துபாயில் நடைபெற்ற தமிழ் மாணவியின் பரதநாட்டிய அரங்கேற்றம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
துபாய்: தமிழ் மாணவி ஹரிணியின் பரதநாட்டிய அரங்கேற்றம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
ஐக்கிய அரபு அமீரகம் துபாய் இல் நிருத்ய புவனம் சார்பில் அதன் இயக்குனர் புவனேஸ்வரி ரத்னம் அவர்களின் மாணவி குமாரி ஹரிணி ராமலிங்கம் அரங்கேற்றம் வெள்ளிக்கிழமை டிசம்பர் 29 ஆம் தேதி மாலை அழகுற நடைபெற்றது.
விழாவை புவனேஸ்வரியின் குரு முனைவர் பாலா நந்தகுமார் அவர்கள் தலைமை தாங்கினார். விசாலாக்ஷி ஷங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
புஷ்பாஞ்சலியில் துவங்கி கணபதி ஸ்துதியில் விநாயகரை துதித்து சப்தத்தில் பழனி முருகனை கண் முன்னே நிறுத்தினார் ஹரிணி. 'கானம் இசைத்து வருவாயோ' வர்ணத்தில் தர்மன் சூதாட்டத்தில் அனைத்தும் இழந்ததையும், சபை நடுவே துடிக்கும் பாஞ்சாலியின் மானம் காத்த காட்சியும் கிருஷ்ணன் கர்ணனிடம் தானம் பெற்ற காட்சியும் மிக அற்புதமாக தான் ஏற்ற ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தத்ரூபமாக ஆடி சபையோர் அனைவரின் பாராட்டையும் பெற்றார் அவர்.
அவர் ஆடிய வேங்கடாச்சல நிலையம், காண வருவாரோ, நமோ நமோ கீர்த்தனங்கள் அனைவர் மனதிலும் நீங்காத இடம் பெற்றன. குரு புவனேஸ்வரி ரத்னம் அவர்களின் நட்டுவாங்கமும் நடன அமைப்பும் மிக அற்புதமாக இருந்தது.
ரோஷினி கணேஷ் அவர்களின் பாடலும், முத்தரா ராஜேந்திரன் அவர்களின் மிருதங்கமும், ஷங்கர் கணேஷ் அவர்களின் வயலினும் பிரியேஷ் அவர்களின் புல்லாங்குழலும் அழகுக்கு அழகு சேர்த்தன.