ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா கொடியேற்றம் - என்னென்ன கட்டுப்பாடுகள்
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கொரோனா நோய்த் தொற்று அபாயம் காரணமாக, கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் வீடுகளிலேயே பொங்கல் வைத்து வழிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபடும் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா இன்று கொடியேற்ற வைபவத்துடன் தொடங்கியுள்ளது. கொரோனா நோய்த் தொற்று அபாயம் காரணமாக, கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் பெண்கள் தங்கள் வீடுகளிலேயே பொங்கல் வைத்து வழிபட வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயில் எப்படி ஆண்களுக்கு பிடித்தமான கோயிலோ, அது போலத்தான், பெண்களுக்கு பிடித்தமானது திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில். இங்கு ஆண்டுதோறும் தைமாதத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் கேரளா மாநிலம் மட்டுமல்லாது, அண்டடை மாநிலங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு வழிபாடு செய்வது தொன்றுதொட்டு நடைபெறும் நிகழ்ச்சியாகும். திரைப்பட நடிகைகளும் இங்கு வந்து பொங்கலிட்டு வழிபாடு செய்வதும் உண்டு.
சித்தர்கள் வழிபடும் பெரிச்சிகோவில் நவபாஷாண பைரவர் - திருமண தடைகளை நீக்கும் ஒற்றை சனீஸ்வரர்
கடந்த 1997ஆம் ஆண்டு நடைபெற்ற பொங்கல் விழாவில் சுமார் பதினைந்து லட்சம் பெண்கள் கலந்து கொண்டது, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது. அதே போல், 2009ஆம் ஆண்டு நடைபெற்ற விழாவில் சுமார் இருபத்தி ஐந்து லட்சம் பெண்கள் கலந்துகொண்டதும் சாதனையானது. கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக, பொங்கல் விழாவில் கலந்துகொண்டு பொங்கல் வைத்து வழிபட 200 பெண்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது.
பகவதி அம்மன் யார்?
தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களில் பாண்டிய மன்னன் நீதி தவறினான் என்பதற்காக மதுரையை எரித்த கண்ணகியே கேரளாவின் ஆற்றுக்கால் பகவதி என்றும் புராணம் கூறுகிறது. மதுரையை தீக்கிரையாக்கி விட்டு ஆவேசம் பொங்க தெற்கு நோக்கி புறப்பட்ட கண்ணகி, கன்னியாகுமரி வந்து அங்கிருந்து திருவனந்தபுரம் சென்றார். அங்குள்ள கிள்ளியாற்று கரையில் கண்ணகி இளைப்பாறினார். இதன் நினைவாகவே இங்கு பிற்காலத்தில் கோவில் ஒன்று உருவானதாகவும், கற்புக்கரசியான கண்ணகியின் அவதாரமே பகவதி அம்மன் என்றும் இக்கோவிலின் தலப்புராணமாக கூறப்படுகிறது.
கிள்ளியாற்றில் அவதரித்த சிறுமி
பராசக்தியின் பக்தர் ஒருவர் கிள்ளியாற்றில் குளித்து கொண்டிருந்த போது தெய்வீக அம்சம் பொருந்திய சிறுமி ஒருவர் திடீரென பக்தர் முன்பு தோன்றினார். அந்த சிறுமியின் காந்த சிரிப்பில் பக்தர் தன்னை மறந்து நின்றார். அவரிடம் சிறுமி என்னை ஆற்றின் மறுகரையில் கொண்டு விட முடியுமா? என்று கேட்டார். சிறுமியை உடனே அனுப்ப மனம் விரும்பாத பக்தர், சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்பினார். இதற்காக சிறுமியின் கையை பிடித்து அழைத்துச் செல்ல திரும்பிய போது சிறுமி திடீரென மாயமாகி விட்டார். மனம் நொந்த பக்தர், வீட்டிற்கு சென்று கண்மூடி தூங்கினார்.
கனவில் வந்த சிறுமி
அப்போது மீண்டும் அந்த சிறுமி, பக்தரின் கனவில் தோன்றி, கிள்ளியாற்று கரையில் தென்னை மரங்களுக்கிடையே 3 கோடுகள் தென்படும். அந்த இடத்தில் எனக்கு கோவில் கட்டி வழிபட வேண்டும் என்று கூறியபடி மறைந்து போனார்.அதன் பிறகு தான் பக்தருக்கு சிறுமி வடிவில் வந்தது சாட்சாத் பகவதி என்று தெரிந்தது. அந்த பக்தரின் முயற்சியால் கட்டப்பட்ட கோவிலே இன்று ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலாக திகழ்கிறது என்றும் கூறப்படுகிறது.
ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ சக்ரம்
இக்கோவிலில் உள்ள ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்தது ஆதிசங்கரர் ஆவார். இக்கோவிலின் தூண்கள் மற்றும் சுவர்களில் மகிஷாசுர மர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவபார்வதி சித்திரங்கள் இடம் பெற்றுள்ளன. இது போல கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின் வரலாற்று சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் கருவறையில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கத்தி, கேடயம், சூலம், அட்சயபாத்திரம் ஆகியவற்றை ஏந்தி, அரக்கியை அடக்கி அவள்மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். கருவறையில் 2 அம்மன் சிலைகள் உள்ளன. மூலவிக்கிரகத்தில் ரத்தினங்கள் பதித்து தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது.
நினைத்தது கை கூடும்
இக்கோவிலில் அமர்ந்து அருள்பாலிக்கும் பகவதி அம்மனை வழிபடும் பெண்களுக்கு அம்மை நோய், கண்திருஷ்டி பாதிப்பு, மன அமைதி இல்லாதவர்களுக்கு மன அமைதி கிடைப்பது, எதிரிகளின் தொந்தரவுகளில் இருந்து விடுபட வாய்ப்பு, வழக்குகளில் சிக்கி தவிப்பவர்கள் அதில் இருந்து விடுபட வழி பிறப்பது, திருமண தடை நீங்கவும் வழி பிறக்கும். இதற்காக இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துச் செல்வார்கள். தினமும் வந்தாலும் இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம், பூர நட்சத்திரமும், பவுர்ணமியும் கூடும் நாளன்று நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்று பொங்கலிட்டால் வேண்டிய காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் ஐதீகம்.
பொங்கல் விழா கொடியேற்றம்
இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா இன்று கொடியேற்ற வைபவத்துடன் தொடங்கியுள்ளது. காலை 11 மணியளவில் அம்மனுக்கு காப்பு கட்டி குடியிருத்தல் சடங்குடன் தொடங்குகிறது. வரும் 17ஆம் தேதியன்று பொங்கல் வைக்கும் விழா நடைபெறும். கேரளாவில் கொரோனா நோய் தொற்றுக் காரணமாக கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால், கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் 200 பெண்களுக்கு மட்டுமே, கோயில் வளாகத்தைச் சுற்றி பொங்கல் வைத்து வழிபாடு நடத்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே பொங்கலிட்டு வழிபாடு செய்ய தடையில்லை. அன்றைய தினம் காலை 10:50 மணியளவில் பொங்கலிடும் நிகழ்ச்சி ஆரம்பமாகும். நண்பகல் 1:20 மணிக்கு நைவேத்தியம் நடைபெறும்.
குத்தியோட்ட விரதம்
பொங்கல் விழாவை முன்னிட்டு 11ஆம் தேதி காலை 8:30 மணிக்கு குத்தியோட்ட விரதம் தொடங்கும். விழா நடைபெறம் நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனமும், தொடர்ந்து அபிஷேகமும், காலை 6 மணிக்கு தீபாராதனையும், 6:40 மணியளவில் உஷபூஜையும், 6:50 மணியளவில் உஷஸ்ரீபலி பூஜையும், காலை 7 மணியளவில் களகாபிஷேகம், 8:30 மணியளவில் பந்தீரடி பூஜையும்,11:30 மணிக்கு உச்சிக்கால பூஜையும், நண்பகல் 12 மணியளவில் தீபாராதனை, 12:30 மணியளவில் உச்ச ஸ்ரீபலி பூஜையும் நடைபெற்று நடை சாத்தப்படும். பின்னர் மாலை 5 மணியளவில் நடை திறக்கப்பட்டு, 6:45 மணியளவில் தீபாராதனை, இரவு 9 மணிக்கு அத்தாள ஸ்ரீபலி பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு தீபாராதனையும் நடைபெற்று பின்னர் நடை சாத்தப்படும்.
கொரோனா கட்டுப்பாடுகள்
முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வைக்கும் விழா நாளன்று, சிறுமிகளின் தாலப்பொலி, சிறுவர்களிள் குத்தியோட்டம், அம்மன் ஊர்வலம் ஆகியன கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்குட்பட்டு நடைபெறும். மறுநாளன்று இரவு காப்பு அவிழ்க்கப்பட்டு பொங்கல் விழா வைபவம் நிறைவுபெறும். கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால், விழாவையொட்டி, வழக்கமாக நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு இந்த ஆண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால், பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தி விழா நிகழ்ச்சிகள் மிகவும் எளிமையாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.