சிதம்பரம் ஆடலரசர் நடராஜருக்கு ஆனித்திருமஞ்சனம் - பக்தர்கள் தரிசனம் எப்போது
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜூலை 15ஆம் தேதி ஆனித்திருமஞ்சனம் நடைபெற உள்ளது. நடராஜர் பொற்சபை எழுந்தருளிய பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர்.
சிதம்பரம்: அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகர் ஆடலரசர் தில்லை அம்பலவாணர் நடராஜர் ஆலயத்தில் ஆனித்திருமஞ்சன விழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்காக திருத்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து 14ஆம் தேதி ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி தரிசனம் தருகிறார். 15ஆம் தேதி ஆனித்திருமஞ்சன நாளில் சுவாமி பொற்சபையில் எழுந்தருளிய பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆடலரசரான நடராஜருக்கு சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை என ஆண்டுக்கு 6 முறை மகா அபிஷேகம் செய்யப்படுகிறது.
இதில் சிறப்பு வாய்ந்தது ஆனி உத்திரத்தில் நடைபெறும் திருமஞ்சனமும், மார்கழி திருவாதிரையில் நடைபெறும் திருமஞ்சனமும் ஆகும். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். பிற திருமஞ்சன நாட்களில் மாலைநேரத்தில் அபிஷேகம் நடத்தப்படும்.

ஆனி உத்திரம்
மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் பொழுதாகும். தேவர்களுக்கு வைகறை மார்கழி மாதம், காலைப் பகுதி மாசி மாதம், உச்சிக் காலம் சித்திரை மாதம், மாலைப் பகுதி ஆனி மாதம், இரவுப் பகுதி ஆவணி மாதம், அர்த்த சாமம் புரட்டாசி மாதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

வெப்ப அலை தாக்கம்
சந்தியா காலங்களான ஆனி - மார்கழியே இறை வழிபாட்டுக்கு உகந்த மாதங்களாகக் கொள்ளப்படுகின்றன. வைகாசி மாதத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தாலும், ஆனியில் கோடை வெப்பம் மிகுந்து காணப்படுவதால், இந்த வெப்ப அலையில் தாக்கத்திலிருந்து நடராஜப் பெருமானைக் குளிர்விப்பிதற்காக பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், இளநீர் என இன்னும் பல 16 வகை குளிர்ந்த பொருட்களைக் கொண்டு ஆனி மாதத்தில் திருமஞ்சனம் செய்கின்றனர்.

சுமங்கலி பாக்கியம்
உலக இயக்கத்தையே தனது உடலுக்குள் ஒளித்து வைத்துக்கொண்டு ஆனந்த நடனமாடும் நடராஜரைப் பார்த்தாலே பக்தர்களுக்குப் பரவசம்தான். ஆனித்திருமஞ்சன நாளில் நடராஜருக்கு நடைபெறும் அபிஷேகத்தை பெண்கள் தரிசித்தால் நீடூழி வாழுகின்ற சுமங்கலி பாக்கியத்தைப் பெறுவார்கள். கன்னியர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். ஆடவர்களுக்கு மனதில் தைரியமும் உடல்பலமும் வளமும் கூடும். தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும். செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

ஆகாயத்தலம்
சிவபெருமானின் பஞ்ச சபைகளில் பொற்சபையாகவும் பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுவது சிதம்பரம் நடராஜர் ஆலயம். இந்த ஆலயம் ஐந்து சுற்று பிராகாரங்களைக் கொண்டது. இக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை நேர் எதிரே அமையப் பெறாமல் சிறிது இடப்புறம் தள்ளி அமைந்துள்ளது. இது மனித உடலில் இதயம் இடப்புறம் அமைந்துள்ளதை ஒத்து இருக்கிறது என்கிறது தல புராணம்.

பொற்சபையில் அபிஷேகம்
மனித உடலைப்போல அமைந்துள்ளதாகக் கூறப்படும் இக்கோயிலின் கூரை, மனிதன் நாள் ஒன்றுக்கு மூச்சுவிடும் எண்ணிக்கையான 21,000 முறையைக் கணக்கில் கொண்டு அதே அளவு ஓடுகளால் வேயப்பட்டுள்ளன. மனித உடலில் ஓடும் நாடிகள் 72,000. இதே எண்ணிக்கையில் ஓடுகளைப் பதியச் செய்ய ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளன.

ஆனித்திருமஞ்சன விழா
ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனித் திருமஞ்சனத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் கொடியேற்றம் நடைபெற்றது. வரும் 15ஆம் தேதி உத்திர நட்சத்திர நாளில் ஆனித்திருமஞ்சன விழா நடராஜர் அபிஷேகத்துடன் நடைபெறுகிறது.

பக்தர்களுக்கு அனுமதி
இந்த விழாவிற்காக திருத்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து 14ஆம் தேதி ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி தரிசனம் தருகிறார். 15ஆம் தேதி ஆனித்திருமஞ்சன நாளில் சுவாமி பொற்சபையில் எழுந்தருளிய பிறகு பக்தர்கள் தரிசனம் செய்த அனுமதிக்கப்படுவார்கள் என தீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications