குரு பெயர்ச்சி 2017: நன்மை தரும் குரு பார்வை
குருபகவான் இன்னும் சில வாரங்களில் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியடைகிறார்
சென்னை: பார்வையால் நன்மை தரும் கிரகம் குரு. எனவேதான் ஜோதிடத்தில் குரு பெயர்ச்சி நிகழ்வதை மக்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றனர்.
குரு பகவானின் அருட்பார்வை ஒருவருக்கு ஞானத்தை, கல்வியை, கலைகளை அருளும். எனவேதான் குருவின் பார்வைக்காக வேண்டிக்கொள்கின்றனர்.
வியாழன் கிரகம் சூரியனைச் சுற்றிவர பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் அமர்கிறார் குரு. இந்த ஆண்டு குரு பெயர்ச்சி செப்டம்பர் மாதம் நிகழ உள்ளது. கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்கிறார் குரு பகவான். இந்த குரு பெயர்ச்சியை அரசியல் கட்சியினரும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.
சுப கிரகமான குருவிற்கு சில அசுப அமைப்புகளும் உண்டு. குரு பார்வை தான் யோகம், தோஷ நிவர்த்தி போன்ற ஏற்றமான பலன்களைத் தரும். ஆனால், தனித்த குரு எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தின் வீட்டின் ஸ்தானத்தை கெடுத்து விடும். அதை வைத்துத்தான் குரு நின்ற இடம் பாழ் என்ற சொற்றொடரும், அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு என்ற ஜோதிட வாக்கும் ஏற்பட்டன.
குரு பகவான்
சமூக அந்தஸ்து, ஆன்மீக ஈடுபாடு, தர்ம காரியங்கள், நற்பணி நிலையங்கள், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் அமைத்தல், பள்ளி, கல்லூரிகள் கட்டுதல், வங்கி, அரசு கஜானா போன்ற இடங்களில் வேலை கிடைத்தல் நிதி, நீதித்துறையில் பணிபுரிவது, நீதிபதி, அரசு உயர்பதவிகள் போன்றவற்றை அளிக்கும் வல்லமை உடையவர் குரு பகவான்.
குரு எங்கே இருப்பது சிறப்பு
எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும் குரு நீச்சம் பெறாமலும் 6, 8, 12ஆம் இடத்திலும் 6, 8, 12 ஆகிய அதிபதிகளுடன் சேராமல் இருக்க வேண்டும். குருவுக்கு உரிய தேதிகள், கிழமைகள், நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு பல யோகங்கள் உண்டாகும். மேலும் ஜாதகத்தில் கேந்திர, கோணங்களில் இருப்பதும் சிறப்பானதாகும்.
கோடி புண்ணியம்
குரு பார்க்க கோடி புண்ணியம் என்பது நம் ஆன்றோர் வாக்கு. எத்தகைய தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் விலகிவிடும். லக்னத்தில் குரு இருப்பது மிகவும் விசேஷம். ஏனென்றால் இவரின் பொன்னொளிப் பார்வை ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களுக்கு விழும். ஆகையால் இந்த ஸ்தானங்களின் பலம் விருத்தியாகும்.
வியாழ நோக்கம்
குரு பகவான் ஆசி இருந்தால் திருமணம் நடந்து விடும். அதை வியாழ நோக்கம் என்பார்கள். குரு பகவான் லக்கினத்தையோ அல்லது லக்கினத்திற்கு அடுத்துள்ள இரண்டாம் வீட்டையோ அல்லது சந்திர ராசியையோ அல்லது சந்திர ராசிக்கு அடுத்துள்ள இரண்டாம் வீட்டையோ கோச்சாரத்தில் சுற்றிவரும் போது, 5, 7, 9 ஆம் பார்வையாகப் பார்க்கும் நிலையை வியாழ நோக்கம் என்பார்கள்.
வியாழக்கிழமை விரதம்
குருவின் பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். குரு பார்வை சரி இல்லாதவர்கள் அவருக்கு சாந்தியும், பூஜையும் செய்வது நல்லது. வியாழக்கிழமை விரதம் கடைபிடிக்க வேண்டும். வெண் முல்லை மலர் சாற்றி குருவை வழிபட்டால் உயர்பதவி கிடைக்கும். செல்வச்செழிப்பு மேலோங்கும். சுக வாழ்வு, மன நிம்மதி கிடைக்கும்.
கொண்டைக்கடலை மாலை
குருபகவானுக்கு உகந்த நிறம் மஞ்சள், பிடித்த தானியம் கொண்டைக்கடலை, உரிய ரத்தினம் புஷ்பராகம். குருவிற்கு ஏற்ற நாள் வியாழக் கிழமையாகும். அந்த நாளில் விரதம் இருந்து மாலையில் சிவன் கோயிலுக்கு செல்லலாம். அங்கு தட்சிணாமூர்த்திக்கு நடக்கும் சிறப்பு பிராத்தனையில் கலந்துகொண்டு பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக்கடலை சுண்டல் வழங்கலாம்.
குரு பரிகார தலங்கள்
குரு பரிகார தலங்கள் தமிழ்நாட்டில் குரு பரிகாரத்தலங்களாக பல உள்ளன. இவற்றில் கும்பகோணம் அருகே உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாகும். தஞ்சாவூர் மாவட்டம் திட்டை, மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள குருவித்துறை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள பட்டமங்கலம் உள்ளிட்ட ஆலயங்களில் பரிகார பூஜைகள் செய்து வழிபடலாம். நவ திருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி குரு ஸ்தலமாகும். அங்கும் வழிபாடு செய்யலாம்.
திருச்செந்தூரில் குரு
திருச்செந்தூரில் முருகப் பெருமான் குரு வடிவாகவே அருள்புரிகிறார். சூரசம்ஹாரம் செய்த பின்பு முருகப்பெருமான், அந்தத் தோஷத்தைப் போக்குவதற்காக திருச்செந்தூரில் சிவபெருமானைப் பூஜித்தார். நாள் தோறும் முருகப் பெருமான் பூஜித்தபின்பு, வியாழபகவான் இந்தத் தலத்திலே சிவபூஜை செய்கிறார். இவை தவிர சிவன் கோயில்களில் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை தினத்தன்று சிறப்பு வழிபாடுகள் செய்வதன் மூலமும் குருவின் அருளைப் பெறலாம்.