'அதுவே கடவுள்'...
எங்கும் நிறைந்திருக்கிறது
வார்த்தைகள்-தனக்கானவொன்றை
தேடிப்பிடித்து அனிந்து வெளிவரும்
தானே வளரும் ஓர் புதர்ச்செடியாய்....
என் கவிதைகள்
நீண்ட பெருமூச்சினூடே
பெரும்பணக்காரியாகிவிடும்
நிச்சயமில்லா கனவுகளோடே
வெண்டையும் கத்தரியும் தெருவெங்கும் கூவிப்போகிறாள்
கூன் கிழவி
எல்லா வெண்டையையும் முத்தாலாவென
ஒடித்துப் பார்த்துவிட்டு விலைபேசும்
ஏழையாகிவிட பயப்படுமொரு கூட்டம்...
எல்லாரும் பயப்படும்படி
நடு நிசியில் ஜக்கம்மாவின் துணையோடு
நல்லகாலம் பிறக்க வைக்கும் குடுகுடுப்பை
மழைக்கு ஒதுங்க இடமின்றி
பிய்ந்த சாக்குத்துணி போர்த்தி காடேகுவான்
ஜக்கம்மாவைத்தேடி......
இந்தமுறையேனும் கண்ணைத்திருடும்
அல்வாவையும் கோபுரங்களென அடுக்கிவைத்த
மிட்டாய்களையும் வாங்கி வரவேண்டும்...
திருவிழாவில் நுழையுமுன்னான முடிவினில்
கரகாட்டக்காரியின் பரிசாய் போன ரொக்கம் போக
இம்முறையும் குண்டுபலூன் வாங்கிப்போனான்....
மகள் உறங்கிக் கொண்டிருந்தாள்
கனவினில் இனிப்பை சுவைத்து...
தடுமாறும் எண்ணஓட்டம்
கால் நனைக்க பயந்து
அலைபார்த்து நின்றிருந்தேன்
ஊழிபெருஞ்சுழி தொடர
ஆழிப்பேரலை அடித்துப்போனதில்
நீயென்ன நானென்ன
இயற்கையே
ஆக்கவும் காக்கவும் மேலும் அழிக்கவும் செய்யுமாயின்
அதுவே கடவுள்...
-ரிஷி சேது ( [email protected] )