சந்திரன், சுக்கிரன்,குரு..3 கிரகங்கள் ஒரே நேர் கோட்டில்..யாருக்கு ஆபத்து..ஜோதிடர் சொல்வதென்ன
பல ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே காணக்கூடிய சந்திரனுடன் 3 கோள்கள் இணைந்த இந்த அதிசய நிகழ்வு குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது மகிழ்ச்சி வெளிப்படுத்தி இருந்தனர்.
மதுரை: ஒரு ராசியில் மூன்று கிரகங்கள் ஒன்றாக இணைவது ஒருவித யோகத்தை கொடுக்கும். அதுவும் குரு, சுக்கிரன் இணைந்து மீன ராசியில் பயணம் செய்யும் போது கூடவே சந்திரனும் இணைந்து குரு சந்திர யோகம், பிருகு மங்கல யோகத்தை கொடுத்திருக்கிறது. ஜோதிடப்படி இந்த கிரகங்களின் இணைவு குறித்து பேசப்படும் அதே நேரத்தில் வான மண்டலத்தில் மேற்கு திசையில் சந்திரன், குரு, சுக்கிரன் ஒரே நேர் கோட்டில் வந்த அரிய நிகழ்வினை பார்த்து பலரும் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த கிரகங்களின் சந்திப்பு யாருக்கு எந்த மாதிரியான பாதிப்பை தரும் என்று ஜோதிடர்கள் கருத்து கூறியுள்ளனர்.
நவ கிரகங்களில் சூரியன், சந்திரன்,குரு,சுக்கிரன்,புதன், சனி, செவ்வாய் ஆகிய கிரகங்களை வானில் பார்க்க முடியும். சூரிய உதயத்திற்கு முன்பு அதிகாலையில் விடி வெள்ளி தென்படும். மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சந்திரன், வியாழன், சுக்கிரன், செவ்வாய் கிரகங்களை கண்களால் பார்க்க முடியும்.
சில நேரங்களில் ஒரே நேர் கோட்டில் கிரகங்கள் வரிசை கட்டி நிற்கும். அப்படி ஒரு அதிசய நிகழ்வு கடந்த ஆண்டு ஏப்ரல், ஜூன் மாதங்களில் நிகழ்ந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சூரிய கிரகணம் நிகழ்ந்தது. அப்போது ஆறு கிரகங்கள் தனுசு ராசியில் சஞ்சரித்தன. சூரியன், சனி, கேது, குரு, புதன், சந்திரன் ஆகிய கிரகங்கள் தனுசு ராசியில் இணைந்திருக்க கூடவே சூரிய கிரகணமும் நிகழ்ந்தது. அது மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என்று ஜோதிடர்கள் அப்போது கணித்தனர். அது போலவே கொரோனா என்ற கொடிய வைரஸ் பிடியில் உலகம் சிக்கியது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுக்கிரன், குரு, சனி, செவ்வாய், சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் வரிசையாக நின்றதை பலரும் பார்த்து படம் பிடித்தனர். பொதுவாக இதுபோன்ற கிரகங்களின் சேர்க்கை அணிவகுப்பின் போது ஏதாவது ஒரு அதிசயம் நிகழும். சில நேரங்களில் நிலநடுக்கம், பூகம்பம், சுனாமி போன்ற மிகப்பெரிய இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டன. நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்று தமிழ் பஞ்சாங்கத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே ஒரே நேர் கோட்டில் குரு, சுக்கிரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் நின்றதை பலரம் கண்டு ரசித்தனர். பல ஆண்டுகளுக்கு ஒரு முறை சந்திரன், வியாழன், வெள்ளி ஆகிய 3 கோள்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை நடந்தது. இதனை பலரும் தங்களின் செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
ராசி மண்டலத்தில் தற்போது குருவும் சுக்கிரனும் மீன ராசியில் இணைந்துள்ளன. வான மண்டலத்தின் பிரகாசமான 2 கிரகங்கள்-குரு மற்றும் சுக்கிரன் ஆகியவை மார்ச் 1ஆம் தேதி மிக நெருக்கமாக இருக்கும். கடந்த சில வாரங்களாக நெருங்கி வருகின்றன. சூரிய அஸ்தமனத்திற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அடி வானத்தில் இதனை காண முடியும். இந்த நிகழ்வு வரும் பவுர்ணமி வரை அதாவது மார்ச் 7ஆம் தேதி வரை நீடிக்கும். இதனால் பல்வேறு நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
இந்த அரிய நிகழ்வு மூலம் மக்கள் சுபிட்சமான வாழ்வினை பெறுவார்கள். வானலாவிய புதிய கட்டிடங்கள் உருவாகும். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் தீரும். மாணவ, மாணவிகளின் கல்வி மேம்படும். புதிய போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும். ஆன்லைன் வியாபாரம் தொடர்ந்து சூடு பிடிக்கும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில் மிகப்பெரிய செல்வந்தர்கள் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு ஏழ்மை நிலையை அடையும் சூழ்நிலை உருவாகலாம். வாகன விபத்துக்கள் அதிகரிக்கும். வைரஸ் காய்ச்சல்கள் உருவாகும். இளம்வயது சிறுவர்களை நோய்கள் அதிகளவில் தாக்கும் என்றும் இந்த கிரகச்சேர்க்கையினால் ஏற்படும் தீமைகளை குறிப்பிட்டுள்ளனர்.
வானியல் மண்டலத்தில் சில அதிசயங்கள் நிகழும் போது அதனால் இயற்கை பேரிடர்கள் ஏற்படுவது வழக்கம்தான். பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பச்சை வால் நட்சத்திரம் பிப்ரவரி முதல் வாரத்தில் பூமிக்கு அருகில் தென்பட்டது. இந்த வால் நாட்சத்திரத்தின் வருகையால் மிகப்பெரிய பேரிடர் துருக்கி, சிரியாவில் நிகழ்ந்தது. நில நடுக்கத்திற்கு பல ஆயிரம் உயிர்கள் பறிபோனது. அதுபோல இந்த கிரக சேர்க்கையும் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அதிகாலை நேரத்தில் பூஜை அறையில் விநாயருக்கு விளக்கேற்றி வழிபடலாம். மாலை நேரத்தில் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட நோய் பாதிப்புகள் குறையும் என்று ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.