மதுரை சித்திரை திருவிழா: கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்...மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம்
கருடவாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்தார். இந்த நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பானது.
மதுரை: அழகர்மலையில் உள்ள அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் கருட வாகனத்தில் காட்சியளித்த கள்ளழகர் வைகை ஆற்றில் தன்னை நினைத்து தவமிருந்த மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்தார். பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெற்ற இந்த புராண நிகழ்ச்சி கோவில் யூடியூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பானது.
அழகர்கோவிலில் உள்ள சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் சித்திரை மாதம் தொடங்கி பங்குனி மாதம் வரை பல திருவிழாக்கள் நடைபெற்றாலும் சித்திரை பெருந்திருவிழா சிறப்பு வாய்ந்தது. சித்திரை மாதத்தில்தான் மலையை விட்டு இறங்கி வரும் கள்ளழகர் எனப்படும் சுந்தரராஜ பெருமாள் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
சித்திரை மாதத்தில் அழகர் கோவிலிலிருந்து கள்ளழகர் ஆக கண்டாங்கி சேலை உடுத்தி தங்க பல்லாக்கில் கிளம்பி மதுரைக்கு வருவார். அவரை லட்சக்கணக்கான பக்தர்கள் எதிர்கொண்டு அழைப்பார்கள். சித்ரா பவுர்ணமி தினத்தில் தல்லாகுளத்தில் ஆண்டாள் சூடி கொடுத்த மாலையை அணிந்து கொண்டு தங்கக்குதிரை வாகனத்தில் ஏறி வந்து ஆற்றில் இறங்குவார் கள்ளழகர். சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் தோனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து சாபவிமோசனம் தருவார். அழகரை தரிசிக்க அவர் கூடவே லட்சக்கணக்கான பக்தர்களும் பயணப்படுவார்கள். கொரோனா வைரஸ் 2ஆம் அலை பரவல் காரணமாக சென்ற ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் கோவில் உள் பிரகாரத்தில் விழாக்கள் நடைபெற்று வருகின்றன.

சாபம் கொடுத்த துர்வாசர்
முன்னொரு காலத்தில் சுதபஸ் மகரிஷி நூபுர கங்கையில் தீர்த்தமாடி, அழகர் சுந்தரராஜ பெருமாளை நோக்கி தவம் மேற்கொண்டிருந்தார். அந்த சமயம் அங்கு வந்த துர்வாச முனிவரை அவர் கவனிக்க வில்லை. அதனால் துர்வாசர் கோபம் கொண்டு, 'மண்டூக பவ' என்று சாபமிட்டு விடுகிறார். ஒரு தவளையாகப் போகும்படி தன்னை சபித்த துர்வாசரிடம், சுதபஸ் மகரிஷி சாப விமோசனம் கோரினார். துர்வாசர் அறிவுறுத்தியபடி மதுரை வைகை நதிக் கரையில் சுதபஸ் தவம் இயற்றினார். சித்திரை மாத பௌர்ணமிக்கு அடுத்தநாள் பெருமாள் கருட வாகனத்தில் காட்சியளித்து, சுதபஸ் மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்தார். இதனை அடிப்படையாகக் கொண்டு பிற்காலத்தில் இவ்விழா துவக்கப்பட்டது.

சைவ வைணவ இணைப்பு விழா
திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்னால்வரை பெருமாள் அழகர் மலையில் இருந்து புறப்பட்டு அலங்காநல்லூர் வழியாக தேனூர் கிராமத்தில் வைகை ஆற்றில் இறங்கி, வைகை வடகரையோரத்தில் சுதபஸ் மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த நிகழ்ச்சி நடைபெற்றது. திருமலை நாயக்கர் மதுரையை ஆண்டபோது சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக மாசி மாதத்தில் நடைபெற்று வந்த மீனாட்சி கல்யாணத்தை சித்திரை மாதத்திற்கு மாற்றினார்.

வைகையில் எழுந்தருளிய கள்ளழகர்
கொரோனா வைரஸ் 2ஆம் அலை பரவல் காரணமாக சென்ற ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் கோவில் உள் பிரகாரத்தில் சித்திரை திருவிழா நடைபெற்றது. ஆகம விதிப்படி செவ்வாய்கிழமையன்று காலையில் தங்கக்குதிரை வாகனத்தில் ஏறி கள்ளழகர் தரிசனம் கொடுத்தார். ஆடி வீதி நந்தவனத்தில் தத்ரூபமாக அமைக்கப்பட்ட மாதிரி வைகை ஆற்றில் எழுந்தருளினார்.

மண்டூக மகரிஷிக்கு மோட்சம்
தொடர்ந்து 6வது திருவிழாவான நேற்று காலை 8 மணிக்கு கோவில் உள் பிரகாரத்தில் சைத்திய உபசார சேவை பக்தி உலாத்தல் நடந்தது.புதன்கிழமை காலை சேஷ வாகனத்தில் கள்ளழகர் புறப்பாடு நடந்தது. இதனைத் தொடர்ந்து 7ஆம் நாள் திருவிழாவாக இன்று காலை 10 மணிக்கு கருட வாகனத்தில் சுந்தரராஜ பெருமாளாக எழுந்தருளினார். இதனையடுத்து புராணம் வாசித்தல், மண்டூக மகரிஷி முனிவருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருமஞ்சனம்
8ஆம் நாள் திருவிழாவாக நாளை 30ஆம் தேதி காலை 10 மணிக்கு புஷ்ப பல்லக்கு நடைபெறும். தொடர்ந்து 9ஆம் நாள் திருவிழாவாக மே 1ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு அர்த்த மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். 10ஆம் நாள் திருவிழாவாக மே 2ஆம் தேதி காலை 10 மணிக்கு திருமஞ்சனம் உற்சவ சாந்தி நிகழ்ச்சி நடைபெறும். இத்துடன் இந்த சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.












Click it and Unblock the Notifications