ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ரங்கநாச்சியார் கோவிலில் நவராத்திரி உற்சவம் - தாயார் திருவடி தரிசனம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ரங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் நேற்று தொடங்கியது. தாயார் திருவடி சேவை 12ஆம் தேதி நடைபெறுகிறது.
திருச்சி: நவராத்திரி பண்டிகை தமிழகத்தில் இன்று தொடங்கியுள்ள நிலையில் பல கோவில்களில் நேற்றே தொடங்கி விட்டது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ரங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. 7ஆம் திருநாளான 12ஆம் தேதி, விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெறுகிறது.
புரட்டாசி மாத மகாளய அமாவாசைக்கு மறுநாள் பிரதமைத் தொடங்கி தசமி வரை நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படும். வீடுகளில் கொலு வைத்து கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகை இந்த ஆண்டு இன்று முதல் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் முக்கிய கோவில்களில் நேற்று முதலே பண்டிகை ஆரம்பமாகி விட்டது.
மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் முதன்மையான தலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். அந்த ஆலயத்தில் இந்த ஆண்டு ரங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் நேற்று தொடங்கியது.

கொலு மண்டபத்தில் ரங்க நாச்சியார்
உற்சவத்தின் முதல் நாளான்று மூலஸ்தானத்தில் ரெங்கநாச்சியார் திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் மாலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து ரங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலு மண்டபம் வந்தடைந்தார். கொலு, இரவு 7.45 மணிக்கு ஆரம்பித்து 8.45 மணி வரை நடைபெற்றது. இரவு 9.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

பக்தர்கள் தரிசனம்
2ஆம் நாளான இன்று முதல் 6ஆட் திருநாளான 11ஆம் தேதி வரையும் மற்றும் 8ஆம் திருநாளான 13ஆம் தேதியும் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு கொலு மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேருகிறார்.

திருவடி தரிசனம்
7ஆம் திருநாளான 12ஆம் தேதி, விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெறுகிறது. விழாவின் 9ஆம் நாளான 14ஆம் தேதி சரஸ்வதி பூஜையுடன் நவராத்திரி உற்சவ விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இணைஆணையர் (பொறுப்பு) கல்யாணி, உதவிஆணையர் கந்தசாமி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

பாத தரிசனம் காண வரும் பக்தர்கள்
ஸ்ரீரங்கம் கோவில் ரங்கநாச்சியார் படி தாண்டா பத்தினி என்ற சிறப்பு கொண்டவர். ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் இவரது பாதங்கள் தெரியாத வகையிலேயே அலங்காரம் செய்யப்படும். ஆனால் நவராத்திரி உற்சவத்தின் 7ஆம் திருநாள் மட்டும் தாயாரின் பாதங்களை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்படும்.

அம்மன் அலங்காரம்
இந்த நாளில் மட்டுமே தாயாரின் திருவடியை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும் என்பதால் ஏராளமான பக்தர்கள் தாயாரின் திருவடியை தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான ரங்கநாச்சியார் திருவடி சேவை தாயார் சன்னதியில் உள்ள கொலு மண்டபத்தில் வரும் 12ஆம் தேதி நடைபெறுகிறது. திருவடி சேவையையொட்டி தாயார் சாய்கொண்டை, வைர பதக்கம், பவளமாலை, கிளி மாலை, கையில் தங்கக்கிளி, காலில் தங்க கொலுசு அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் ரங்கநாச்சியார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தாயாரின் திருவடிகளை தரிசிக்க முடியும் என்பதால் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தாயார் திருவடியை தரிசனம் செய்வார்கள்.

சமயபுரம் மாரியம்மன் தரிசனம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் நேற்று தொடங்கியுள்ளது. முதல் நாளான நேற்று அம்மன் குமாரி அலங்காரத்தில் கேடயத்தில் எழுந்தருளி கோவிலின் உள்பிரகாரத்தை வலம் வந்தார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அம்மனை வணங்குவதற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து கொலு மண்டபத்தை அம்மன் சென்றடைகிறார். 10ஆம் நாளான விஜயதசமி அன்று வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் அம்மன் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.












Click it and Unblock the Notifications