ஆவணி அமாவாசை..பக்தர்களுக்கு வனத்துறை குட் நியூஸ்.. சதுரகிரி மலைக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி
விருதுநகர்: ஆவணி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய இன்று முதல் நான்கு நாட்களுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வழக்கமாக அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் சென்று வழிபடுவார்கள். ஆடி அமாவாசை, சித்ரா பௌர்ணமி, மகா சிவராத்திரி உள்ளிட்ட சிறப்பு நாட்களில் கூட்டம் அலைமோதும்.
இன்று தேய்பிறை பிரதோஷம் கடைபிடிக்கப்படுகிறது. ஆவணி அமாவாசை விழா வரும் 26ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல கோவில்களில் அமாவாசை அன்று சிறப்பு வழிபாடு நடைபெறும். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில்,அமாவாசை நாளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கூட்டம் சதுரகிரி மகாலிங்கம் கோவிலில் அலைமோதும். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் இன்று முதல் வரும் 27ஆம் தேதிவரைக்கும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள பக்தர்கள் இன்று முதல் சதுரகிரி கோவிலுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
ஆடி அமாவாசையன்று சாமி தரிசனம் செய்ய 6 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கனமழை பெய்த காரணத்தால் கோவிலில் பக்தர்கள் சிக்கிக்கொண்டனர். பின்னர் பாதுகாப்பாக காவல்துறையினர் உதவியிடன் மலையில் இருந்து இறங்கினர்.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்த காரணத்தால் கடந்த மாதம் பவுர்ணமியின் போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. நீரோடைகளில் வெள்ளம் சென்ற காரணத்தால் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்றைய தினம் முதல் 4 நாட்கள் சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ள பக்தர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. அதே நேரத்தில் மழை பெய்தால் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்படுவார்கள் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications