நோய் பயம் நீக்கும் ஆடிக்கிருத்திகை விரதம் - திருத்தணியில் தெப்ப உற்சவம் - பக்தர்களுக்குத் தடை
ஆடிக்கிருத்திகை திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. திருத்தணியில் மூன்று நாட்கள் நடைபெறும் தெப்பத்திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சென்னை: முருகனுக்கு உகந்த ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு அறுபடை வீடுகளில் 5ஆம் படை வீடான திருத்தணி சுப்ரமணியர் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. கொரோனா தடை உத்தரவு அமலில் உள்ளதால் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரைக்கும் ஆடிக்கிருத்திகை பெருவிழாவில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் சிறப்பானது. தட்சிணாயண புண்ணிய காலத்தில் வரும் கார்த்திகையும், உத்தராயண புண்ணிய காலத்தில் வரும் தை கிருத்திகையும் முருகன் ஆலயங்களில் சிறப்பாக கொண்டாப்படுகிறது.
என்னாச்சு.. வெளிநாடு போக போகிறாராமே ஸ்டாலின்.. உண்மையா.. டூ இன் ஒன் பிளான்?.. செம திட்டம்!
ஆடி கிருத்திகை தினமானது சூரியன் தென் திசை நோக்கி பயணிக்கும் தட்சிணாயண காலத்தின் தொடக்கத்தில் வருகிறது. இக்காலம் பகல் வெளிச்சம் குறைந்து இரவின் இருள் நீடித்திருக்கும் பருவத்தின் தொடக்க காலமாகும். எனவே மக்கள் தங்களின் வாழ்வில் துன்பம் எனும் இருள் அதிக காலம் நீடிக்காமல் இருக்க முருக பெருமானை வேண்டுவதால் அவர்கள் வாழ்வு ஒளிமயமாக இருக்க அருள் புரிவார் முருகன்.
முருகன் வழிபாடு
திங்கட்கிழமை ஆடிக்கிருத்திகை பண்டிகை நாளாகும் இந்த நாளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். முருகப்பெருமானில் அறுபடை வீடுகளிலும் தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் ஆலயங்களிலும் ஆடிக்கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்படும்.
ஆறு கிருத்திகை விரதம்
மழைக்காலத் தொடக்கமான தட்சணாயணம் பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளுக்கும் ஏற்றதாக உள்ளது எனவேதான் ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்து கடவுளையும் வேண்டி செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப்படுவதனாலேயே இந்த மாதத்தில் வழிபாடுகள் அதிகம் நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.
முருகனுக்கு அபிஷேகம்
ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் திருத்தணி முருகன் கோயிலில், ஆடிக்கிருத்திகைத் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடிக் கிருத்திகை திருவிழா இன்று தொடங்கியது. மூலவர் முருகனுக்கு தங்க கவசம் அணிவித்தனர். பின்னர் மூலவருக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
கோவிலுக்கு பக்தர்கள் வருகை
ஆடி அசுவினியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து மொட்டை அடித்து முருகனை வழிபட்டனர். பெண்கள், குழந்தைகளும் காவடி சுமந்து வந்து முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.
ஆடி பரணியில் அற்புதம்
நாளைய தினம் ஆடி பரணி விழாவை முன்னிட்டு முருகன், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி தங்க கவசம், வைர கீரிடம் பச்சைகல் மரகத மாலை, அணிவிக்கப்படும். முருகப்பெருமானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அழகன் முருகனுக்கு தெப்ப உற்சவம்
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு இன்று 3 நாட்கள் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. காவடி மண்டபத்தில் இருந்து வள்ளி தெய்வானை முருகப்பெருமான் உற்சவர் தேர் வீதி வலம் வந்து படிக்கட்டுகள் வழியாக மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை குளத்திற்கு ஊர்வலமாக சுவாமி எடுத்து சென்று சரவணப்பொய்கையில் உள்ள அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதனை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணிக்கு வருகை தருவார்கள். கொரோனா காலமாக இருப்பதால் தெப்ப உற்சவத்தை நேரில் காண பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா நோய் தடுப்பு
கொரோனா ஊரடங்கு தடை உத்தரவு அமலில் உள்ளதால் திருத்தணியில் நடைபெறும் தெப்ப உற்சவ விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளின்றி ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு என தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டதனைத் தொடர்ந்து கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறைக்கு அறிவுரை வழங்கியுள்ளார்கள்.
பக்தர்களுக்கு அனுமதியில்லை
திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது நிலவிவரும் கொரோனா நோய் தொற்றின் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறை அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் திருத்தணிகை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆடி கிருத்திகை பெருவிழாவை முன்னிட்டு அதிகளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் பொருட்டு 31.7.2021 முதல் 4.8.2021 வரை ஐந்து நாட்களுக்கு மேற்படி திருக்கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஆடிக்கிருத்திகை விரதம்
ஆடிக்கிருத்திகை நாளில் முருகப் பெருமானை வேண்டி விரதம் இருந்து வணங்கினால் மனோவலிமை பெறும், செல்வ செழிப்பு உண்டாகும், பூமி லாபம் பெறலாம், வீடு மனை தொழில் செய்பவருக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும், இரத்த சம்பந்தமான நோய்கள் நீங்கும், சத்ரு பயம் விலகும், இன்னும் பல எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை