காவிரி தாயே என்னை மன்னிப்பாயா? காவிரி குறித்து நடிகர் விவேக் உருக்கமான கவிதை
காவிரி நதி குறித்து நடிகர் விவேக் கவிதை ஒன்றினை ட்விட் செய்துள்ளார்.
சென்னை: காவிரி நதியுடன் பேசுவதுபோல நடிகர் விவேக் தனது ட்விட்டர் பேக்கத்தில் கவிதை ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் பல இடங்களில் பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதேபோல தமிழ் திரையுலகினை பொறுத்தவரை மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மவுன விரத போராட்டம் நடத்தினர். நேற்று ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக்கூடாது என்று அண்ணாசாலையில் திரைத்துறை இயக்குனர்கள், பிரபலங்கள் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் காவிரி நதி குறித்து நடிகர் விவேக் பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த கவிதையானரது, விவேக் காவிரி நதியுடன் பேசுவது போலவே உரையாடலாக அமைந்திருக்கிறது.
@dinathanthi @dinamalarweb @manam_online @polimernews @PTTVOnlineNews Me n Mother Kaveri talking with each other! pic.twitter.com/kIxxfDwHjP
— Vivekh actor (@Actor_Vivek) April 10, 2018
இதோ அந்த உரையாடல் பதிவு:
நான்: காவிரித் தாயே! காவிரி தாயே!
கன்னட மண்ணில் பூ விரித்தாயே! - ஏன்
தமிழ்மகன் கேட்டால் கை விரித்தாயே?
காவிரி: முத்து மகனே! முட்டாள் மகனே!
கைவிட்டது நானா நீயா?
செழித்துப் பாய்ந்தேன்; நீ சேமித்தாயா?
ஆழியில் கலக்கும்முன் அணை செய்தாயா?
நான்: இனி நான் என்ன செய்ய? சொல்வாயா?
காவிரி: சினிமா பார்த்து சிரி
கிரிக்கட், பாப்கார்ன் கொறி!
மழுங்கி போனதே உன் வெறி
நான்: தாயே என்னை மன்னிப்பாயா?
காவிரி: எழுந்து நில்! தயக்கம் கொல்!
இரைப்பை நிரப்புவது கலப்பை!
இதை உணராதவன் வெறும் தோல் பை
நான் உனக்கும் அன்னை
கன்னடர் உந்தன் உடன் பிறப்பு
காவிரியும் உனது நீர்ப் பரப்பு
இதை உரக்கச் சொல்; உன் உரிமை சொல்
இவ்வாறு ட்வீட் செய்துள்ளார் விவேக்.