ஞாபகம்
சற்றுமுன் பெய்த மழையால் மண்சாலை சேறும் சகதியுமாக இருந்தது. அவசரமாக செல்ல வேண்டி இருந்த போதும்பூங்கொடி நிதானமாக தன் கையால் புடவைத் தலைப்பைச் சற்று கணுக்காலுக்கு மேல் தூக்கிக்கொண்டு நடந்தாள்.மாலை மூன்று மணிக்கு வந்துவிடுவதாக செம்பட்டி பஞ்சாயத்துத் தலைவருக்குத் தகவல் அனுப்பியிருந்தாள்.அவள் மண்சாலையில் நடந்து செல்ல எப்படியும் இன்னும் 15 நிமிடங்கள் ஆகலாம். அதற்குள்ளாக அவளைப்பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
பூங்கொடி ஈரோடு மாவட்டம் காங்கேயத்திற்கு அருகில் இருக்கும் சிவன்மலை கோயிலுக்கு அருகில் பூக்கடைவைத்திருக்கும் தனத்தம்மாளுக்கு மகள். இவளது தந்தை காயாம்பூ கடந்த ஆண்டுதான் மாரடைப்பால்மரணமடைந்தார். அதன்பிறகு வயதுவந்த பெண்ணை படிக்க வைக்க தனத்தம்மாவால் முடியவில்லை. டிகிரிவரைப் படித்த பூங்கொடியை அருகில் இருக்கும் ஒரு தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் வேலைக்குச்சேர்த்துவிட்டாள். அப்பள்ளியின் முதல்வர் கோயிலுக்கு வரும்போது தனத்தம்மாளிடந்தான் பூ வாங்குவார்.
மிகவும் பொறுப்புள்ள ஆசிரியையாக பூங்கொடி இருந்ததால் அவளிடம் பல பொறுப்புகள் கொடுக்கப்பட்டது.மாணவர்களுக்குப் புதுமையான சிந்திக்கத்தக்க கதைகளை உருவாக்கி கதை சொல்லும் திறன் வகுப்பு என்றுஒன்றை நடத்த வேண்டும் என முதல்வர் கூறியிருந்தார். இப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட பூங்கொடிக்குஅப்பொழுதுதான் தன் தந்தையாரின் தந்தையார் வைத்திருந்த ஓலைச்சுவடிகளும் எப்பொழுதும் அதை படித்துக்கொண்டிருந்த தன் தந்தையார் பற்றியும் நினைவுக்கு வந்தது.
அன்றே பழைய சுரைக்குடுக்கைக்குள் இருந்த ஓலைச்சுவடிகளை எடுத்தாள். தூசும் தும்பட்டையுமாக இருந்தஅவற்றை விளக்கு வெளிச்சத்தில் உற்றுப் பார்த்தாள். என்ன ஆச்சரியம். அதில் அவள் முகம் தெரிந்தது. அத்துடன்நின்றுவிடாமல் அதுவும் பேசத் தொடங்கியது. பூங்கொடி, நான் கொள்ளுப்பாட்டி. உன் கண்களுக்கு மட்டுமேதெரிவேன் நான். நீ ஒரு அற்புத பிறவி. உன்னுடன் இப்பிறப்பு முடிவடைகிறது. அதற்குமுன் நீ சில காரியங்கள்செய்ய வேண்டும். இதற்கு முந்திய பிறவியில் நீ செம்பட்டியில் தற்போது பஞ்சாயத்து தலைவராக இருக்கும்நஞ்சப்ப கவுண்டரைச் சந்திக்க வேண்டும். அவர் தாயாராக நீ முற்பிறவியில் வாழ்ந்திருக்கிறாய். இதே போன்றஓலைச்சுவடி ஒன்று அவர் வீட்டில் இருக்கிறது. அதை நீ தொட்டால் அதுவும் உன்னுடன் பேசும். அதற்குப் பிறகுநடக்கவேண்டியதை நீயே அறிந்து கொள்வாய் என்ற அந்தப் பெண் தன்பெயரை கோதைநாச்சி என்றுகூறிக்கொண்டாள்.
எப்படியோ அந்த மண்சாலையில் தட்டுத் தடுமாறி ஊர் எல்லைக்குள் வந்துவிட்டாள். எதிரே வந்தவண்டிக்காரரிடம் விசாரித்துக் கொண்டு அவ்வீட்டிற்குச் சென்றாள். என்ன விந்தை. அவ்வீட்டின் முன்புறச் சுவரில்இவள் முக அமைப்பு கொண்ட 60 வயது மதிக்கத்தக்க ஓர் அம்மாவின் புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. வீட்டின்முற்றத்து அருகே ஈசி சேரில் உட்கார்ந்திருந்த நஞ்சப்ப கவுண்டர் அப்படியே ஒரு நொடி விக்கித்து விட்டார். தன்அம்மா நேரில் திரும்ப வந்தது போன்ற பிரமையா அல்லது உண்மையா சற்றுக் குழம்பித்தான் போனார். ஐயாஎன்று அவரது கலக்கத்தைக் கலைத்தாள்.
நீ தான் பூங்கொடியா அம்மா ?
ஆம் ஐயா. தங்கள் வீட்டிற்கு வருவதை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். என்னை வைத்து ஏதோ ஒரு முக்கியகாரியம் செய்ய முன்னோர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். அதை உங்களுக்குப் பிறகு விளக்குகிறேன். தற்சமயம்தங்கள் வீட்டில் பாதுகாக்கும் மிகப் பழைய ஓலைச்சுவடியை என்னிடம் தரவேண்டும்.
ஏன் எதற்கு என்று கேட்காமல், என் அம்மா கேட்டு நான் இல்லை என்றா சொல்லப் போகிறேன் என்றுதனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டு ஓடிச் சென்று எடுத்துக் கொடுத்தார்.
பூங்கொடி அதை ஆவலுடன் பிரித்துப் பார்த்தாள். அதில் முன்பு பார்த்த பெண் உருவம் இல்லை. அது ஏதோவரைபடம் போல இருந்தது. வரைபடத்திற்கு மேல் சிவன்மலை பூங்கொடி என்று இருந்தது. பரபரப்புடன் உற்றுநோக்கினாள். அந்த வரைபடம் தஞ்சாவூரையும் அதற்கு அருகில் புகழ்பெற்ற வெண்ணிப் பரந்தலை என்றும்அவ்வூரில் பழுவேட்டரையன் என்பான் வீட்டு எண்ணும் காணப்பட்டது. உடனே நஞ்சப்பக் கவுண்டரிடம்சொல்லிக் கொண்டு தம் தலைமீது நிறைய பொறுப்புகள் வந்து விழுந்திருப்பதை உணர்ந்தவளாய் விரைந்தாள்.
வெண்ணிப்பரந்தலை தற்சமயம் கோயில்வெண்ணி என்று வழங்கப்படுகிறது. மிகச் சுலபமாக பழுவேட்டரையன்வீட்டிற்கு வந்து விட்டாள். அவள் எங்குமே தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ள அவசியமிருக்கவில்லை. அவள்வீட்டிற்குள் நுழையும் போதே எண்பது வயது மதிக்கத்தக்க கிழவி ஒருத்தி இவளைப் பார்த்து, வாடியம்மா சோலை!இங்கே வர இவ்வளவு நாளாச்சா உனக்கு. ஏற்கனவே நன்கு பழகியவள் போல பேசினாள். பேச்சுக்குரல் கேட்டுபழுவேட்டரையர் வெளியில் வந்தார். அவரைப் பார்த்த பூங்கொடி அதிர்ச்சியிலிருந்து மீள சற்றுத் திணறித்தான்போனாள். பூங்கொடி தன் அப்பாவை இங்கே பார்ப்போம் என்று சற்றும் எதிர்பார்க்க வில்லை. தொடரும் என்றுஎழுதிவிட்டு நிஜந்தன் கழுத்தை நிமிர்த்தினான். எதிரே மனைவி லதா, எழுதி கிழிச்சது போதும் , பாப்பா அழுவுறாபோய் பால் பவுடர் வாங்கிட்டு வாங்க, ஏனோ பூங்கொடி ஒருதரம் நினைவில் வந்து போனாள்.
முற்றும்
-பொன்னாப்பூர் அர்ச்சுனன், சிங்கப்பூர்([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.