அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலுக்கு சந்தனம் சாத்தி வழிபாடு - கோவிந்தா முழக்கம்
மதுரை அருகே உள்ள அழகர்கோவிலில் பதினெட்டாம் படி கருப்பணசாமி கோவில் கதவுகளுக்கு சந்தனம் சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. 18 படிகளிலிலும் தீபம் ஏற்றப்பட்டது.
அழகர் கோவில்: ஆடி மாத பௌர்ணமி நாளில் அழகர் கோவிலில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பதினெட்டாம் படி கருப்பணசாமி கோவில் கதவுகளுக்கு சந்தனம் சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 18 படிகளிலிலும் தீபம் ஏற்றப்பட்டு கதவுகள் திறக்கப்பட்ட உடன் கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு வழிபட்டனர். பதினெட்டாம்படி கருப்பசாமி மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கும் மதுரை சுற்றுவட்டார மக்களுக்கும் காவல் தெய்வமாகவும் குல தெய்வமாகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக முதல்வர் பதவிக்கு ராஜினாமா.. அழுதபடியே அறிவித்த எடியூரப்பா!
திருமாலிருஞ்சோலை, அழகர் மலை, சோலைமலை என்றும் பல பெயர்களால் அழைக்கப்படும் அழகர் கோவிலின் மூலவராய் அருள்பாலிக்கிறார் பரமஸ்வாமி. அங்கே உற்சவராக ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அருள் பாலிக்கிறார் கள்ளழகர்.
இந்த அழகரையும், மலையையும் காவல் காத்து வருகிறார் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி. இவருக்கு உருவம் இல்லை. மூடப்பட்ட கதவு குடம் குடமாய் ஊற்றி பூசப்பட்ட சந்தனம், கதவை அலங்கரிக்கும் அழகிய நிலை மாலை என கம்பீரமாக காட்சி தருகிறார் கருப்பண்ணசாமி. மிகப்பெரிய அரிவாள் உள்ளது.
கருப்பசாமி மீது பக்தி
அநியாயங்கள் செய்பவர்களை தண்டிக்காமல் விடமாட்டார் என்பதால் இந்த பகுதி மக்களுக்கு கருப்பண்ணசாமி மீது பயமும் பக்தியும் அதிகம். பதினெட்டாம்படியான் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் கருப்பண்ணசாமியை வணங்கினால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. கோவில் நகைகளை காவல் தெய்வம் கருப்பசாமியே பாதுகாத்து வருகிறார் என்பது பல காலமாக தொடர்ந்து வரும் நம்பிக்கை.
கோவில் சம்பிரதாயம்
தினசரியும் அழகர்மலை கோவில் பூட்டபட்டதும்,கதவின் சாவி பதினெட்டாம் படி கருப்பசாமியின் முன்பு வைத்துவிட்டு செல்வர். மறுநாள் காலையில் கருப்பசாமியின் முன்பு உள்ள சாவியை பெற்று கோவில் கதவை திறக்கும் சம்பிரதாயம் இன்று வரை நடைபெற்று வருகிறது .
நகை கணக்கு
சித்திரை திருவிழாவிற்கு வைகை ஆற்றில் இறங்குவதற்காக தங்கப்பல்லாக்கில் மதுரைக்கு புறப்படும்போது அழகர் அணிந்துள்ள தங்க நகைகள் ஆபரணங்கள் எண்ணப்பட்டு அந்த பட்டியல் பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி முன்பு படித்து காட்டப்படும். அதே போல மதுரையில் இருந்து கோவிலுக்கு திரும்பி வந்த பின்னரும் நகைகள் சரி பார்க்கப்பட்டு கருப்பண்ணசாமி முன்பு பட்டியல் வாசிக்கப்பட்டே கள்ளழகர் கோவிலுக்குள் நுழைகிறார்.
நீதிபதி கருப்பசாமி
கள்ளழகருக்கு காவல் புரியும் கருப்பணசாமியை மக்கள் தங்கள் குல தெய்வமாக கொண்டு வழிபட்டு வருகின்றனர். கருப்பசாமியிடம் முறையிட்டால் நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்பது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த நம்பிக்கையில்தான் பல வழக்குகள் அவர் முன்பு தீர்க்கப்பட்டு வருகின்றன.
கருப்பசாமி வந்த கதை
கருப்பண்ணசாமி எப்படி காவல் தெய்வமாக இங்கே வந்தார் என்பதே ஒரு சுவாரஸ்யமான கதையாகும். கேரளாவை ஆட்சி செய்து வந்த அரசன் ஒருவன் பாண்டிய நாட்டுக்கு வந்தான். திவ்விய தேசமான திருமாலிருஞ்சோலைக்கு வந்திருந்த போது அங்கே எழுந்தருளியிருக்கும் கள்ளழகரின் அழகைக் கண்டு மயங்கினான். அழகரை கடத்திக்கொண்டு போய் தனது நாட்டில் வைத்துக்கொள்ள திட்டமிட்ட அந்த அரசன் நாடு திரும்பிய உடன் மந்திர,தந்திரங்களில் நன்கு தேர்ச்சி பெற்ற 18 மந்திரவாதிகளை தேர்வு செய்து பாண்டிய நாட்டுக்கு அனுப்பினான்.
காவல் தெய்வம்
அழகரை தூக்கி வரும்படி கட்டளையிட்டான். பதினெட்டு பேரும் மன்னனின் கட்டளையை நிறைவேற்ற அழகர்மலை வருவதற்கு ஆயத்தமானார்கள். மலையாள தேசத்தின் காவல் தெய்வமான கருப்பும் வெள்ளை குதிரை மீதேறி பதினெட்டு பேருக்கு முன்னே சென்றது. காவல் தெய்வத்தின் பின்னே மந்திரவாதிகள் அழகர்மலைக்கு வந்தனர்.
காவல் தெய்வம்
அழகரை தூக்கி வரும்படி கட்டளையிட்டான். பதினெட்டு பேரும் மன்னனின் கட்டளையை நிறைவேற்ற அழகர்மலை வருவதற்கு ஆயத்தமானார்கள். மலையாள தேசத்தின் காவல் தெய்வமான கருப்பும் வெள்ளை குதிரை மீதேறி பதினெட்டு பேருக்கு முன்னே சென்றது. காவல் தெய்வத்தின் பின்னே மந்திரவாதிகள் அழகர்மலைக்கு வந்தனர்.
அழகில் மயங்கி கருப்பசாமி
அழகர் மலையை அடைந்த காவல் தெய்வம், கருப்பண்ணசாமி அப்படியே அழகரின் அழகில் மயங்கி மெய் மறந்து நின்றது. 18 மந்திரவாதிகளும் தன்னுடன் வந்த காவல் தெய்வத்தை மறந்து, தங்க ஆபரணங்களையும் அழகரையும் தூக்கி செல்லும் எண்ணத்தில் கருவறை நோக்கி சென்றனர். இவர்களின் கெட்ட நோக்கத்தை கண்ட பக்தர் ஒருவர், ஊரில் உள்ள மக்களிடம் சொல்ல, மக்கள் அனைவரும் திரண்டு வந்தனர். மந்திரவாதிகள் 18 பேரையும் கொன்று, பெரிய கோபுரத்தின் முன்பாக பதினெட்டு படிகள் செய்து, படிக்கு ஒருவராக புதைத்தனர்.
காவலுக்கு நின்ற பதினெட்டாம்படியான்
மந்திரவாதிகளுக்கு காவலாக வந்து மயங்கி நின்ற கருப்பசாமிக்கு காட்சி தந்த கள்ளழகர் அழகர் மலையையும், தன்னையும் காவல் காக்குமாறு உத்தரவிட்டார். இதனையேற்று கருப்பசாமி அழகர் மலையிலேயே தங்கி இன்று வரை காவல் காத்து வருகிறார் என்பது நம்பிக்கை. 18 பேருடன் வந்த அவர் பதினெட்டு படிகளின் மீது நின்று காவல் தெய்வமாய் காட்சி தருகிறார்.
கருப்பசாமிக்கு படையல்
ஒருநாள் கோவில் பட்டர் கனவில் தோன்றிய கருப்பசாமி, அழகருக்கு அர்த்த ஜாம பூஜையின் போது செய்யப்படும் பிரசாதங்களை தனக்கு படைக்குமாறு வேண்டினாராம் அன்று முதல் அழகருக்கு படைக்கப்படும் அர்த்த ஜாம பூஜை பிரசாதங்கள் பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு படைக்கப் படுகிறது.
சந்தனம் சாத்தப்பட்டது
ஆண்டுதோறும் ஆடி பவுர்ணமி நாளில் மட்டும் கருப்பசாமி கோவில் கதவுகள் திறக்கப்படும். ஆடி பவுர்ணமியை முன்னிட்டு சனிக்கிழமையன்று பதினெட்டாம் படி கருப்பணசாமி கோவில் கதவுகளுக்கு சந்தனம் சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கருப்பணசாமி கோவிலின் திருக்கதவுகள் மங்கள இசையுடன் மாலை 6 மணிக்கு திறக்கப்பட்டன.
பக்தர்கள் தரிசனம்
கோவில் கதவுகள் திறக்கப்பட்ட உடன் கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். ராஜகோபுரத்தின் உள்ளே இருந்த பதினெட்டு படிகளிலும் பூக்கள், எலுமிச்சம் பழம், தேங்காய், பழம் உள்ளிட்ட பொருட்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அப்போது 18 படிகளிலிலும் தீபம் ஏற்றப்பட்டது. சுமார் 5 நிமிடங்கள் மட்டுமே கதவுகள் திறக்கப்பட்டு பின்னர் மூடப்பட்டன. அழகர் கோவிலில் காவல் தெய்வமாக நின்ற கருப்பசாமி நாளடைவில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கும் மதுரை சுற்றுவட்டார மக்களுக்கும் காவல் தெய்வமாகவும் குல தெய்வமாகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.