திருவண்ணாமலை மகாதீபத் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை - கிரிவலம் வரவும் அனுமதியில்லை
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் மலையேறி சென்று மகா தீபத்தை தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மகா தீபத்தை காண திருவண்ணாமலை நகரில் 10 இடங்களில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட உள்ளன.
மலையே தீபமாக காட்சித்தரும் ஆலயம் திருவண்ணாமலை. சிவபெருமானின் பஞ்ச பூதத்தலங்களில் அக்னித்தலமாக போற்றப்படுகிறது. மலையே சிவமாக வணங்கப்படுகிறது. இங்கு தினசரியும் பல்லாயிரக்கணக்கானோர் கிரிவலம் வந்து இறைவனை வணங்குவது வழக்கம்.
இந்த ஆலயத்தில் பல திருவிழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதம் 15 நாட்கள் நடைபெறும் மகாதீபத்திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு தீபத்திருவிழா கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஜெய்பீம்: போராடிய வன்னியர்களைக் காட்டாமல் விட்டது தவறுதான்-ஆனாலும் சூர்யாவுக்கு ஆதரவு: கவிஞர் தாமரை
பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டை போலவே தற்போதும் மாடவீதிகளில் சுவாமி உற்சவ விழா நடைபெற்று வருகின்றன. இந்த விழா நாட்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அனுமதி சீட்டு பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும், கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் போட்டதற்கான சான்று அல்லது 72 மணி நேரத்திற்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்த நெகட்டிவ் சான்றிதழுடன் வர வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
காலையில் பரணி தீபம்
கார்த்திகை தீப திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிகாலையில் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலையில் கோவில் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் வைபவம் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக மலையேறி சென்று மகா தீபத்தை தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
பக்தர்களுக்குக் கட்டுப்பாடு
மலை மீது ஏற கோயில் ஊழியர்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. அண்ணாமலையார் கோயில் உபயதாரர்கள், கட்டளைதாரர்கள், விஐபி.க்கள் மட்டும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். அதன்படி, புதன்கிழமை மதியம் ஒரு மணி முதல் 20ம் தேதி வரை திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மலை ஏறும் வழிகளில் வனத்துறையினருடன் இணைந்து கமாண்டோ படை வீர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
உள்ளூர் பேருந்துகளுக்கு மட்டும் அனுமதி
பக்தர்கள் வருகையை கட்டுப்படுத்தும் விதமாக அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு செல்லக் கூடிய ஒன்பது பிரதான சாலைகளிலும் தற்காலிக பேருந்து நிலையங்களை அமைத்து, வாகனங்களில் வரும் பக்தர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகராட்சிக்குள் உள்ளூர் முகவரியில் உள்ள வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். தீபத் திருவிழாவிற்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இந்த ஆண்டு இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து போக்குவரத்து
இந்நிலையில், திருவண்ணாமலைக்கு சென்னை, ஈரோடு உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் எண்ணிக்கையை 50 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் விடுத்த கோரிக்கையை போக்குவரத்துதுறை ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால், திருவண்ணாமலைக்கு புதன்கிழமை மதியம் ஒரு மணி முதல் 20ம் தேதி வரை வெளியூர்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் சேவை குறைக்கப்பட உள்ளன. இதேபோன்று திருவண்ணாமலைக்கு ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து 50 சதவிகித பேருந்துகள் மட்டும் இயக்கப்பட உள்ளன.
காவல்துறை பாதுகாப்பு
தீபத் திருவிழாவன்று சுமார் 25 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வரும் நிலையில், இந்த ஆண்டு பக்தர்கள் வருகையை தடுத்து நிறுத்துவதற்காக வடக்கு மண்டல ஐஜி தலைமையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மகா தீபத்தை காண திருவண்ணாமலை நகரில் 10 இடங்களில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட உள்ளன.