சீழ் பிடித்து விட்ட சமுதாயம்
- சுஜாதா ஜெயராமன்
பன்னிரெண்டு வயது பிள்ளையை
பாலியல் செய்ய இருபத்திரண்டு பேர்
அடப்பாவிகளா,
உங்களுக்கே இது அக்கிரமமாக இல்லை?
வக்கிரமாக இல்லை ?
வெட்கமாக இல்லை ?
குழந்தை என்றும் பாராமல் ....
அதிலும் வாய் மொழி பேசாது
செவி ஒன்றும் கேட்காத
சிறு பிள்ளையிடம் வன்முறையா ??
மனிதர்களா நீங்கள் ??
உங்களை மிருகம் என்று சொன்னால்
மிருகங்களுக்கும் கோபம் வரும் .
காரணம் மிருகங்கள் கற்பழிப்பதில்லை.
மனதிலும் உடலிலும் வெறி பிடித்த ....
உங்களை ஒப்பிட்டு சொல்ல
வார்த்தைகளும் கிடைக்கவில்லை .
கேடு கேட்ட கயவர்கள் !
இப்போதாவது பண்ணிய பாவத்தை
உணர்ந்திருக்கிறீர்களா,
பச்சை பிள்ளையின் வாழ்வை
துவம்சம் செய்து விட்டோமே என்று ?
மாபாதகம் செய்த புண்ணியவான்களே !
உம் வீட்டில் பெண்பிள்ளைகள் இல்லையா ?
தாய், தாரம், தமக்கை, தங்கை,
மகள், மருமகள், பேத்தி என்று
எந்த பெண்ணும் உங்கள் வாழ்க்கையில்
உறவு முறையில் ஒரு பெண்ணும் இல்லையா ?
எப்படியடா இப்படி செய்ய மனம் வந்தது?
உங்கள் வன்முறையில் வாய் விட்டு கதறி அழ
வாய்ச்சொல்லே இல்லாத பெண் பிள்ளையை
நாய்களை போல குதறி இருக்கிறீர்களே !
உங்களை நாய் என்று சொன்னால்
நாயும் என்னை கடிக்க வரும் ,
நான் எந்த குழந்தையை கெடுத்தேன் என்று
நாய் கூட என்மீது கோபப்படும் .
ஈனப்பிறவிகளா !!!
படுபாதகர்களா !!!
உலகத்தில் உள்ள அத்தனை மொழி
கெட்ட வார்த்தைகளும் கேடு கெட்ட
உங்கள் பெயர்களாய் மாறட்டும் !
உலகத்தில் செய்யப்படும் கொலை முறை அத்தனையும்
ஒவ்வொரு நாளாய் உங்கள்மேல் செயல் படட்டும் !!!
உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு
ஒழுக்கம், உறவுமுறையில் அருமையை
உம் தாய் தமக்கை தாரம் ஒருவரும்
சொல்லி கொடுத்ததில்லையா ?
உம்மில் பலர் அறுபது அறுபத்தைந்து வயது,
எப்படியடா? எப்படியடா?
பெண் பிள்ளையை பெற்ற எந்த தாயும் இனி
தந்தை தமயன் தம்பி விடுத்து,
அடுத்த ஆண் ஒருவனை
தாத்தா, மாமா, அண்ணா என்று
அறிமுகம் செய்யவே பயப்படும் அளவுக்கு
நம்பி ஒரு நிமிடம் வெளியே விட முடியாத அளவுக்கு
சீழ் பிடித்து போய் விட்டதே இந்த சமுதாயம் !
உறவு முறைகளே பொய்த்து போய் விட்டதே !
வயது வரம்பே இல்லாமல் தொலைந்ததே !
பாவிகளா, பேத்தி வயது உள்ள பிள்ளையை
படுபாதகம் செய்ய எப்படியடா மனம் வந்தது ?
இந்த கொடுமையில் வீடியோ வேறு ! மிரட்டல் வேறு !
பச்சை பிள்ளையிடமாடா உங்கள் வீரம் !
இப்போது சிறைக்குள்ளே பத்திரமாய்
ஒளிந்திருக்கிறீர்களே,
வாருங்களடா வெளியே,
காட்டுங்கள், உங்கள் வீரத்தை இப்போது மக்களிடம் !
துளி துளியாய் உங்களை துவையல் போட காத்திருக்கிறது ,
கடவுளே
இந்த கொடுமையே கடைசியாய் இருக்கட்டும் .
இவர்களுக்கு சீக்கிரம் சட்டம் பாடம் புகட்டட்டும்.
பிடிபட்ட பதினெட்டு பேருக்கும்
கிடைத்த தண்டனை
ஒவ்வொரு திரையரங்கில்,
தொலைக்காட்சிப்பெட்டியில்
அவ்வப்போது காட்டபடட்டும் .
பெண் பிள்ளைகளை தீண்டும் கயவர்க்கு
அந்த காணொளி பயம் விளைக்கட்டும் .
தாய்மார்களே!
ஒன்றை நன்றாய் புரிந்து கொள்ளுங்கள்!
இனி பிள்ளைகளிடம்
'குட் டச், பேட் டச்' (good touch , bad touch )
என்றெல்லாம் சொல்ல வேண்டாம் .
அம்மா டச் always குட் டச்
அப்பா டச் பெண்பிள்ளை வயது வரும் வரை குட் டச் ;
மற்ற எல்லா ஆண்களின் டச் வெரி பேட் டச் .
இப்படி சொல்லி வளர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு
சமுதாயம் கொண்டு போய் விட்டது.
எந்த துணையும் இல்லாமல் பிள்ளைகளை
குறிப்பாய் பெண் பிள்ளைகளை
யாரை நம்பியும் தனியே விட வேண்டாம்.
என்ன நடந்தாலும் முதலில்
தாயிடம் சொல்ல பிள்ளைகளை பழக்குங்கள்.
பிள்ளைகளின் வாழ்விற்கு நாமே பொறுப்பு.
ஏனெனில், பூங்காவனமாய் இருந்த உலகம் இன்று
மின்னணு வலையில் ஆபாச உலகில் சிக்கி
புண்ணாகி சீழ் பிடித்து கிடக்கின்றது .
இதில் பெண்ணினம் பாழ்பட்டு கண்ணீர் வடிக்கிறது.