மயிலாப்பூரில் களைகட்டிய அறுபத்து மூவர் திருவிழா - பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நடந்து வரும் பங்குனி திருவிழாவின் ஒரு பகுதியாக நேற்று 63 நாயன்மார்கள் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.
சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான அறுபத்து மூன்று நாயன்மார்கள் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதற்காக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் 63 நாயன்மார்கள் வீதி உலா வந்ததை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் சனிக்கிழமை நடந்தது. கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருத்தேரில் எழுந்தருளினார்.
பங்குனித்திருவிழாவின் முக்கிய அம்சமாக விழாவின் எட்டாம் நாளில் நேற்று காலையில் திருஞானசம்பந்தர் சுவாமிகள் எழுந்தருளல் நிகழ்ச்சியும், தொடர்ந்து அங்கம் பூம்பாவையாக்கி அருளுதல் நிகழ்ச்சியும் நடந்தது.

அறுபத்து மூவர் திருவிழா
முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் திருவிழா நேற்று மதியம் 3 மணிக்கு நடந்தது. நாயன்மார்கள் பல்லக்குக்கு முன்பாக மயிலாப்பூர் காவல் தெய்வம் கோலவிழி அம்மன், விநாயகர், கபாலீசுவரர், கற்பகாம்பாள், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், சண்டிகேசுவரர் மற்றும் முண்டககண்ணியம்மன், அங்காளபரமேஸ்வரி, வீரபத்திரர் சுவாமிகள் தனித்தனி பல்லக்குகளில் எழுந்தருளினர்.

கோலவிழியம்மன்
கிராமதேவதையான கோலவிழியம்மன் அலங்காரமாக முன்னே வர பக்தர்கள் தங்களின் குழந்தைகளை கோலவிழியம்மனிடம் கொடுத்து ஆசி பெற்றனர். இவரைத் தொடர்ந்து விநாயகர் சப்பரத்தில் எழுந்தருளினார்.

சப்பரத்தில் அறுபத்தி மூவர்
63 நாயன்மார்கள் இறைவனை பார்த்த வண்ணமே மாட வீதிகளில் உலா வந்தனர். பல்லக்குகள் முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலை வந்து அடைந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாட வீதிகளில் வீதி உலா
இந்த சப்பரங்களுடன் திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் தனிதனியாக பெரும் பல்லக்குகளில் உடன் நான்கு மாட வீதிகளை வலம் வந்தனர். அப்போது, கூடியிருந்த பக்தர்கள் கபாலீ கபாலீ என என முழக்கமிட்டனர்.

வெள்ளி சப்பரத்தில் கபாலீஸ்வரர்
கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளினார். இந்த கண்கொள்ளா காட்சியை காண சென்னை மட்டுமின்றி சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். விடிய விடிய மாட வீதிகளில் கூட்டம் அலைமோதியது.

பக்தர்கள் அன்னதானம்
அப்போது, பெண்கள் பலர் கோவிலை சுற்றி உள்ள மாடவீதிகளில் மண்பானையில் சர்க்கரை பொங்கல் வைத்து சாமிக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கினர். இவ்வாறு செய்வதன் மூலம் தீராத நோய்களும் குணமடையும் என்பது நம்பிக்கையாகும். பக்தர்கள் பலர் பந்தல்கள் அமைத்தும், வீட்டு முற்றங்களிலும் நீர்மோர், குளிர்பானங்கள், அன்னதானம் வழங்கினர்.

திருக்கல்யாணம்
இன்று மாலை இறைவன் பிச்சாடனார் மற்றும் ஐந்திருமேனிகள் விழாவும், 11ம் தேதி மாலை 6 மணியளவில் புன்னை மரத்தடியில் உமாதேவியார் மயிலுருவுடன் மாதேவரை வழிபடல், இரவு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும் 12ம் தேதி உமா மகேஷ்வர் தரிசனமும், பந்தம் பறி விழாவும், 13ம் தேதி விழா நிறைவடைகிறது.












Click it and Unblock the Notifications