ஆடி முளைக்கொட்டு திருவிழா 2020: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆடி முளைக்கொட்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. பக்தர்கள் யாரும் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
மதுரை: உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வரலாற்று சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெற்றதை தொடர்ந்து மற்றொரு முக்கிய விழாவான ஆடிமுளைகொட்டு விழாவும் பக்தர்கள் இன்றி நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை தொடங்கி பங்குனி வரை விழாக்கள் நடைபெறும். ஆடி மாதம் நடைபெறும் முளைக்கொட்டு உற்சவ விழா திங்கட்கிழமை இரவு வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து செவ்வாய்கிழமை மீனாட்சி அம்மன் சன்னதியில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
ஆடிப்பட்டம் தேடி விதை என்ற முன்னோர்களின் வாக்கின்படி, ஆடி மாதம் விதை விதைத்து நாற்று நட்டு விவசாய பணிகளை மேற்கொள்ளவும், தங்கள் நிலங்களில் பயிர் விளைச்சல் அதிகரிக்க வேண்டியும் இறைவனை வழிபாடு செய்வது வழக்கம். இந்த ஆண்டு ஆடி முளைக்கொட்டு திருவிழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி செவ்வாய்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோவிலுக்குள் புகுந்த ஆமை.. அர்ச்சகர்கள் ஹேப்பி அண்ணாச்சி.. இனி கொரோனா அழிஞ்சுருமாம்!
இன்று காலையில் அம்மன் சன்னதி முன்பு நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வின் போது மீனாட்சி அம்மன் பச்சைப்பட்டு உடுத்தி கொடி மரத்தின் முன்பு எழுந்தருளி அருள்பாலித்தார். இன்று முதல் வரும் 30ம் தேதி வரை இவ்விழா நடைபெறும் நிலையில் கொரோனோ தடுப்பு நடவடிக்கையாக விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூரம் வரும் 24ம் தேதி அன்று காலை 10 மணியளவில் அம்மன் கோயில் மகாமண்டபம் பள்ளியறை முன்பு அம்மனுக்கு ஏற்றி இறக்குதல் வைபவம் பக்தர்கள் இன்றி நடைபெற உள்ளது. தினமும் ஆடிவீதியில் காலை, மாலை உலா வருவதற்கு பதில் அம்மன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் காலை மற்றும் மாலை வேலைகளில் புறப்பாடு நடைபெறும் எனவும் மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.