உனக்கென ஓர் கவிதை...!!!
- சிவசங்கரி கலியமூர்த்தி
உள்ளத்தையே உன்னிடம்
ஒப்படைத்து விட்டேனே...
உணர்ந்துமா உனக்கென
ஓர் கவிதையை கேட்கிறாய்...?
உயிரையே உனக்காய்
தரத் துணிந்தேனே...
அறிந்துமா என்னை
சோதித்து பார்க்கிறாய்...?

வறண்ட நெஞ்சத்தில்
வான்மழையாய் விழுந்தாயடி...
இருண்ட இதயத்தில்
எழில்மதியாய் நுழைந்தாயடி...
கருவண்டு விழியாலே
கணந்தோறும் வதைத்தாயடி...
கற்கண்டு சிரிப்பாலே
கணையொன்றை தொடுத்தாயடி...
கனவை வருடி
கற்பனையை திருடி
ஒற்றை முத்தத்தால்
உலகையே கொடுத்தாயடி...
மங்கை உனைக்கண்டு
மதியிழக்க வைத்தாயடி...
மன்னன் எனைஉன்முன்
மண்டியிட செய்தாயடி...
சுட்டெரிக்கும் சூரியனையும்
கட்டியிழுக்கும் செந்தாமரையே...
முற்றும் துறந்த முனிவனையும்
பித்தேற செய்யும் மோகினியே...
அருந்தமிழ் வளர்த்த
அகத்தியனும் கூட உன்
அழகை பாட
அரும்பாடு படுவானடி...
முத்தமிழ் கடவுள்
முருகனும் உன்னழகை
முழுதாய் வர்ணிக்க
முடியாமல் தோற்பானடி...
உயிர் ஓவியமே
ஒப்பில்லா காவியமே...
உன்னழகை பாடிட
என்தமிழில் மொழியேதடி?
பெண்மையின் இலக்கணமே...
பிரம்மனின் தலைக்கணமே...
உனக்கென ஓர் கவிதையை
எப்படி படைப்பேனடி...?












Click it and Unblock the Notifications