வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா அமோகம்.. அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.மே 10 ஆம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல், மே 13 ஆம்தேதி தேர் நிலைக்கு வருதல், முத்துச் சப்பரத்தில் அம்மன் திரு
தேனி: தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 17ம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடக்க நிகழ்வாக கண்ணீஸ்வரமுடையார் கோயில் முல்லைப் பெரியாற்றில் இருந்து கோயிலுக்கு முக்கொம்பு வடிவிலான கம்பம் கொண்டு வரப்பட்டு கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.
கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி பக்தர்கள் வழிபட்டனர். பின்னர் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் அனைவரும் காப்புக் கட்டிக் கொண்டனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் இன்று தொடங்கி வரும் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று இரவு முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
முல்லை பெரியாற்றில் நீராடி நேர்த்திக்கடனுக்காக நீர் எடுத்து வந்து முக்கொம்பு வடிவிலான கம்பத்தில் ஊற்றி அம்மனை வழிபடுதல் மற்றும் தீச்சட்டி எடுத்தல்,அலகு குத்துதல் மற்றும்,மாவிளக்கு எடுத்தல் போன்ற அனைத்து நேர்த்திக்கடன்களையும் பக்தர்கள் நேற்று கடந்த 17ம் தேதி முதலே செலுத்தி வருகின்றனர்.
மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டிய நாட்டின் மன்னன் வீரபாண்டியன் தனது ஊழ்வினைகளால் இரண்டு கண்களின் பார்வையை இழந்தான். தனக்கு கண் பார்வை வேண்டி பல கோயில்களுக்குச் சென்றான். ஒரு நாள் அவனது கனவில் தோன்றிய சிவபெருமான் வீரபாண்டியில் தவமிருக்கும் கௌமாரியம்மனை வணங்கி அதன்பிறகு கண்ணீசுவரமுடையார் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கண் பார்வை கிடைக்கும் என்று சொன்னார். அதன்படி அந்த மன்னனும் இந்தப் பகுதிக்கு வந்து கௌமாரியை வணங்கி ஒரு கண்ணின் பார்வையும், கௌமாரி பூஜித்து வ்ந்த சிவலிங்கமான கண்ணீசுவரமுடையாரை வணங்கி மற்றொரு கண்ணின் பார்வையையும் பெற்றான். அதன் பின்பு கண்ணீசுவரமுடையாருக்கு கற்கோயிலும், கௌமாரியம்மனுக்கு சிறிய கோயில் ஒன்றையும் அமைத்து வழிபாடு செய்தான் என்று இக்கோயிலின் தல வரலாறு குறித்து சின்னமனூர் அரிகேசரி நல்லூர் தல புராணத்தில் பதினான்காம் படலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அட்சய திருதியை 2019: தங்கம் வாங்குவதை விட தானம் செய்தால் தலைமுறைக்கும் புண்ணியம் சேரும்
அம்மை நோய் தீர்க்கும் அம்மன்
பாண்டிய மன்னனுக்குக் கண் பார்வை தந்த இந்தக் கோயிலில் வணங்கிச் செல்பவர்களுக்கு அம்மை மற்றும் கோடைக்கால அனைத்து வெப்ப நோய்களும் நீங்கி விடும் என்கிற நம்பிக்கை உள்ளது. இந்தக் கோயிலின் தீர்த்தமாகக் கோயிலுக்கு அருகே ஓடும் முல்லை நதியின் நீர் பயன்படுத்தப்படுகிறது.
அக்கினிச்சட்டி ஏந்திய பக்தர்கள்
கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்வற்கு ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் வரும் மே 5 ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அக்கினிச்சட்டி நேர்த்திக் கடன் செலுத்துவதற்கு
இன்று முதல் 14 ஆம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று இந்து
சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அம்மன் புறப்பாடு
நேற்று இரவு முதல் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களின் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இன்று மலர் விமானத்தில் அம்மன் கோயிலுக்கு பவனி வருதல், நாளை முத்துப் பல்லக்கில் அம்மன் புறப்பாடு, மே 9 ஆம் தேதி புஷ்ப பல்லக்கில் அம்மன் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மே 10 ஆம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல், மே 13 ஆம்
தேதி தேர் நிலைக்கு வருதல், முத்துச் சப்பரத்தில் அம்மன் திருத் தேர் தடம் பார்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். மே 14 ஆம் தேதி ஊர் பொங்கல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.
குவியும் பக்தர்கள்
இந்தக் கோயில் திருவிழாவை முன்னிட்டு எட்டு நாட்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்வார்கள் என்பதால்
காவல் துறையின் சார்பாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 750 காவலர்கள் இரவு பகலாக பணியில் இருப்பார்கள் என்றும், அவர்களுக்கு உதவியாக ஊர்க்காவல் படையினரும் செஞ்சிலுவைச் சங்கத்தினரும் இருப்பார்கள் என்றும் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
சிறப்பு பேருந்துகள்
பக்தர்களின் வசதிக்காக மாவட்டத்தின் முக்கிய நகரங்களான பெரியகுளம்,ஆண்டிபட்டி,தேனி, போடிநாயக்கனூர் , கம்பம், சின்னமனூர் , தேவாரம் ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வதற்காக 24 மணி நேரமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பயணிகள் வசதிக்காக பேருந்துகள் மற்றும் . தனிநபர் வாகனங்கள் மற்றும் வாடகை இலகுரக வாகனங்கள் அனைத்தும் வீரபாண்டிக்குள் செல்லாமல் வீரபாண்டி புறவழிச்சாலை வழியாக செல்ல இந்த ஆண்டு முதல் முறையாக அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பக்தர்கள் வழிபாடு
வழிபாட்டுடன் தங்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் ஒரு சாதகமாக பொழுதைக் கழிக்கும் வகையில் பல்வேறு வகையான இராட்டினங்கள் மற்றும் சர்க்கஸ், மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் நிறைந்து இருப்பதால் குழந்தைகள் குதூகலமாக கொண்டாடி வருகின்றனர். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நூற்றுக்கணக்கான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் பலன் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வீரபாண்டியில் இருந்து
செய்தியாளர் ராதாகிருஷ்ணன்.