்த பாடகர்கள், மிக அருமையாக பல பாடல்களை பாடி உற்சாகப்படுத்தினார்கள். மேலும் SFO வானம்பாடிகள் குழுவினரும் சில பாடல்களை பாடினர். அது மட்டுமல்ல, இப்பகுதியின் நடனக் குழுவினர் சிலர் சிறந்த துள்ளல் நடனங்களும் ஆடினர். விழாவின் இடையிடையே, தித்திக்கும் தீபாவளித் திருவிழா-விற்கு பொருளுதவி அளித்த வளைகுடாப் பகுதித் தொழிலதிபர்களுக்கும், பேராதரவு அளித்த ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் வளைகுடாப் பகுதியில் இருக்கும் உணவகங்களில் சில, தித்திக்கும் தீபாவளித் திருவிழா அன்று, விழாக்கால சிறப்பு coupon களை பகிர்ந்தனர். அந்த coupon அனைத்தும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையவழி தீபாவளி கொண்டாட்டம்
விழா முழுவதையும் ராமன் மற்றும் பாமா அவர்கள் இருவரும் நேர்த்தியாகவும், தொய்வின்றியும் தொகுத்து வழங்கினார்கள். விழாவின் இறுதியில், விழாக் குழுவில் ஒருவரான தெய்வேந்திரன் நன்றியுரை தெரிவித்தார். கடந்த 2019-ஆம் ஆண்டில், பிரமாண்ட இரவு உணவுடன் கொண்டாடப்பட்ட, தித்திக்கும் தீபாவளித் திருவிழா, இம்முறை இணையத்தின் வாயிலாக, பிரமாண்டமாகவும், அதே சிறப்புடனும் கொண்டாடப் பட்டது. உலகமெங்கும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள், இணையத்தில் கண்டுகளித்து மகிழ்ந்தனர்..
தொண்டு நிறுவனங்களுக்கு உதவி
தித்திக்கும் தீபாவளித் திருவிழா சிறப்பாக நடைபெறுவதற்கு, ரமேஷ் குப்புசாமி, கௌரி சேஷாத்ரி, கார்த்திக் பெருமாள், சங்கர் நடராஜன், ஸ்ரீனிவாசன் வரிப்பிரெட்டி, மருத பாண்டியன், யோகானந்த் நடராஜன், விஜயன் உசிலை குடும்பத்தினர் மற்றும் வளைகுடாப் பகுதியின் நண்பர்கள் இணைந்து உழைத்தனர். கடந்த 2019 ஆண்டினைப் போலவே, இவ்வாண்டும் தீபாவளித் திருவிழா நடத்திய செலவு போக, மீதத் தொகையினை, தொண்டு நிறுவனம் மூலமாக நலிவடைந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. 2021-ஆம் ஆண்டில் தித்திக்கும் தீபாவளி திருவிழா பிரமாண்ட வளாகத்திலும், இணையத்திலும் இன்னும் சிறப்பாக கொண்டாட முடியும் என்ற நம்பிக்கையுடன், விழா இனிதே நிறைவடைந்தது.