ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை... காவிரியில் புனித நீராட அரசு அனுமதி கிடைக்குமா
ஆடி மாதத்தில் அமாவாசை, ஆடி 18ஆம் பெருக்கு நாளில் காவிரியில் புனித நீராட அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை: கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில் காவிரியில் புனித நீராட அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மக்களின் கோரிக்கையை முதல்வர் மு.க ஸ்டாலின் ஏற்றுக்கொண்டு காவிரியில் நீராட அனுமதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆடி மாதம் கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும். ஆடி அமாவாசை நாளில் மக்கள் நீர் நிலைகளில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவார்கள். ஆடி 18ஆம் பெருக்கு நாளில் காவிரி அன்னையை மக்கள் வழிபடுவார்கள்.
மேகதாது அணை: தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில முதல்வர்கள் கூட்டத்தை கூட்ட மத்திய அரசு திட்டம்?
கடந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊராடங்கு அமல்படுத்தப்பட்டதால் புனித நீராட அரசு அனுமதிக்கவில்லை. இந்தாண்டும் கொரோனா பரவலைத் தடுக்கும் அரசு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால், இந்த ஆண்டு ஆடி 18ம் பெருக்கு விழா கொண்டாட காவிரி ஆற்றுப் படித்துறைக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆடி மாத பிறப்பு
இந்து மதத்தைச் சார்ந்தவர்களின் ஆன்மீக வழிபாடு மற்றும் பண்டிகைகளுக்கு உரிய தமிழ் மாதங்களில் ஆடி மாதம் சிறப்பிடம் பெற்றது. வருகிற 17ஆம் தேதி சனிக்கிழமையன்று ஆடி மாதம் தொடங்குகிறது.
காவிரி வழிபாடு
இந்த ஆடி மாதத்தில் தான் காவிரி அன்னையை அகத்தியரின் கமண்டலத்திலிருந்து விடுவித்து தமிழகமெங்கும் பாய்ந்தோடி விவசாயத்தை வளம் கொழிக்கச் செய்து மக்களை மகிழ்வுடன் வாழச் செய்த வினாயகப் பெருமானுக்கு தமிழக மக்கள் காவிரிக் கரைதோறும் கோவில் கட்டி ஆடிப் 18 தோறும் காவிரியில் புனித நீராடி, எள், வெல்லம் கலந்த பச்சரிசி, பழங்கள் முதலிய விளைபொருட்களை படையலிட்டு வழிபட்டு வருவது தொன்று தொட்டு நடந்து வருகிறது.
மங்கள விழா
ஆடிப்பெருக்கு அன்று புதுமணத் தம்பதிகளும், கன்னிப் பெண்களும், குழந்தைகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டு கோடி கொடுத்தாலும் கிடைக்காத மங்கள விழாவாக கொண்டாடுகின்றனர். ஆடி 18ஆம் பெருக்கு காவிரி அன்னைக்கு சீர் கொடுக்கும் விழாவாகும்.
முன்னோர் வழிபாடு
இந்த ஆடி மாதத்தில் தான் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோருக்கு நன்றிக் கடனாம் பித்ருக் கடன் செலுத்தும் ஆடி அமாவாசையும், திருவையாறில் அப்பர் பெருமானுக்கு சிவபெருமான் கயிலாயக் காட்சி தந்தப் பெருவிழாவும் ஆகஸ்ட் 8ஆம் தேதி நடக்கிறது.
தடை நீங்குமா
காவிரி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள தஞ்சை மாவட்டம் திருவையாறு மற்றும் சுற்று வட்டார கிராம மக்களால் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்பட்டு வரும் ஆடி மாத விழாக்கள் கடந்த ஆண்டு கொரோனா பரவலைத் தடுப்பதற்காக அரசால் தடை செய்யப்பட்டு காவிரி ஆற்றில் புனித நீராட முடியாமலும், விழாக் கொண்டாட முடியாமலும் ஏமாற்றம் அடைந்தனர்.
காவிரி படித்துறை
இந்தாண்டும் கொரோனா பரவலைத் தடுக்கும் அரசு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால், இந்த ஆண்டு ஆடி 18ம் பெருக்கு விழா கொண்டாட காவிரி ஆற்றுப் படித்துறைக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காவிரி அன்னைக்கு வழிபாடு
இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதியே மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. விவசாயப் பெருங்குடி மக்களை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்திக் கொண்டிருப்பதால் இந்த ஆண்டு ஆடி 18ஆம் பெருக்கு விழாவை சிறப்பாக நடத்தவேண்டும் என்று மக்கள் நினைத்துக்கொண்டுள்ளனர்.
புனித நீராட அனுமதி
ஆடி அமாவாசை, ஆடி 18ஆம் பெருக்கு நாளில் காவிரி ஆற்றின் கரைகளுக்கு மக்கள் செல்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்றும், விழா நடத்த ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.