கார்த்திகை கடைஞாயிறு : குத்தாலத்தில் புனித நீராடிய பக்தர்கள் - திருநாகேஸ்வரத்தில் அனுமதி மறுப்பு
கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி உற்சவம் குத்தாலம் படித்துறையில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை: கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவத்தை முன்னிட்டு குத்தாலம் படித்துறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் நடைபெற்ற கடைஞாயிறு தீர்த்தவாரியை முன்னிட்டு சூரிய புஷ்கரணியில் புனித நீராட அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவிரி தீர்த்த படித்துறையில் ஆண்டு தோறும் கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி குத்தாலம் சோழீஸ்வரர் கோவில், மன்மதீஸ்வரர் கோவில், ஆதிகேசவபெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலாவாக வந்து காவிரி தீர்த்த படித்துறையில் எழுந்தருளினர்.
இதை தொடர்ந்து அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
கடைஞாயிறு தீர்த்தவாரியையொட்டி குத்தாலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குத்தாலம் பகுதியில் 2 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

திருநாகேஸ்வரம் கடைஞாயிறு விழா
கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரத்தில் நாகநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நவக்கிரகங்களில் ராகுபகவான் தனி சன்னதியில் நாககன்னி, நாகவள்ளி என இரு தேவியருடன் மங்களராகுவாக அருள்பாலித்து வருகிறார்.
சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடை ஞாயிறு தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த விழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று பஞ்சமூர்த்தி சாமிகள் தனி்த்தனியாக வெள்ளி ரிஷப வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு சூரிய புஷ்கரணி முன்பு அமைக்கப்பட்ட பந்தலில் ஒருசேர எழுந்தருளினர். அப்போது ஏராளமான பக்தர்கள் பஞ்சமூர்த்தி சாமிகளை ஒரே நேரத்தில் தரிசனம் செய்தனர்.
பின்னர் சூரியபுஷ்கரணி தீர்த்த குளத்தில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது சூரிய புஷ்கரணியில் நான்கு புறமும் பக்தர்கள் நீராட அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கில் குளத்தில் பக்தர்களை புனித நீராட அனுமதி வழங்கினர். ஆனால் நேற்று கோவிலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராட காத்திருந்தும் அவர்களை குளத்துக்குள் புனித நீராட அனுமதிக்கவில்லை. இதனால் கரைகளில் காத்திருந்த பக்தர்கள் பஞ்சமூர்த்தி சுவாமிகளை தரிசனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications