சித்திரை அமாவாசை: விரதமிருந்து வழிபட்டால் முன்னோர்கள் சூரியபகவானின் அருளும் ஆரோக்கியமும் கிடைக்கும்
சித்திரை மாதத்தில் சூரிய பகவான் மேஷ ராசியிலேயே உச்சமடைகிறார். உடல் ஆரோக்கியம், அந்தஸ்து, கம்பீரம் ஆகியவை வேண்டுபவர்கள் இன்றைய தினம் முன்னோர்களையும் சூரியபகவானையும் வணங்க வேண்டும்.
மதுரை: சித்திரை அமாவாசை மே 11 ஆம் தேதி சித்திரை 28 ஆம் நாள் செவ்வாய் கிழமையில் வருகின்றது. சித்திரை மாத அமாவாசை தினத்தில் பித்ரு கடமை செய்வது மிகுந்த நற்பலன்களை தரும். உடல் ஆரோக்கியம், அந்தஸ்து, கம்பீரம் ஆகியவற்றைத் தரும் வள்ளலான சூரியபகவான் இந்த மாதம் முழுவதும் மேஷ ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். இந்த நாளில் விரதமிருந்து முன்னோர்களையும், சூரிய பகவானையும் வணங்க வேண்டும்.
சூரப்பாவின் விளக்கம் திருப்தியாக இல்லாவிட்டால்... நடவடிக்கைக்கு பரிந்துரை.. விசாரணை ஆணையம் அதிரடி..!
பொதுவாக, அமாவாசை திதி முன்னோர்கள் வழிபாட்டுக்கு உகந்ததாகக் கருதப்படுவது. இந்தநாளில் செய்யும் தர்ப்பணம் முதலிய வழிபாடுகள் முன்னோர்களின் நல்லாசியைப் பெற்றுத்தரும் என்பது ஐதிகம். நாளை சித்திரை மாத அமாவாசை. இந்த நாள் மிகவும் விசேஷமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அதிலும் சூரியபகவானின் அருளைப் பெற்றுத்தரும் தினமாக இந்த அமாவாசை விளங்குகிறது என்கிறார்கள் அடியவர்கள்.
பிலவ தமிழ் தமிழ் புத்தாண்டின் முதல் மாதமான சித்திரை அமாவாசை தினத்தில் நாம் முன்னோர்களின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து, படையல் வைத்து தர்ப்பணம் கொடுத்து வணங்க வேண்டும். இன்றைய தினம் அன்னதானம் கொடுப்பதன் மூலம் பல தலைமுறைகளுக்கும் தோஷங்கள் நீங்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வீட்டில் உள்ள துஷ்ட சக்திகளின் பாதிப்பு நீங்கும்.
சித்திரை அமாவாசை
சித்திரை மாதத்தை மேஷ மாதம் என்பார்கள். சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலமே சித்திரை. ஜோதிடத்தில் நவக்கிரகங்களில் சூரியன் முக்கியமான கிரகமாகப் போற்றப்படுகிறார். சூரியன் ஆத்மகாரகன் மற்றும் பித்ருகாரகன். ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் நல்ல நிலையில் ஆட்சிபலம் பெற்றிருந்தால் அந்த நபர் நல்ல ஆரோக்கியமான வாழ்வைப் பெற்றிருப்பார் என்பது ஜோதிட நம்பிக்கை.
பித்ரு வழிபாடு
சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் சஞ்சரிக்கும் நாளே அமாவாசை. நாளை சந்திரனும் மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளார். சூரியனும் சந்திரனும் சந்திக்கும் இந்த நாளில் குறிப்பாக, சூரியன் மேஷ ராசியில் உச்சமடைந்திருக்கும்போது செய்யப்படும் பித்ருவழிபாடுகள் பூர்வ புண்ணியத்தை அதிகப்படுத்தும் என்கிறார்கள்.
முன்னோர் வழிபாடு
சித்திரை அமாவாசை மே 11 ஆம் தேதி சித்திரை 28 ஆம் நாள் செவ்வாய் கிழமையில் வருகின்றது.
செவ்வாய்கிழமை மேஷ ராசிக்கு உகந்த நாள். இந்த நாளில் வழக்கமாகத் தர்ப்பணங்கள் செய்பவர்கள் வீட்டிலேயே தவறாமல் செய்ய வேண்டும். தர்ப்பணம் செய்யும் வழக்கமில்லாதவர்கள் வீட்டில் சாதம் வடித்து அதில் எள் சேர்த்துக் காக்கைக்கு உணவிட வேண்டும். தங்களின் மூதாதையர்களின் படங்களுக்கு பூக்கள் வைத்து கற்பூரம் காட்டி வழிபட வேண்டும்.
சூரிய வழிபாட்டினால் ஆரோக்கியம்
சூரியனுக்கு உகந்த ஆதித்ய ஹ்ருதயத்தைப் பாராயணம் செய்தல் அல்லது அதைக் கேட்பது மிகவும் பயன்தரும். விஷ்ணு சகஸ்ரநாமப் பாராயணம் செய்வது நல்லது. இன்றைக்கு நம் அனைவருக்கும் தேவை நல்ல ஆரோக்கியம். அதை அருளும் சூரிய பகவானை வழிபட்டு நம் முன்னோர்களின் ஆசிகளையும் சூரியனின் அருளையும் தவறாமல் பெறுவோம்.
விளக்கேற்றி வழிபடுங்கள்
நோய்பரவல் காலம் என்பதால் புனித நீர் நிலைகளில் நீராடவும் பித்ரு தர்ப்பணம் செய்யவும் தடை உள்ளது. எனவே சித்திரை அமாவாசை நாளில் நம் வீட்டிலேயே முன்னோர்களை வழிபடுவதோடு பசியோடு இருக்கும் சிலருக்கு தயிர்சாதம் கொடுக்கலாம், அன்னதானம் செய்யலாம். இதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். பசுவிற்கு வாழைப்பழம், அகத்திக்கீரை கொடுக்கலாம். காலை மாலை நேரங்களில் வீட்டு பூஜையறையிலும் வீட்டு வாசலிலும் விளக்கேற்றலாம்.