சித்ரா பவுர்ணமி : விவசாய நிலத்தில் கரும்பு பந்தல்...மாடுகளுக்கு பூஜை - 104 ஆண்டு பாரம்பரியம்
மதுரை அருகே ஊமச்சிகுளம் கிராமத்தில் ஆயிரக்கணக்கான கிடை மாடுகளை விவசாய நிலத்தில் நிறுத்தி பூஜை செய்து, வழிபாடு நடத்தப்பட்டது.
மதுரை: கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சித்ரா பவுர்ணமி நாளில் ஆயிரக்கணக்கான கிடை மாடுகளை விவசாய நிலத்தில் நிறுத்தி பூஜை செய்து, வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் மதுரை அருகே உள்ள ஊமச்சிகுளம் கிராம மக்கள்.
104 ஆவது ஆண்டாக நடந்த இந்நிகழ்வில், ஊரின் எல்லையில் விவசாய நிலத்தில் மாடுகள் நிறுத்தப்பட்டன. அவற்றின் முன்பாக கரும்பு பந்தல் அமைக்கப்பட்டு, மாடுகளை மேய்க்கும் கீதாரிகள், அழகுமலையானுக்கு பொங்கலிட்டு பூஜைகள் செய்தனர்.
பின்னர், மாடுகளுக்கும் தீபாராதனை செய்து, சர்க்கரைப் பொங்கலை அவற்றுக்குப் பிரசாதமாகக் கொடுத்து வழிபட்டனர். இவ்வாறு செய்வதால் மாடுகளும், கன்றுகளும் நோயின்றி வளரும். விவசாயம் செழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

100 கீதாரிகளுக்கு மரியாதை
இந்த நிகழ்வினையொட்டி, மாடுகளை மேய்க்கும் கீதாரிகளை மரியாதை செய்யும் விதமாக, தென்மாவட்டங்களில் உள்ள 100 கீதாரிகளுக்கு வேட்டி, துண்டுகள் கொடுத்து மரியாதை செய்யப்பட்டது.
இந்த விழா குறித்துப் பேசிய மாட்டு உரிமையாளர்களில் ஒருவரான டி.சேகர் கூறும்போது, "சுமார் 130 வருடங்களுக்கு முன்பாக, எங்கள் முன்னோரான வே.நாராயண கோனார் என்ற விவசாயி, இப்பகுதியில் பெரும் செல்வந்தராக இருந்தார். நிலம், சொத்து, செல்வாக்கு என வாழ்ந்தவருக்கு குழந்தை இல்லை.

கள்ளழகர் அருள்
ஒரு சித்ரா பவுர்ணமியன்று, முத்துச்சாமியாடி என்னும் பெருமாள் பக்தர், கள்ளழகரை தரிசிக்க இராமநாதபுரத்திலிருந்து வந்திருந்தார். அவர் குறி சொன்னதை கேட்டு கள்ளழகரை வேண்டி, கிடை மாடுகளை நேர்த்திக் கடனாக விட்டுள்ளார் நாராயணக்கோனார். மாடுகள் நேர்ந்து விடப்பட்ட சில மாதங்களிலேயே, அவருக்கு பிள்ளைகள் பிறந்தன.

5 தலைமுறைகாக வழிபாடு
எனவே, ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி அன்றும் அந்த மாடுகளை பூஜிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார். அவர் காலத்திற்குப் பிறகு 5 வது தலைமுறையாக நாங்களும் அந்த பாரம்பரியத்தை தொடருகிறோம். அந்த மாடுகளே தற்போது பல்கிப்பெருகி ஆயிரக்கணக்கில் உள்ளன" என்றார்.

இலவசமாக பால்
"கள்ளழகர் கோயிலுக்கு நேர்ந்துவிடப்பட்ட இந்த நாட்டு மாடுகள் மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாய நிலங்களுக்கு கிடை மாடுகள் ஆக அனுப்பப்படுகின்றன. 'இந்த மாட்டையும், மாடுகளின் பாலையும் விற்க மாட்டோம்'. "குழந்தைக்காக கேட்டு வருவோருக்கு, 'இல்லை' என்று சொல்லாமல் பணம் வாங்காமல் பால் கொடுக்க வேண்டும்" என்பதும் நாங்கள் கடைப்பிடிக்கும் வழக்கம்.

வருமானம்
இந்த மாட்டின் மூலமாக கிடைக்கக்கூடிய வருமானம் அனைத்தும் மாடுகளை மேய்க்கும் கீதாரிகளுக்கே சொந்தம். ஒரு பைசா கூட நாங்கள் எடுக்க மாட்டோம். 5 தலைமுறைகளாக இந்த நடைமுறையை பின்பற்றி வருகிறோம்" என்கிறார் மாட்டு உரிமையாளர் தலைமுறையைச் சேர்ந்த ஜி.நவநீதகிருஷ்ணன்.
நமது கிராமங்கள் பாரம்பரியமாக பல பழக்க வழக்கங்களை தொன்றுதொட்டு பின்பற்றி வருகின்றன. அவற்றுக்கு உதாரணமாக அமைந்துள்ளது இந்த இந்த நிகழ்வு.












Click it and Unblock the Notifications