வைகுண்ட ஏகாதசி 2020: ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட பெரிய ரங்கநாதரை தரிசிக்கலாம் வாங்க
மதுரை: சந்திரன் தனது மனைவிகளின் சாபத்தினால் இழந்த சக்திகள் அனைத்தையும் தேவர்களின் ஆலோசனையின் படி, ஆதி ரங்கநாதரை வழிபட்டு திரும்ப பெற்றார் என்பது ஐதீகம். இக்கோவிலின் பெருமாள் மகாபலிச் சக்ரவர்த்திக்கும் முற்பட்டவராக நம்பப்படுகிறது. எனவே இந்த வைகுண்ட ஏகாதசி நன்னாளில் ஆதி திருவரங்கம் ரங்கநாதசுவாமியை வழிபட்டு அனைத்து செல்வங்களையும் பெறுவோம்.
108 திவ்ய தேசங்கள் என்றாலே சட்டென்று முதலில் நம் நினைவுக்கு வருவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் தான். பூலோக வைகுண்டம் என்றும், பூலோக சொர்க்கம் என்றும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை ஒரு முறை தரிசித்தாலே நமக்கு, திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள மஹாவிஷ்ணுவின் அருகிலேயே வாசம் செய்வதற்கான பாக்கியம் நமக்கு கிட்டும் என்பது வைணவர்களின் நம்பிக்கையாகும்.
பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் முதல் கோவிலான சயன கோலத்தில் இருக்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தான். பார்த்த உடனேயே நம்மை பரவசத்தில் ஆழ்த்தும் ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் பிரமாண்ட தோற்றமும், அவரின் கண்களும், நாள் முழுவதும் அங்கேயே நின்றுகொண்டு பாதத்தில் தொடங்கி படிப்படியாக கண்கள் வரையிலும் பார்த்துக்கொண்டே இருக்கலாமே என்று நம்மை ஏங்க வைக்கும்.
அந்த அளவிற்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் தோற்றம் இருக்கும். சயன கோலத்தில் இருக்கும் ரங்கநாதர் விக்ரகத்தின் நீளம் சுமார் 21 அடியாகும். இதே போன்று தான் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் வடபத்ரசாயி கோவில் விக்ரகமும். ஆனால், இவ்விரண்டு விக்ரகங்களைக் காட்டிலும் மிகப்பெரிய ரங்கநாதர் விக்ரகமும் நம் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அது தான் ஆதி திருவரங்கம் ரங்கநாதர் விக்ரகம்.
ஆதி திருவரங்கம் ரங்கநாதசுவாமி
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தாலுகாவில் அமைந்துள்ளது ஆதி திருவரங்கம் ரங்கநாதசுவாமி கோவில். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலைக் காட்டிலும் மிகப்பழமையான வைணவ கோவில் என்பதோடு, தமிழ்நாட்டிலுள்ள வைணவ கோவில்களிலேயே மிகப்பழமையான கோவில் என்ற பெருமை பெற்றதாகும். ஆனால் இதில் வருத்தப்படவேண்டிய விஷயம், 108 திவ்யதேசங்களில் இக்கோவில் இடம் பெறவில்லை என்பது தான்.
29 அடி நீள சயனகோல பெருமாள்
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோவிலின் மூலவரான ரங்கநாதர் விக்ரகத்தின் நீளம் 29 அடியாகும். ஸ்ரீரங்கம் ரங்கநாதரைக் காட்டிலும் பெரியராக காட்சியளிப்பதால், இவரை பெரிய ரங்கநாதர் என்றும் ஆதி திருவரங்கம் என்றும் அழைக்கின்றனர். இந்தியாவிலுள்ள சயன கோலத்தில் இருக்கும் பெருமாள் விக்ரகங்களிலேயே இவர் தான் மிகப்பெரியவர். ரங்கநாத சுவாமி விக்ரகத்தின் நீளம் சுமார் 29 அடி நீளமாகும்.
மனைவிமார்களின் சாபம்
ஒரு சமயம், சந்திர பகவானின் அழகில் மயங்கிய தட்சனின் மகள்களான கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 பேர்களும் சந்திரனை திருமணம் செய்து கொண்டனர். ஆனால், சந்திர பகவானோ, கார்த்திகை மற்றம் ரோகிணி என இருவரிடம் மற்றும் அளவுக்கு அதிகமாக காதல் கொண்டார். இதனால் மற்ற 25 பேர்களும் கோபப்பட்டு, சந்திர பகவானை சபித்துவிட்டனர்.
தேவர்களின் யோசனை
‘நீ அழகாய் இருக்கிறாய் என்ற மமதையில் தானே ஆட்டம் போடுகிறாய், உன்னுடைய அழகு இன்றோடு தொலையட்டும்' என்று சாபம் இட்டனர். அப்போதிருந்து சந்திர பகவானின் அழகு மங்கத் தொடங்கியது. இதனால் கவலைப்பட்ட சந்திர பகவான், தேவர்களை நாடி தன்னுடைய வருத்தத்தை தெரிவித்தார். தேவர்கள் சொன்ன ஆலோசனையின் படி ஆதி திருவரங்கம் வந்து தவமிருந்து இங்கு சயன நிலையிலுள்ள ரங்கநாதசுவாமியை வழிபட்டு அவரின் திருவருளால் மீண்டும் தன்னுடைய குறை நீங்கப் பெற்றார் என்பது ஐதீகம்.
விஸ்வகர்மா உருவாக்கிய விக்ரகம்
சந்திரனின் குறையை தீர்த்து வைக்க இங்கு வந்த பெருமாளை வணங்கிய தேவர்கள் அனைவரும், அங்கேயே தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டுமாறு பெருமாளை வேண்டிக்கொண்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பெருமாளும், உடனே தேவ தச்சரான விஸ்வர்மாவை அழைத்தார். அவரும் பெருமாளை சயன கோலத்தில் ரங்கநாதர் என்ற பெயரில் மிகப் பிரமாண்டான விக்ரகத்தை உருவாக்கி இக்கோவிலில் ஸ்தாபித்தார்.
மகாபலிச்சக்ரவர்த்திக்கு முற்பட்ட கோவில்
இக்கோவிலின் பெருமாள் மகாபலிச் சக்ரவர்த்திக்கும் முற்பட்டவராக நம்பப்படுகிறது. மேலும், திராவிட கட்டிடக்கலை மற்றம் இடைக்காலச் சோழர்களால் கட்டப்பட்டு, பின்பு வந்த விஜயநகர அரசர்களின் காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. தினமும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகிறது. ஆண்டு தோறும் 12 திருவிழாக்கள் நடைபெறுகிறது. முக்கியமாக சித்திரை மாதத்தில் தேர்த் திருவிழா கொண்டாடப்படுகிறது.