வளம் தரும் ஆலயங்கள்: காளஸ்திநாதர்- ஞானம்மன் ஆலயம்
ஆண்டவன் குடி கொண்டுள்ள ஆலயங்களில் நிலவும் தெய்வீகத் தன்மை நம் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. தொன்மைமிக்க ஆலயங்களின் அமைவிடம் கட்டுமானம் ஆகியவையும் அவற்றில் நிலவக்கூடிய விண்காந்த சக்தி மின் காந்த சக்தி ஆகியவை நம் மனம் தூய்மை அடையவும் வாழ்க்கை வளம் பெறவும் உதவுகிறது..இந்த வகையில் நாம் இந்த வாரம் தரிசிக்க செல்வது காளஸ்திநாதர்-ஞானம்மன் ஆலயம் ஆகும்.
ஸ்தலத்தின் இருப்பிடம்:
இந்த ஆலயமானது தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அமைந்து உள்ளது. தேனியிலிருந்து பேருந்தில் கம்பம் செல்லும் வழியில் சுமார் ஒன்றறை மணி நேர பயணத்தில் உத்தமபாளையத்தை அடையலாம்.
உத்தமபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து ஐந்து நிமிட நடையில் கோவிலை அடைந்து விடலாம்.
ஆலயத்தின் தொன்மை:
இந்த ஆலயமானது சுமார் 300 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. வருடம் முழுவதும் வற்றாத தூய்மையான சுருளியாற்றங்கரையில் அமைந்துள்ளது. தென் காளஹஸ்தி என்று சிறப்புடன் அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தின் மூலவர் காளஸ்திநாதர் தாயார் ஞானாம்பிகை ஆவர். தலவிருட்சம் செண்பகம் ஆகும்.
தென் காளஹஸ்தி
உத்தமபாளையத்தில் உள்ள திருக்காளத்தீஸ்வரர்- ஞானாம்பிகை கோவில் தென் காளஹஸ்தி என்று போற்றப்படுகிறது. ஆந்திர மாநிலம் காளகஸ்தியில் உள்ளது போல் தென்புறம் கண்ணப்பர் சன்னதியும், ராகு, கேது கிரகங்கங்களுக்கு தனி சன்னதியும் உள்ளது.
இதனால் தான் இக்கோவிலை பக்தர்கள் தென்னகத்து காளகஸ்தி என்று பெருமையுடன் அழைக்கின்றனர். மேலும் இக்கோவிலில் ஒரே லிங்கத்தில் சிறிய வடிவில் 1008 லிங்கம் செதுக்கப்பட்டு உள்ளன. இந்த காட்சி இக்கோவிலின் தனி சிறப்பாக கருதப்படுகிறது.
250 தூண்கள்
மேலும், இக்கோவிலில் சுமார் 250 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தூண்களிலும் ராமாயணம், மகாபாரத காட்சிகளை காண முடிகிறது. மேலும் திருவிளையாடல் புராணம், கந்தபுராணம் நிகழ்ச்சிகளும் தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆலயத்தின் சிறப்பம்சம்:
இங்கு ராகுவுக்கும் கேதுவுக்கும் தனித் தனியே சன்னதிகள் அமைந்துள்ளன. ஞாயிறு தோறும் ராகு கால நேரத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
பொதுவாக ஜாதகத்தில் ராகு கேது சாதகமற்ற நிலையில் அமர்ந்திருந்து வாழ்க்கையில் பலவித தடை தாமதம் சிரமங்களை அனுபவிப்பவர்கள் இங்கு சென்று வழிபட்டால் மூன்று மாதத்திற்குள் வேண்டிக் கொண்ட விஷயம் நடைமுறைக்கு வரும் என்பது பலன் அடைந்தவர்கள் கூறுகிறார்கள்.
புராதான ஆலயங்களை தரிசிப்போம்! காளஸ்திநாதரை வழிபட்டு இன்பம் பெறுவோம்!