குரு பெயர்ச்சி மகா யாகம் : பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்
வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் இரண்டு முறை குருப் பெயர்ச்சி மகா யாகம் வருகிற 04.10.2018 மற்றும் 11.10.2018 ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது.
வேலூர்: குரு பெயர்ச்சியை முன்னிட்டு வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் வருகிற 04.10.2018 மற்றும் 11.10.2018 ஆகிய இரு நாட்கள் குருப் பெயர்ச்சி மகா யாகம் நடைபெறுகிறது.
மனித வாழ்க்கையின் ஏற்றம் - இறக்கம் எல்லாமே பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அமைகின்றன. பூர்வ புண்ணியத்திற்கான பலன்களை அளிப்போர் நவகிரகங்கள் எனப் போற்றப் பெறும் நவநாயகர்களே ஆவர். இந்த ஒன்பது கிரகங்களில் ஐந்தாவதாக, நடு நாயகராகத் திகழ்பவர் குரு பகவான்.
தேவர்களின் குருவாகிய குருபகவான் பூரணமான சுபகிரகம் ஆவார். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. அதனால் தான் 'குரு பார்க்க கோடி நன்மை’, குரு பார்வை தோஷ நிவர்த்தி’ என்றெல்லாம் போற்றப்படுகிறார்.
குருபகவான் ராசி மண்டலத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் காலம் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். அதாவது, ஒரு ராசியைக் கடக்க ஓர் ஆண்டு ஆகிறது. குரு, சூரியன் இருவரும் கும்பத்திலும் சந்திரன் மகம் நட்சத்திரத்தில் சிம்ம ராசியிலும் இருக்கும் காலத்தில், மகா கும்பமேளா கொண்டாடப் படுகிறது.
குருபகவான் ஒரு ராசியில் 2, 5,7,9,11, ஆகிய ஐந்து இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் குறிப்பிட்ட ஜாதகர் நற்பலன்களை அடைகிறார். அதே குருபகவான், 1,3,4,6,8,10,12 ஆகிய ஏழு இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் அசுப பலன்களைப் பெறுவார். இப்படி நன்மையற்ற பலன்களைப் பெறக்கூடிய ராசி அன்பர்கள், குருப்பெயர்ச்சி நாளில் உரிய பரிகாரம், ஹோமம் மற்றும் பூஜைகளில் பங்கேற்பதால், அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடலாம்.
தற்போது குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடப்பெயர்சி அடையப்போகிறார். இதனை முன்னிட்டு வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் வருகிற 04.10.2018, வியாழக்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை, மற்றும் 11.10.2018 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை இரண்டு நாட்கள் பக்தர்களின் வேண்டு கோளுக்கிணங்க குருப்பெயர்ச்சி மஹாயாகம் மற்றும் ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் விசேஷ பூஜைகள், தன்வந்திரி பீடத்தில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
வாலாஜாபேட்டையில் குரு பீடத்தில் குருபகவான் பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்யும் வகையில் அனுக்கிரக தக்ஷிணாமூர்த்தியாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்தில் காண முடியாத தனிச்சிறப்பாகும். மேற்கண்ட அனுக்கிரக குருபகவானுக்கு வியாழக்கிழமை மற்றும் குரு பெயர்ச்சி நாளில் மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு தானம் செய்வது சிறப்பு தரும்.
மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம். கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நிவேதனம் செய்து பிரார்த்தனை செய்து கொண்டால் பலவிதமான நன்மைகள் ஏற்படும். மேலும் மனக்குறைகளும் நீங்கும் என்கிறார் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி 04.10.2018 வியாழக்கிழமையன்றும் 11.10.2018 வியாழக்கிழமையன்று திருக்கணித பஞ்சாங்கப்படியும் நிகழ உள்ளது. குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்கிறார்.
அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடவேண்டியும்,சுப பலன்களான திருமணம், குழந்தைப்பேறு, தொழில், பொருளாதாரம், உயர்பதவி, அரசாங்க உதவி ஆரோக்யம் போன்றவைகளில் நன்மை பெற வேண்டி மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் இராசி நேயர்கள் குருபுத்தி குருதிசை, நடைபெறுபவர்கள் பரிகாரம் செய்து கொள்வது மிகவும் சிறப்பு.
இந்த குரு பெயர்ச்சி யாகத்தில் வைத்திய குருவும் நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவான் யந்திரம், டாலர், மற்றும் புகைப்படம் வைத்து ஹோம பூஜைகள் நடைபெற உள்ளது. இந்த பிரசாதங்கள் வேண்டுபவர்கள் மற்றும் ஹோம சங்கல்பத்தில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் வெளிநாட்டில் வசிப்பவர்களும் கீழ்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளவும்.
குருப்பெயர்ச்சி மகா யாகத்தில் பங்கேற்கும் ஆன்மிக ஆன்றோர்கள், ஜோதிட நிபுணர்கள், ஆலய அர்ச்சகர்கள், கிராமக் கோயில் பூசாரிகள் விழா மேடையில் கௌரவிக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,10 கீழ்புதுப்பேட்டை, தன்வந்திரி நகர்,வாலாஜாபேட்டை தொலை பேசி. 04172- 230033,230274,9443330203