திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பல மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்... மீண்டும் இலவச தரிசன டோக்கன்
பக்தர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, ஒதுக்கப்பட்ட நேரத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்க தேவஸ்தான அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருப்பதி: திருமலையில் இலவச தரிசன வரிசையில் தினமும் 8 மணிநேரம் காத்திருந்து திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க வேண்டியிருப்பதால், பக்தர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, ஒதுக்கப்பட்ட நேரத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்க தேவஸ்தான அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா நோய்த்தொற்று அபாயம் நீங்கியதை அடுத்து, திருப்பதி ஏழுமலையான தரிசிக்க நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு படையெடுத்து வருகின்றனர். பக்தர்களின் வசதியை முன்னிட்டு 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது நாள்தோறும் எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கட்டண தரிசனத்திலும் இலவச தரிசன வரிசையிலும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பின்பு, இலவச தரிசனத்தில் நாளொன்றுக்கு நாற்பதாயிரம் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன.

இலவச தரிசன டிக்கெட்டுகள்
பக்தர்கள் இலவச தரிசன டிக்கெட்டுகளை அலிபிரி பூதேவி காம்ப்ளெக்ஸ், திருப்பதி ரயில் நிலையம் அருகிலுள்ள கோவிந்தராஜசாமி சத்திரம் மற்றும் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாஸ் ஆகிய மூன்று இடங்களில் பெற்றுச் சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தனர்.

பக்தர்கள் கூட்ட நெரிசல்
இந்நிலையில், கடந்த வாரம் ஏராளமான பக்தர்கள் இலவச தரிசன டோக்கன்களை வாங்க குவிந்ததால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு, நெரிசலில் பல பக்தர்கள் காயமடைந்தனர். இதனால், தேவஸ்தான அதிகாரிகள் இலவச தரிசன டோக்கன் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, பக்தர்களை நேரடியாகவே இலவச தரிசனத்திற்கு அனுப்பி வைத்தனர்.

10 மணி நேரம் காத்திருப்பு
தற்போது வரை பக்தர்கள் வைகுண்ட காம்ப்ளெக்ஸில் அமைந்துள்ள க்யூ வரிசையில் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு சென்று வருகின்றனர். தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க திருமலையில் குவிந்து வருகின்றனர். இதனால் தினமும் குறைந்தது 8 மணிநேரம் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

மீண்டும் இலவச தரிசன டோக்கன்
இந்நிலையில், திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலர் குமார் ரெட்டி நிரூபர்களிடம் கூறும்போது, ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, மீண்டும், நேரம் ஒதுக்கப்பட்ட இலவச தரிசன டோக்கன்களை வழங்க தேவஸ்தானம் பரிசீலனை செய்து வருகிறது. இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுவதால் நீண்ட நேரம் காத்திருக்காமல், பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வர ஏதுவாக இருக்கும், என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications