கார்த்திகை தேய்பிறை அஷ்டமியில் 12 ராசிக்காரர்களும் பைரவர்களை எப்படி வணங்கவேண்டும்
தேய்பிறை அஷ்டமியான நாளை தினம் பைரவரை வழிபடும் முறை பற்றியும் தேய்பிறை அஷ்டமியில் எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த பைரவரை வழிபடலாம் என்றும் பார்க்கலாம். நவகிரகங்களும், 12 ராசிகளும் பைரவரின் உடம்பில் அடக்கம் என்பதால் அவரை எந்த ராசிக்காரர்கள் நட
மதுரை: பைரவர் என்றாலே பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். பைரவரை வழிபட்டால் நிச்சயம் உடனே கைமேல் பலன்கள் கிடைக்கும். இவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கைகூடும் என்பதை உணர்ந்ததால் சமீபகாலமாக சிவ ஆலயங்களில் பைரவர் சன்னதியில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி சகல சௌபாக்கியங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
நாளைய தினம் அனைத்து சிவாலயங்களிலும் கால பைரவாஷ்டமி வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும். குறிப்பாக காசி பைரவர் ஆலயம், இலுப்பைக்குடி சொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம், சீர்காழி சட்டைநாதர் ஆலயம், வாஞ்சியத்தில் யோக பைரவர் சந்நிதி, புதுவை இடையார் பாளையம் சொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் ஆகிய இடங்களில் பைரவருக்கான ஸ்ரீ ருத்ர ஹோமம், ஸ்ரீ பைரவர் ஹோமம் போன்றவை நடைபெறும்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சொர்ணாம்பிகை சமேத சொர்ணாகர்ஷண பைரவர், அஷ்ட பைரவர் சகித மஹா காலபைரவருக்கு தசபைரவர் யாகத்துடன் பஞ்ச திரவியாபிஷேகமும், விசேஷ அர்ச்சனையும் நடைபெற உள்ளது. 1000 கிலோ விபூதி கொண்டு அபிஷேகம் நடைபெறுகிறது.

துன்பம் தீர்க்கும் பைரவர்
காலத்தின் கடவுளான கால பைரவர் தலை விதியை மாற்றக்கூடிய சக்தி கொண்டவர். சிவபெருமானின் அம்சமான பைரவர் காசி நகரின் காவல் தெய்வம், நவ கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துபவர். சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவானால் ஏற்படும் துன்பங்கள் தீரும். ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனியால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க பைரவரை வணங்கலாம்.

சாந்த வடிவ பைரவர்
சொர்ண கமல ரேகை அமைந்திருக்கும் சொர்ணாகர்ஷண பைரவ மூர்த்தியை வணங்குவது இன்னும் சிறப்பானது. ராகு கேதுவை முப்புரி நூலாக அணிந்து இருக்கும் பைரவ மூர்த்தி மழு, பாசம், சூலம், தண்டம் ஏந்தி காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும் வடிவம் கொண்டவர். நம்பினோர்க்கு சாந்த வடிவமானவர்.

அரளி மாலை சூட்டி வணங்கலாம்
தேய்பிறை அஷ்டமி நாளில் சிறப்பு பூஜைகள், யாகங்களில் கலந்து கொள்வது என்பது சகல வித செல்வங்களையும் அள்ளித்தரும்.
இன்றைய தினம் பைரவருக்கு வில்வம் அல்லது செவ்வரளி மாலை அணிவித்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். தேங்காயில் மூன்று கண்கள் இருக்கும் தேங்காய் மூடியில் ஐந்து எண்ணெய்களை ஊற்றி விளக்கிடுவதும் விசேஷம். நெய் தீபமும், மிளகுத் திரி தீபமும் பக்தர்கள் பைரவருக்கு ஏற்றி வணங்குகின்றனர்.

பைரவரும் 12 ராசிகளும்
பைரவரின் உடம்பில் நவக்கிரகங்களும், அனைத்து ராசிகளும் அடங்கியுள்ளன. மேஷ ராசிக்காரர்கள் இவர் தலையினைப் பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும். ரிஷபம் கழுத்து, மிதுனம் தோள்புஜம், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகரம் முட்டியின் கீழ்பகுதி, கும்பம் கணுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும்.

காலாஷ்டமி
கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த தினத்தில் அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது. ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும்போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.

தடை நீக்கும் பைரவர்
6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும், திருமணம் கைகூடும்.

அபிஷேக பிரியர் பைரவர்
அபிசேகப்பிரியான சிவபெருமானின் அம்சம் என்பதால், பைரவருக்கு சந்தன அபிஷேகம் மிகவும் உகந்தது. அதனுடன் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ. பச்சை கற்பூரம் ஆகியவையும் அபிசேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. வெண் பூசணிக்காய் வெட்டி பலியிட வேண்டும்.

பைரவருக்கு அபிஷேகம்
பீட்ரூட்டை வெட்டி வேகவைத்து அந்த தண்ணீரில் கலந்த சாதம், தேனில் ஊறவைத்த உளுந்து வடை மற்றும் வடையை மாலையாக சாற்ற வேண்டும். சுண்டல், வடை, பாயசம், சர்க்கரைப் பொங்கல், நிவேதனம் செய்ய வேண்டும். பால், இளநீர், தேன் இவற்றால் யந்திரத்தை அபிஷேகம் செய்து, பீடத்தில் சந்தனம், குங்குமம் வைத்து சிகப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து, கிழக்கு முகமாக அமர்ந்து தினம் 1008 முறை மந்திரம் கூறி பூஜிக்க ஆயுஷ்ய யாகத்திற்கு நிகரான பலனைக் கொடுக்கும். எளிமையாக எலுமிச்சை சாதம் படைத்தும் பைரவரை வணங்கலாம்.












Click it and Unblock the Notifications