கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா ரத்து: சோகத்தோடு கும்மியடித்து வழிபட்ட திருநங்கைகள்
கூத்தாண்டவர் கோவில் கூவாகம் திருவிழா ரத்து செய்யப்பட்டதை அடுத்து ஏராளமான திருநங்கைகள் கோவிலுக்கு வந்து சூடம் ஏற்றி கும்மியடித்து வழிபட்டனர்.
கள்ளக்குறிச்சி: கொரோனா காரணமாக கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஏராளமான திருநங்கைகள் நேரில் வந்து சூடம் ஏற்றி கும்மியடித்து வழிபட்டு சென்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 15 நாட்களுக்கும் மேல் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
குருஷேத்திர போரில் வெற்றி பெறுவதற்காக அர்ஜூனன் மகன் அரவாணை பலி கொடுக்க பாண்டவர்கள் முடிவு செய்கிறார்கள். அரவாணும் இதை மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொள்கிறான் ஆனால் ஒரு நிபந்தனை விதிக்கிறான். தான் இறப்பதற்கு முன், திருமணம் செய்ய வேண்டும் என்பதே.
இறக்கப்போகும் ஒருவனை மணந்து அடுத்த நாள் விதவைக்கோலம் பூண எந்தப் பெண்ணும் முன் வர மறுக்கிறாள். இதைப் பார்க்கும் கிருஷ்ண பகவான் பேரழகியாக மோகினி அவதாரம் எடுத்து அரவாணை மணந்து, தாம்பத்திய உறவு கொண்டு மறுநாள் விதவையாகிறார். அந்தக் கிருஷ்ணரின் வடிவம் தான் திருநங்கைகள்! அதனை நினைவுகூறும் வகையிலேயே ஒவ்வொரு வருடமும் இந்த கூத்தாண்டவர் கோயில் திருவிழா நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அரவாண் களப்பலியும், திருநங்கைகள் திருமணமும், விதவை கோலம் பூணுவதும் நிகழ்கிறது. இந்த விழாவில் பங்கேற்க சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தில் தமிழகம், இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சகணக்கான பக்தர்கள் மற்றும் திருநங்கைகள் பங்கேற்கும் இந்த திருவிழாவில் திருநங்கைகள் மணப்பெண் போல தங்களை அலங்கரித்து கொண்டு அரவானை வணங்கி கோவில் பூசாரியின் மூலம் தாலி கட்டி கொண்டு இரவு முழுவதும் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்வார்கள். தேரோட்டம் முடிந்த பின்னர் அதிகாலையில் தங்களது தாலியை துறந்து விதவை கோலத்தில் சொந்த ஊருக்கு திரும்பி செல்வார்கள்.
கொரானா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திருநங்கைகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மணப்பெண்களை போல் தங்களை அலங்கரித்துக்கொண்டு கோவிலுக்கு வந்தனர். பூட்டபட்டிருந்த கோவிலின் வாசலில் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்தும் வழிபட்டு சென்றனர்.
சென்னை மற்றும் சேலத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள், தாலி மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட பொருட்களை வைத்து வழிபட்டு சென்றனர். சூடம் ஏற்றி வழிபட்டு கும்மியடித்தும், தேங்காய் உடைத்தும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர்.
அரவானை வணங்குவதன் மூலம் தீராத நோய்கள் தீரும் எனவும், குழந்தையில்லாப் பெண்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது. உறுமைசோறு (பலிசாதம்) படையலில் படைக்கப்படும் பலகாரங்களையும், உணவையும் வாங்கி சாப்பிட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த விழாவை முன்னிட்டு கூவாகம், பெரியசெவலை, திருவெண்ணெய்நல்லூர், கொரட்டூர் உட்பட பல்வேறு கிராம மக்கள் 18 நாட்களுக்கு சுப நிகழ்ச்சிகள் செய்வதைத் தவிர்த்துவிடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.