ஒற்றைப் பனைமரம்
வெட்ட வெளியிடை
ஒற்றைப் பனைமரமே..!
உனக்குத்தான் எத்தனை முகங்கள்.
விதையாய்
வடலியாய்
பனை மரமாய்
வளர்ந்த உன்
வளர்ச்சிக்கு மேலாய்
என் வாழ்வுடன்
எப்படி ஒன்றிப்போனாய்.
சிறு வயதில்
உன்னடியில்
ஓடிப்பிடித்து விளையாடியதும்
பனம்பழம் பொறுக்கியதும்
உனது கரங்கள்
விறகாய் எரிந்ததுமாய்
ஒரு பாச முகம்.
எங்கள் பாதுகாப்புக்கு
உனது சகோதரர்களுடன்
அரண் செய்த காலம்போய்
அவர்களை வெட்டியெடுத்து
அரண்செய்த காலத்திலும்
நிமிர்ந்து நின்றாயே
அந்த ஒரு வீர முகம்.
ஊரை விட்டு
நாங்களெல்லாம்
ஓடிப்போன ஓரிரவிலும்
எங்களுடன் ஓடிவராமல்
மண்ணொடு மண்ணாய் நின்றாயே.
மண்பற்று நிறைந்த முகத்துடன்;
நாங்களெல்லாம்
திரும்ப வந்தபோது
உனது சகோதரர்களை
காவலரண்களில் கண்டோமே
அவர்களுக்குக் காவலாய்;
அந்தவொரு
துரோக முகம்.
எங்கோ ஒருவீட்டில்
விழவிருந்த
ஷெல்லை
உன் தலையில் தாங்கி
முண்டமாக நிற்கையிலும்
நிமிர்ந்திருக்கும்
தியாக முகம்.
இன்றோ
தனியனாய்
உன்னடியில்
நிற்கும் போதுதான்
எனக்கும் தோன்றுகிறது
எனக்கும் உனக்கும்
எவ்வளவு ஒற்றுமை பார்.
நீயும் நானும்
இவ்வளவு முகங்களுடன்
ஒற்றைப் பனைமரங்களாய்...!












Click it and Unblock the Notifications