Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகாராஷ்டிரா தேர்தல்: 100 சீட், 90 சீட்..சிவசேனா, என்சிபியை சுமந்துகிட்டு பாஜக படும்பாடு பயங்கரமப்பா!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் களம் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் "என் சோகக் கதையை கேளு அரசியல் உலகமே" என பாடாத குறையாக பாடாய் பட்டுக் கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி (பாஜக). மகாராஷ்டிராவில் பாஜகவின் கூட்டணி கட்சிகளான ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 100 தொகுதிகளை கொடுத்தே ஆக வேண்டும் என்கிறது.. அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) 90 இடங்களைத் தந்தாக வேண்டும் என அடம்பிடிப்பதால் பாஜக விழிபிதுங்கி நிற்கிறது.

மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபை தேர்தல்கள் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த 3 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அரசியல் கட்சிகளும் தேர்தல் களப் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டன.

Maharashtra Assembly Election 2024 BJP

கள நிலவரத்தில் மாற்றம்: மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 145 இடங்கள். 2019-ம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலின் போது இருந்த களநிலைமைக்கும் தற்போதைய சூழலுக்கும் அடிப்படையிலேயே பெரும் மாற்றம் இருக்கிறது. 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக மற்றும் ஒருங்கிணைந்த சிவசேனா கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தன.

2019 தேர்தல் களம்: 2019-ம் ஆண்டு மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியில் பாஜக 152 இடங்களிலும் ஒருங்கிணைந்த சிவசேனா 124 இடங்களிலும் போட்டியிட்டன. எஞ்சிய 12 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இதர கட்சிகள் களம் கண்டன. இந்த 12 இடங்களிலும் பாஜகவின் தாமரை சின்னத்தில் அந்த கட்சிகள் போட்டியிட்டதால் பாஜக போட்டியிட்ட இடங்கள் 164 ஆகும்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் 125 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் 125 இடங்களிலும் போட்டியிட்டன. இந்தக் கூட்டணியின் இதர கட்சிகள் 38 இடங்களில் களம் கண்டன.

2019 தேர்தல் முடிவுகள் என்ன?: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக போட்டியிட்ட 164 இடங்களில் 105-ல் வெற்றி பெற்றது. ஒருங்கிணைந்த சிவசேனா 56 இடங்களில் வென்றது. பாஜகவின் வாக்கு சதவீதம் 36.6%; சிவசேனாவின் வாக்கு சதவீதம் 19.44%. தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் ( 18.75%) காங்கிரஸ் 44 இடங்களிலும்(15.28%) வெற்றி பெற்றிருந்தன.

உச்சகட்ட அரசியல் குழப்பம்: 2019-ல் மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் இருந்தன. ஆனால் முதல்வராக எந்த கட்சியைச் சேர்ந்தவர் பதவி வகிப்பது என்பதில் இழுபறி ஏற்பட்டது. இதனால் அரசியல் குழப்பம் தொடர்ந்து கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் ஜனாதிபதி ஆட்சியும் அமலானது. அப்போது பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் கை கோர்க்க சிவசேனா பேச்சுவார்த்தை நடத்த பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் நிலைமையும் ஏற்பட்டது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரேதான் முதல்வர் எனவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

பரபர நாடகங்கள்: அப்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகையில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார் அப்போதைய ஆளுநர் கோஷ்யாரி. அத்துடன் நிற்கவில்லை. சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றதுதான் ஹைலைட்டாக இருந்தது. இதனை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் ஏற்க மறுத்தார். இதனால் முதல் முறையாக தேசியவாத காங்கிரஸ் 2019ல் பிளவுபட்டது.

முடிவுக்கு வந்த அதிகார வேட்டை: இந்த அசாதாரண சூழ்நிலையில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கட்சிகள் உச்சநீதிமன்றத்தை நாடின. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான புதிய பாஜக அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது. ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்கவே முடியாது என தெரிந்ததால் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோர் சொற்ப மணிநேரங்களிலேயே தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

புதிய கூட்டணி ஆட்சி: இதன் பின்னர் சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் முறைப்படி ஆட்சி அமைத்தது. முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி வகித்தார். பாஜகவுடன் ஓடிப்போன அஜித் பவார் மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார். அப்போதும் துணை முதல்வரானார் அஜித்பவார்.

உடைத்து விளையாடிய பாஜக: ஆனால் பாஜக சும்மா இருக்கவே இல்லை. சிவசேனாவை இரண்டாக உடைத்து ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனா என அங்கீகாரம் பெற வைத்தது. அதேபோல தேசியவாத காங்கிரஸையும் இரண்டாக உடைத்து அஜித்பவார் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என அங்கீகாரம் பெற வைத்தது.

பெரும் பின்னடைவு: அண்மையில் முடிவடைந்த லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும் பின்னடைவை எதிர்கொண்டது. மகாராஷ்டிராவில் மொத்தம் 48 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் 13 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக 9; உத்தவ் தாக்கரே சிவசேனா 9; சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 8; ஏக்நாத் ஷிண்டே சிவசேனா7; அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 1 இடத்திலும் வென்றன. இது பாஜக தரப்புக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.

அக்டோபரில் சட்டசபை தேர்தல்: இத்தகைய பின்னணியில்தான் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகள் இப்போதே பாஜகவுக்கு குடைச்சல் கொடுக்கத் தொடங்கிவிட்டன.

அடம் பிடிக்கும் பங்காளி கட்சிகள்: ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா தங்களுக்கு 100 சட்டசபை தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்கிறது; அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் 90 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்கிறது. இந்த இரு கட்சிகளுக்குமே 200 இடங்களை ஒதுக்கிவிட்டால் பாஜக 100க்கும் குறைவான இடங்களில்தான் போட்டியிட முடியும். சட்டசபை தேர்தல் களப் பணி தொடங்கும்பொதே 'பங்காளி' கட்சிகள் பந்தாடவும் தொடங்கிவிட்டதால் பாஜக பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+