ஐயப்பன் இருமுடியில் பன்னீர் கொண்டு வர வேண்டாம் - சபரிமலை தந்திரி வேண்டுகோள்
பன்னீரில் ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதால், அவற்றை ஐயப்பன் பூஜைக்கு பயன்படுத்துவதில்லை. அதனால், பன்னீரை பக்தர்கள் மீதே தெளித்துவிட்டு பிளாஸ்டிக் பாட்டில்களையும் அப்படியே போட்டுவிட்டு செல்கின்றனர். இதை ஒழிப்பது மிகப்பெரும் சவாலாக உள்ளது.
இருமுடி கட்டில், நெய் தேங்காய், காய்ந்த அரிசி, மஞ்சள் பொடி, காணிக்கை ஆகியவற்றை கொண்டு வந்தால் போதுமானது. அவல், பொரி போன்றவை தேவையில்லை. குறிப்பாக மஞ்சள் பொடி பிளாஸ்டிக் பைகளில் கிடைத்தால் அவற்றை இலை அல்லது பேப்பர்களில் மடித்து வைத்து கொண்டுவந்தால் மிக நல்லது.
பட்டனம் திட்டா: சபரிமலை ஐயப்பனை தரிசிப்பதற்காக விரதம் இருந்து இருமுடி கட்டிக்கொண்டு வரும் பக்தர்கள், இருமுடியில் பன்னீர் பாட்டில் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என்று சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு வேண்டுகொள் விடுத்துள்ளார். சபரிமலையில் பிளாஷ்டிக்கை தவிர்ப்பதற்காகவும், பன்னீரில் ரசாயன பொருட்கள் கலந்துள்ளதால், அதை பூஜைக்கு பயன்படுத்துவதில்லை என்பதாலும் இவ்வாறு வேண்டுகொள் விடுத்துள்ளார்.
பிளாஸ்டிக் பயன்பாடு என்பது இன்றைக்கு நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக மாறிவிட்டது என்பது தான் உண்மை. ஒரு காலத்தில் எங்காவது வெளியில் செல்லும்போது மஞ்சள் துணிப்பையை கொண்டு சென்றால், அவர்களை ஏதோ வேற்றுகிரக வாசிகளை பார்ப்பது போல் நடத்திய காலம் உண்டு.
அதற்கு பதிலாக பிளாஸ்டிக் கேரிபேக்குகளை கொண்டு சென்றால் தான் சமூக அந்தஸ்து என்று நம்பிக்கொண்டிருந்தனர். நாளாடைவில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் கேரிபேக்குகள், எந்த பொருட்களை எடுத்தாலும் அவை அனைத்துமே பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்பது, அன்றாடம் உணவுக்காக பயன்படுத்தும் மளிகை சாமான்களும் பிளாஸ்டிக் கவர்களில் விற்பனை என அனைத்திலுமே பிளாஸ்டிக் நீக்கமற நிறைந்துவிட்டன.
இதனால் சுற்றுச்சூழல் கெடுவதோடு, கழிவுப்பொருட்களை உண்ணும் கால்நடைகள், மற்ற ஜீவராசிகள் பாதிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் பொருட்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கூட மக்காமல் அப்படியே இருப்பதால், இது சுற்றுச்சூழலுக்கு கேடு என்பதை மிகவும் காலதாமதமாக உணர்ந்த மத்திய மாநில அரசுகளும், தற்போது பிளாஸ்டிக்கை அறவே ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
பிளாஸ்டிக்கை ஒழிப்பதில் மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டிவருவது போல், சபரிமலை தேவசம் போர்டும் தீவிரம் காட்டி வருகிறது. நாள் தோறும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை காண வருவதால், ஐயப்ப பக்தர்கள் கொண்டுவரும் இருமுடியில் இருக்கும் மஞ்சள் பொடி மற்றும் பன்னீர் பாட்டில் ஆகியவற்றால், பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் சேர்ந்து சபரிமலை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சுகாதாரம் மோசடைந்துள்ளது.
இதனால், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை தடுக்க சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு ஐயப்ப பக்தர்கள் யாரும் இனிமேல் பன்னீர் பாட்டில்களை கொண்டுவரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுபற்றிய வேண்டுகோள் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, சபரிமலையில் பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தாலும், பிளாஸ்டிக்கை முழுவதுமாக ஒழிக்க முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம், ஐயப்ப பக்தர்கள் இருமுடியில் கொண்டு வரும் மஞ்சள் பொடி பாக்கெட் மற்றம் பன்னீர் பாட்டில்கள் தான். இருமுடியில் கட்டிக்கொண்டு வரும் பன்னீர் பாட்டில்களை அப்படியே வீசிவிட்டு செல்வதால், சபரிமலை காடுகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
தற்போது பயன்படுத்தும் பன்னீரில் ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதால், அவற்றை ஐயப்பன் பூஜைக்கு பயன்படுத்துவதில்லை. அதனால், பன்னீரை பக்தர்கள் மீதே தெளித்துவிட்டு பிளாஸ்டிக் பாட்டில்களையும் அப்படியே போட்டுவிட்டு செல்கின்றனர். இதை ஒழிப்பது மிகப்பெரும் சவாலாக உள்ளது.
இருமுடி கட்டில், நெய் தேங்காய், காய்ந்த அரிசி, மஞ்சள் பொடி, காணிக்கை ஆகியவற்றை கொண்டு வந்தால் போதுமானது. அவல், பொரி போன்றவை தேவையில்லை. குறிப்பாக மஞ்சள் பொடி பிளாஸ்டிக் பைகளில் கிடைத்தால் அவற்றை இலை அல்லது பேப்பர்களில் மடித்து வைத்து கொண்டுவந்தால் மிக நல்லது.
சபரிமலை ஐயப்பனுக்கு எது தேவையோ அதை மட்டுமே கொண்டு வந்து, சபரிமலை ஐயப்பனை தரிசிப்பதோடு, சபரிமலை சுற்றுப்புறத்தையும் பாதுகாக்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பனுக்கு நடைபெறும் பூஜை நடைமுறைகள் அனைத்தையுமே தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு தான் முடிவு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.