வைகையில வந்த வெள்ளம்... மதுரையில் களைகட்டிய ஆடிப்பெருக்கு - உற்சாக கொண்டாட்டம்
ஆடிப்பெருக்கு விழா மதுரை வைகை ஆற்றில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. புதுமணத்தம்பதியர் தாலி பெருக்கிப் போட்டு வழிபட்டனர்.
மதுரை: வைகை ஆற்றில் புது வெள்ளம் பெருக்கெடுத்து வந்ததால் மதுரை மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா களைகட்டியது. மதுரை ஆற்றங்கரையில் குவிந்த புதுமணத்தம்பதியர் தாலி பெருக்கி போட்டு பூ,பழங்கள் வைத்து வைகை அன்னையை வழிபட்டனர்.
ஆடி மாதம் 18ஆம் நாள் ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் எந்த நல்ல காரியங்கள் தொடங்கினாலும் சிறப்பானதாகவும், செல்வம் பெருகும் என்பது ஐதீகம். ஆற்றங்கரைகளில் கூடும் மக்கள் உணவுகளை படைத்தும் பூ, பழங்கள், வெற்றிலை பாக்கு வைத்து வழிபடுவது வழக்கம். புதுமண தம்பதிகள் தாலி மாற்றி ஆடிப்பெருக்கை கொண்டாடுவார்கள்.
மதுரை மாவட்டத்தில் நீராதாரமாக உள்ள வைகை ஆற்றில் இந்த ஆண்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழை வைகை அணை நிரம்பியுள்ளது. தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதன் காரணமாக தற்போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

ஆடிப்பெருக்கான இன்று மதுரை நகரில் உள்ள ஏ.வி. மேம்பாலம் வைகை ஆற்றங்கரையில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வழிபட்டனர். புதுமண தம்பதிகள் தாலி மாற்றி வழிபட்டனர். இந்த ஆண்டு வைகை ஆற்றில் தண்ணீர் செல்வதால் வழக்கத்தை விட ஆடிப்பெருக்கு நிகழ்ச்சி களைகட்டியது. பலர் தங்களது குழந்தைகளுக்கு மொட்டையடித்து வழிபட்டனர்.
இதேபோல் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள நீர்நிலைகளிலும் ஆடிப்பெருக்கு விமரிசையாக நடைபெற்றது. மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உள்ளிட்ட 23 கோவில்கள் மூடப்பட்டதால் ஆடிப்பெருக்கான இன்று வெறிச்சோடி காணப்பட்டது. கோவில் நுழைவு வாயில் முன்பு ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். இதே போல புதுக்கோட்டை பல்லவன் குளக்கரையில் ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
கோவையில் வெறிச்சோடியது
ஆடிப்பெருக்கு நாளில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் பேரூர் படித்துறையில் கூடி வழிபடுவார்கள். புதுமணத் தம்பதிகள் அதிகளவில் கூடி தாலி மாற்றி கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பேரூர் படித்துறையில் ஆடிப்பெருக்கு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டும் கொரோனா தொற்று படிப்படியாக உயரத் தொடங்கியதால் கோவில்களில் சாமி தரிசனம் செய்யவும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடவும் தடை விதிக்கப்பட்டது.
கோவையில் உள்ள மருதமலை சுப்பிர மணிய சுவாமி, பேரூர் பட்டீஸ்வரர், ஆனைமலை மாசாணியம்மன், மேட்டுப் பாளையம் வனபத்ர காளிய ம்மன் கோவில் உள்ளிட்ட 4 முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்யவும், ஆற்றங்கரையோரங்களில் திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள் ளது.

பேரூர் படித்துறையில் ஆற்றிற்கு செல்லும் அனைத்து வழிகளும் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை ஒரு சில பக்தர்கள் தடையையும் மீறி பேரூர் படித்துறைக்கு வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் படித்துறையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுத்து விட்டு தரிசனம் செய்தனர். ரோந்து பணியில் இருந்த போலீசார் படித்துறைக்கு வந்தவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் நொய்யல் ஆற்றின் படித்துறை ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. பக்தர்கள் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் வாசலில் நின்று சாமியை தரிசனம் செய்து விட்டு திரும்பி சென்றனர்.












Click it and Unblock the Notifications