அரசு வேலை கிடைக்கும் இந்திராஸ்திர ஹோமம்... துஷ்ட சக்திகளை விரட்டும் தூமாவதி யாகம்
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் துவாதசியான இன்று அரசு வேலை, சொத்து சுகங்கள், புகழ், அந்தஸ்து, உயர் பதவி, மதிப்பு கிடைக்க இந்திராஸ்திர ஹோமம் நடைபெறுகிறது.
வேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வளர்பிறை துவாதசி திதியில் இந்திராஸ்திர ஹோமம் நடைபெறுகிறது. 25.06.2018 திங்கள்கிழமை மாலை 4.30 மணி முதல் உலக நலன் கருதி தூமாவதீ யாகம் நடைபெற உள்ளது.
தேவேந்திரனை வழிபட்டு, பதவி சுகங்களை அருளும்படி வேண்டி அருள் பெற இந்திராஸ்திர ஹோமம், பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று நடைபெற உள்ளது.
பூர்வ புண்ணியமும், ஜாதகத்தில் பதவி யோக அமைப்பும், ஒருவருக்கு நன்முறையில் அமைந்தால் இந்திர பதவிக்கு நிகரான பதவி வாய்ப்பு தானாகத் தேடி வரும் என்கிறது புராணங்கள். இந்த யாகம் தகுதி அடிப்படையில் பதவி உயர்வுக்காகக் காத்திருக்கும் அரசுப் பணியாளர்கள் உயர்பதவி பெறவும், தடை செய்து வைத்திருக்கும் பதவி உயர்வை திரும்பப் பெறவும், பணி இடமாற்றத்தால் ஏற்படும் மனச்சங்கடங்கள் நீங்கவும், குடும்பத் தலைவனின் புகழ், அந்தஸ்து உயர்வடைந்து குடும்பம் மேன்மை அடையும், குடும்பத்தில் மதிப்பு உயரவும், பணிகளில் உள்ளவர்களுக்கும் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கும் ஏற்படும் எதிர்ப்புகள் விலகவும், சொத்து சுகங்களை இழந்து தவிப்பவர்களுக்கு வாழ வழி பிறக்கவும் நடைபெற உள்ளது.
இந்த யாகத்தில் வெண்தாமரை, நெய், நாயுருவி, வெண்கடுகு, புரசு சமித்து, வெற்றிலை, உப்பு, நீரில் நனைத்த கொள்ளு, சர்க்கரை பொங்கல், தும்பை, அருகம்புல் மற்றும் விசேஷ திரவியங்களும், பட்டு வஸ்திரங்களும் சேர்க்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து வாஸ்து பகவான் பீட்த்தில் உள்ள இந்த்ர தேவனுக்கு மஹா அபிஷேகம் நடைபெற உள்ளது.
துஷ்ட சக்திகளை விரட்டும் தூமாவதீ ஹோமம் 25.06.2018 திங்கள்கிழமை மாலை நடைபெறுகிறது. மஹா லக்ஷ்மி, மஹா ஸரஸ்வதி, மஹா காளி ஆகிய முப்பெரும் தேவியரின் கிருபா கடாக்ஷத்தின் மூலமாக கல்வி, செல்வம், ஞானம், ஐஸ்வர்யம், சௌபாக்யம், வீரம், மனோபலம், தைரியம், புத்திர்பலம் அனைத்தும் பெற இந்த சாமுண்டி நவாக்ஷரி ஹோமமும் துஷ்ட கிரகங்கள், துஷ்ட சக்திகள், கண்திருஷ்டி, ஏவல், பில்லி, சூன்னியம், சத்ருக்கள், எதிரிகள், கண்டங்கள், விபத்துக்கள், ஆபத்துக்களை தடுக்க தூமாவதீ ஹோமமும் தன்வந்திரி பீடத்தில் 25.06.2018 திங்கள்கிழமை மாலை நடைபெறுகிறது. இதில் சென்னை சாக்தஸ்ரீ ஸ்ரீ விஸ்வரூப மஹாப்ரத்யங்கிரா தேவி உபாசகர். அஷ்ட மங்கள தேவ பிரச்சன்ன ஜோதிடர் திரு. கார்த்திக் விஸ்வநாதன் அவர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்.
தசமகா வித்யா தேவியரில் ஏழாவது தேவியாக அருள்பவள் தூமாவதீ. புகை என்ற தூமத்திலிருந்து ஆவிர்பவித்ததால் வந்த இத்தேவி தூமாவதீ எனப் பெயர் பெற்றாள். பால்குன மாதம், செவ்வாய்க்கிழமை, அக்ஷய திருதியை சாயங்கால வேளையில் இத்தேவி தோன்றியருளினாள்.
வேண்டாத துர்குணங்கள் உமியைப் போல் தேவியின் திருவருளால் பறந்து போகின்றன; தீவினைகள் களையப்படுகின்றன. இத்தேவியின் மகாமந்திரம், எட்டு அட்சரங்கள் கொண்டது. அது நமக்கு ஆன்மிக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும். அஞ்ஞானத்தை விலக்கும். அனைத்துவித சித்திகளையும் தரவல்லது. பகைவர் மீது வெற்றி, அறியாமையிருள் விலகுதல், நல்லறிவு கிட்டுதல் போன்ற அனைத்தையும் இத்தேவியின் உபாசனை மூலம் நாம் பெறலாம்.
இவளையே ஜ்யேஷ்டா, ஆர்த்ரபடி, மர்கடீ, கர்மடீ என்று வெவ்வேறு பெயர்களில் வழிபடுவோரும் உண்டு. புராணங்கள் இவளை ப்ராந்தி என்றும் வேதங்கள் ராக்ரி என்றும் போற்றுகின்றன. நம்முடைய மரணத்திற்கும் மறுபிறவிக்கும் இடையே உள்ள இடைவெளியை இவள் பூர்த்தி செய்வதாக தேவி வழிபாட்டில் கூறப்பட்டுள்ளது. மேலும் அகாரம் முதல் க்ஷகாரம் வரையுள்ள ஐம்பத்தோரு அட்சரங்களால் ஆன துதியும் மந்த்ரமஹார்ணவம் எனும் நூலில் காணப்படுகிறது.
தூமாவதி தேவியின் ஹோமம் சகல காரியசித்தி பெறவும் சத்ரு ஜெயம், காம, குரோத, லோப நாசம், பெரும் கஷ்டம், நோய், எதிரி தொந்தரவு இவற்றிலிருந்து விடுபடவும் நல்ல ஞானம், நற்பண்புகள், நற்குணங்கள், நல்லறிவு பெற்று விளங்கவும் வழிவகுக்கிறது.
தூமாவதீ தேவியின் பாத கமலங்களைப் பணிந்து தீமைகளை அழிப்போம். பெருங்கஷ்டத்திலும் மகா சங்கடத்திலும் பெரும் நோயாலும் அவதிப்படும்போதும் சத்ருக்களால் துன்பம் நேரும்போதும் இவளை துதித்தால் அத்துன்பங்களிலிருந்து விடுபடலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இத்தேவியின் யாகத்தின் மூலம் சகல ஐஸ்வர்யங்களையும், உயர் பதவிகளை அடையலாம். ஆகாயத்தில் சூரியனை மேகக் கூட்டங்கள் மறைப்பதைப் போல நம் ஆத்ம ஸ்வரூபத்தை அறியாமை என்ற இருள் மூடியுள்ளது. அவ்விருட்டை தூமம் அதாவது புகை என்று குறிப்பிடுவர். இத்தேவியை வழிபட அந்தப் புகை போன்ற மன இருளை அகற்றி, மேலான ஆத்ம ஞானத்தை அடையலாம் எனச் சொல்லப்பட்டுள்ளது புராணங்கள். இதில் பங்கேற்க விரும்பவர்கள் மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுக்கலாம். ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. 04172 - 230033, செல் - 9443330203.