ஆருத்ரா தரிசனம் : சிதம்பரத்திற்கு வெளியூர் பக்தர்கள் வர தடை - தேரோட்டத்தில் பங்கேற்க அனுமதியில்லை
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம், தேரோட்ட நிகழ்ச்சிகளில் வெளியூர் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவில் பங்கேற்க வெளியூர் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. சிதம்பரம் நகரில் தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் வெளியூர் பக்தர்கள் தங்குவதற்கு உரிமையாளர்கள் அனுமதிக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சிவபெருமானின் பஞ்சசபைகளில் பொற்சபையாக போற்றப்படுவது சிதம்பரம் நடராஜர் ஆலயம். இந்த ஆலயம் ஆகாய தலமாகவும் போற்றப்படுகிறது. ஆருத்ரா தரிசன விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 29ஆம் தேதி நடைபெறுகிறது. மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா 30ஆம் தேதி நடைபெறுகிறது.
கொரோனா பரவல் காலமாக இருப்பதால் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விழாவில் பக்தர்கள் பங்கேற்பது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பித்துள்ளது. அதனை பின்பற்றி நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா நேற்று முதல் வருகிற 31ஆம் தேதி வரை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ளது.
28ஆம் தேதி தங்க தேரோட்டத்தை நடத்த 100 பேருக்கும், 29ஆம் தேதி நடராஜர் தேரோட்டத்துக்கு 1,000 பேர், சிவகாம சுந்தரி அம்மன் தேரோட்டத்துக்கு 400 பேர், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் தேரோட்டங்களுக்கு தலா 200 பேர்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
சனிப்பெயர்ச்சி பலன் 2020-23 - கன்னி ராசிக்காரர்களுக்கு புண்ணிய சனியால் தடைகள் நீங்கும்
சிதம்பரம் நகரில் தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் வெளியூர் பக்தர்கள் தங்குவதற்கு உரிமையாளர்கள் அனுமதிக்கக்கூடாது. 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் விழாவில் பங்கேற்கக்கூடாது.
ஆருத்ரா தரிசன விழாவை வீடுகளில் இருந்தே காணும் வகையில் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.