அஞ்சு நிமிஷம்
பார்க் பெஞ்சில் உட்கார்ந்து ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்த நான்... பக்கத்து பெஞ்சில் உட்காந்திருந்தவரை அப்போது தான்கவனித்தேன்.
இவர எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே.. ஆனா சட்டுன்னு ஞாபகத்து வரல.. எங்க பாத்துருக்கோம்...
மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும் போதே... அவர் யாரையோ பார்த்து கூப்பிட்டார்.
ஜான்... விளையாடினது போதும்.. நேரமாச்சு வா... வூட்டுக்கு போகலாம்.
நீல நிற டி ஷர்ட்டில் ஓடி வந்தான் ஒரு சுட்டிப் பையன்.
அப்பா அஞ்சே அஞ்சு நிமிஷம்பா... வெளையாண்டுட்டு வந்துர்ரேம்பா.
சரி போய்ட்டு வா என்றார் அவர்.
நேரம் ஓடியது...
கால் மணி நேரம் கழித்து மீண்டும் கூப்பிட்டார் அவர்.
ஜான்... ரொம்ப நேரமாச்சு... இருட்டிப் போச்சு பார்... வா வூட்டுக்குப் போகலாம்..
ஓடி வந்தான் பையன்.
அப்பா...ப்பா... ப்ளீஸ்... இன்னொரு அஞ்சே அஞ்சு நிமிஷம்பா... கொஞ்சூண்டு விளையாடிட்டு வந்திர்ரேம்ப்பா ப்ளீஸ்... பா..
சரி சீக்கிரமா வா. என்றார் அப்பா அவரை நோக்கிப் போனேன் நான். என்னைப் பார்த்தவுடன், மேடம் நீங்க மிஸ்.கோமதிரத்தினம் தானே. என்றார்.
ஆமா சார்... நீங்க... மிஸ்டர் சந்திரன் தானே...
ஆமா மேடம்
எப்படியிருக்கீங்க..? என்று தொடங்கி எல்லா விசாரிப்புகளும் முடிந்த பிறகு என் மனதுக்குள் அரித்துக் கொண்டிருந்த விசயத்தைஅவரிடம் கேட்டேன்
பையன் ஒங்க பையனா சார்?
ஆமா மேடம்
பரவாயில்லையே... பொறுமையான அப்பாவா இருக்கீங்களே... பையன் அஞ்சு நிமிஷம், அஞ்சு நிமிஷம்னு எவ்வளவு தடவகேட்டாலும் பொறுமையா விளையாட அனுமதிச்சி, அதை ரசிச்சி வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்களே...
அவர் கண்கள் லேசாக கலங்கியது.
என்னோட மூத்த பையனுக்கு ஆறு வயசு இருக்கும். போன வருஷம் இந்த பக்கத்து ரோட்டுலதான் ஒரு குடிகாரன் ஓட்டுனலாரியில அடிபட்டு செத்துட்டான். அவன இழந்த பிறகுதான் அவன் கூட நான் சந்தோஷமா நேரம் செலவழிச்சதே கிடையா தேங்குறகுற்றமும், உறுத்தலும் என் மனசுக்குள்ள உரச்சுது.
ஒரு அஞ்சு நிமிஷம் அவன் கூட சந்தோஷமா செலவழிக்க இப்ப வரம் கிடைச்சா கூட அதுக்கு விலையா எத வேணும்னாலும் தரதயாரா இருக்கேன். ஆனா அது இப்ப முடியுமா? அது மட்டும் இல்ல மேடம்... சின்னப் புள்ளைங்க இந்த வயசுலதான் வெளையாடஆசப்படுவாங்க.
எத்தன தடவதான் அஞ்சு நிமிஷம்னு கேட்கப் போறான். மிஞ்சிப் போனா நாலு அல்லது அஞ்சு தடவ கேப்பானா?அதுக்கப்புறம்...? அவனுக்கே... இனிமேலும் டயம் கேக்குறது தப்புன்னு தோணும். அதோட நம்ம அப்பா நாம எதுகேட்டாலும் கோபப்படாம ஓ.கே சொல்வார்ங்கற எண்ணம் அவன் மனசுல விழுந்ததாத்தான் எதிர்காலத்துல எதையும்மறைக்காம பெற்றோர் கிட்ட சொல்லணும், அனுமதி கேட்கணுங்கற எண்ணம் வரும்... என்றார்
வாழ்க்கை என்பது ஓட்டப் பந்தயம் அல்ல. வாழ்வில் எந்தெந்த விசயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதைதெரிந்து கொள்ள வேண்டும். நாம எவ்வளவுதான் பிஸியாக இருந்தாலும் நம்மை நேசிக்கும் அல்லது நாம் நேசிக்கும் நபருக்காககூடுதலா ஒரு அஞ்சு நிமிஷத்தை செலவிடுவதால் என்ன குறைந்து போய் விடும்.
ஒரு முறை இழந்து விட்டால் திரும்பப் பெற முடியாதது நேரம் மட்டுமல்ல... அன்பும் தான் என்பதை உணரத் தொடங்கிய போது...
அப்ப... நான் கெளம்புறேன் என்று அவர் சொல்ல ஒரு கையால் தன் அப்பாவை பிடித்துக் கொண்டு மறு கையால் எனக்கு டாட்டாசொல்லி-க் கொண்டே தத்தி, தத்தி நடை போட்டான் அந்தச் சுட்டிப் பையன்.
- மன்னை பாஸ்கர்([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications