கும்ப ராசி குட்டீஸ்களே... கருணையும் இரக்கம் கொண்ட அறிவாளிகள் நீங்கள்!
கும்பம் ராசியில் பிறந்த குழந்தைகள் அழகோடு கருணையும், இரக்கம் கொண்டவர்கள். அறிவாற்றல் நிறைந்தவர்கள்.
Recommended Video

சென்னை: கும்பம் ராசியில் பிறந்த குழந்தைகள் சிறந்த புத்திசாலிகளாக இருப்பதோடு, கருணையும் இரக்கமும் கொண்டவர்கள். அறிவியல் துறையில் சாதிப்பார்கள்.
குடத்தின் அமைப்பைக் குறிப்பது கும்பம். நீருடன் உள்ள கும்பம்தான் இதன் அடையாளம். குடத்தை திறந்து பார்த்தால்தான் உள்ளே இருப்பது தெரியும். இந்த ராசியில் பிறந்த குழந்தைகள் தனக்குள் இருப்பதை வெளியே தெரியாமல் வைத்திருப்பார்கள். தூண்டுகோல் இருந்தால்தான் துலங்குவார்கள். இல்லையெனில் உள்ளேயே விஷயங்களை வைத்துக் கொண்டு தவிப்பார்கள்.
கும்பம் ராசி ஆண் ராசி. ஸ்திர ராசி. காற்று ராசியும்கூட. இதற்கும் அதிபதி சனிதான்.
கும்ப ராசியின் ராசியாதிபதி சனி பகவானாவார். கால புருஷனின் அங்க அமைப்பில் இரண்டு கணுக்கால்களையும் குறிக்கும் கடைசி ஸ்திரராசியாகும். இது காற்று ராசியாக இருப்பதால், மிகுந்த புத்திக்கூர்மையைத் தரக்கூடியது. இந்த வீடு சுக்கிரனுக்கும் புதனுக்கும் நட்பு வீடு. சூரியன், சந்திரன், செவ்வாய், குரு ஆகியோருக்குப் பகை வீடு.

உண்மை நேர்மை
அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3 ம் பாதங்கள் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கும்ப ராசிக்காரர்களாக கருதப்படுவார்கள். இந்த குழந்தைகளிடத்தில் பல ஆற்றல்கள் குவிந்து கிடக்கும். பொய் சொல்லக் கூடாது. பித்தலாட்டம் கூடாது. நேர்மையா உழைச்சு சம்பாதிக்கணும் என்பதை தாரக மந்திரமாக கொண்டவர்கள்.

கவர்ச்சிகரமானவர்கள்
கும்ப ராசிக்காரர்கள் நீண்ட ஆயுளை பெற்றவர்கள். உயரமானவர்கள்,மெல்லிய உடல் கொண்டவர்கள். கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டவர்கள். பிறை போன்ற நெற்றியை கொண்டவர்கள். இவர்களின் கன்னம் ரோஸ் நிறத்தில் பளிச்சிடும். அழகான கண்கள், புருவங்களைக் கொண்டவர்கள். செதுக்கியது போன்ற மூக்கு, குவிந்த உதடுகள் கொண்டவர்கள். சிலரது தோற்றம் மாநிறம் கொண்டவர்கள். தொப்பை வயிறும், பின்புறம் பருத்து காணப்படும்.

புன்னகை மன்னர்
கழுத்து சிறுத்தும், பற்கள் உறுதியற்றும் இருக்கும். விரல்கள் கூர்மையாகவும், கைகளுக்கேற்றவாறு அமைந்திருக்கும். இவர்கள் உடுக்கும் உடை, உண்ணும் உணவு எல்லாமே மற்றவர்களுக்கு வினோதமானதாக இருக்கும் என்றாலும் ஆத்ம பலமும் மனோதிடமும் கொண்டிருப்பார்கள். எப்பொழுதும் புன்னகை மாறாத தோற்றத்துடன் காணப்படுவார்கள்.

கருணை, இரக்கம் கொண்டவர்கள்
அதிக அறிவாற்றல், கற்பனை சக்தி கொண்டவர்கள்.கருணை, இரக்கம், தாரளமனப்பான்மை கொண்டவர்கள். எப்பொழுதும் பிறருக்கு உதவும் உள்ளம் கொண்டவர்கள். கடின உழைப்பாளிகள். இலக்கியம்,இசை தத்துவ இயல், ஆகிய நூல்களைப் படிக்க ஆர்வம் காட்டுவார்கள். மகிழச்சிகரமானவர்.

நட்புக்கு மரியாதை
உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்ட இவர்களின் பேச்சிற்கு எந்த இடத்திலும் மதிப்பிருக்கும் தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிப்பார்கள். தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடுவதில் சாமர்த்தியசாலிகள். இவரிடம் அன்பு செலுத்தினால் அதற்கு மரியாதை செய்வார்கள். நட்புக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். அதிகாரத்தால் இவரை தலைவணங்கச் செய்ய முடியாது. அன்பும் அரவணைப்பும் கிடைத்தால் சாதிப்பார்கள். இவரை யாராவது புறக்கணித்தால் சோர்ந்து போவார்கள். மனத்தளர்ச்சி ஏற்பட்டு முடங்கி போவார்கள்.

வசதியான வாழ்க்கை
கும்ப ராசிக்காரர்கள் குடும்பத்தின் மீது பற்றற்றவர்களாகவே இருப்பார்கள். ஆனால் சமுதாயத்தைப் பெறுத்தவரை புகழ் பெருமையோடு வாழ்வார்கள். மணவாழ்க்கையப் பொறுத்தவரை வரக்கூடிய வாழ்க்கைத் துணையால் நல்ல உயர்வுகளைப் பெறுவார்கள். சொத்து சேர்க்கையும் உண்டாகும். சிறுசிறு சச்சரவுகள் வந்து நீங்கும்.

விஞ்ஞானி, ஆராய்ச்சியாளர்
கும்பம் காற்று ராசி. பத்தாம் இடமான வேலை ஸ்தானத்திற்கு அதிபதியாக விருச்சிக செவ்வாய் வருகிறார். இந்த ராசியில் பிறந்த குழந்தைகள் இலக்கியம், மனோதத்துவம் ஆகியவைகளை கற்க ஆர்வம் காட்டுவார். ஜோதிடர், வானவியல் நிபுணர், கட்டிடக்கலை நிபுணர், சிற்ப வேலைகள், தொல் பொருள் ஆராய்ச்சி படிக்க ஆசைப்படுவார்.
மின்சாரம், மின்னணுவியல். பொறியியல், விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிவார். சிலர் ராணுவம், தீயணைப்புத்துறைகளில் பணிபுரிவார்.

பணப்புழக்கம் அதிகமிருக்கும்
கும்பராசியில் பிறந்த குழந்தைகளுக்கு பண பற்றாக்குறை ஏற்படாது என்றாலும் சேமிக்கும் அளவிற்கு பணம் இருக்காது. யாருடைய பணமாவது இவர்களது கையில் புழங்கி கொண்டுதான் இருக்கும் வரவுக்கு மீறிய செலவுகளோ, ஆடம்பரமான செலவுகளோ செய்யமாட்டார்கள். வாழ்க்கையில் சுக துக்கங்கள் மாறி மாறி வந்தாலும் அவற்றை பற்றி பெரிய அளவில் காட்டி கொள்ளாமல் வாழ்வார்கள். ஆரம்ப கால வாழ்க்கை எவ்வளவு கஷ்டமானதாக இருந்தாலும் பிற்கால வாழ்க்கையில் பல வளங்களைப் பெற்று சிறப்போடு வாழ்வார்கள்.

நரம்பு தொடர்பான நோய்கள்
இந்த ராசி கணுக்கால் மற்றும் உடல் நரம்புகளைக் குறிக்கிறது. நரம்பு சம்பந்தமான வெரிகோஸ் என்னும் நோய் வரக்கூடும். இந்த ராசிக்காரர்களுக்கு மற்ற கிரகங்களின் கெட்ட பார்வை பட்டால், சோம்பேறித்தனம் பற்றிக்கொள்ளும். எப்போதும் கவலையுடனும், எதிர்மறை எண்ணங்களுடனும் இருப்பார்கள். கும்ப ராசியில் பிறந்தவர்கள் தங்களை நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வாழைத் தண்டு வாழைப் பழங்கள், பார்லி கீரை, வகைகள், காலிப்ளவர், கேரட், தக்காளி, பப்பாளி ஆகிய உணவுகளை சாப்பிடலாம்.

முருகனை வணங்குங்கள்
கும்பம் ராசியில் பிறந்த குழந்தைகளின் ராசி அதிபதி சனி பகவான். மூன்றாம் அதிபதி பத்தாம் அதிபதி செவ்வாய் பகவான். சனிக்கிழமைகளில் பெருமாள், செவ்வாய்கிழமைகளில் முருகன் வழிபாடு மிகவும் அவசியம். இதன் மூலம் வந்தவினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்ற சொல் கேட்டு கலங்கிடுமே.












Click it and Unblock the Notifications