மதுரை மக்கள் அழகரைப் பார்க்க இனி அடுத்த சித்திரை திருவிழா வரைக்கும் காத்திருக்கணும்!
சித்திரை திருவிழாவின் நிறைவு பெற்றதை தொடர்ந்து பூப்பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர் அழகர்மலையை சென்றடைந்தார். அழகர் வருகையை முன்னிட்டு அப்பன் திருப்பதி, கள்ளந்திரி உள்ளிட்ட பகுதிகள் விழாக்கோலத்தில் காட்ச
மதுரை: மதுரை குலுங்க குலுங்க சித்திரை திருவிழா நிறைவடைந்துள்ளது. தங்கப் பல்லக்கில் மதுரைக்கு வந்து வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர், பூப்பல்லக்கில் அழகர் மலைக்கு புறப்பட்டு சென்றார்.
தூங்கா நகரமான மதுரையில் சித்திரை மாதம் 15 நாட்கள் திருவிழா களைகட்டும். சைவம், வைணவம் கலந்த பண்டிகையாக சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் முடிந்த போதே அழகரின் வருகையும் ஆராவாராமாக தொடங்கியது.
ஏப்ரல் 29ஆம் தேதியன்று மூன்றுமாவடிக்கு வந்த அழகரை பக்தர்கள் சர்க்கரைக் கிண்ணத்தில் தீபம் ஏற்றி எதிர்சேவை செய்து வரவேற்றனர். தல்லாகுளம் பெருமாள் கோயிலில் இரவில் தங்கி இளைப்பாறினார் அழகர்.
வைகையில் இறங்கிய அழகர்
நள்ளிரவில் திருமஞ்சனமாகி ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து தங்கக் குதிரை வாகனத்தின் மீதேறி மதுரை நகரில் வலம் வந்தார் ஏப்ரல் 30ஆம் தேதியன்று அதிகாலையில் வைகை ஆற்றில் எழுந்தருளினார்.
வைகை ஆற்றில் பக்தர்கள் வெள்ளம் ஒருபுறம்... தண்ணீர் வெள்ளம் மறுபுறம் என சூழ தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார் கள்ளழகர்.
சாப விமோசனம்
சேஷ வாகனத்தில் வண்டியூருக்கு புறப்பட்ட அழகர், வைகை ஆற்றிலுள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு கருட வாகனத்தில் தோன்றி மண்டூக உருவில் தவம் இருந்த சுதபஸ் என்ற முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
விடிய விடிய தரிசனம்
அங்கிருந்து புறப்பட்ட அழகர் அன்றிரவு ராமராயர் மண்பத்தில் எழுந்தருளி தசாவதார கோலத்தில் காட்சியளித்தார். பக்தர்கள் இரவு முழுவதும் விடிய விடிய தரிசனம் செய்தனர். இதனையடுத்து ராமராயர் மண்டபத்தில் இருந்து அனந்தராயர் பல்லக்கில் ராசாங்க திருக்கோலத்துடன் புறப்பட்ட அழகர், ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு சென்றார்.
காணிக்கை கொடுத்த விவசாயிகள்
அதிகாலையில் பூப்பல்லக்கில் அழகர் மலைக்குப் புறப்பட்டார். விடிய விடிய அழகரை தரிசித்த விவசாயிகள், தங்கள் வயல்களில் விளைந்த நெல் மற்றும் தானியங்களை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் காணிக்கையாகச் செலுத்தினர். தல்லாகுளத்தில் இருந்து ஒவ்வொரு மண்டகப்படியாகச் சென்று மலையை நோக்கி புறப்பட்டார்.
அழகர் மலைக்கு வந்த கள்ளழகர்
காலை 8 மணிக்கு அம்பலகாரர் மண்டபத்தில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின் 10 மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் புதூர், மூன்றுமாவடி வழியாக அப்பன்திருப்பதிக்கு சென்றார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவரை தரிசனம் செய்து, பிரியாவிடை கொடுத்து வழியனுப்பி வைத்தனர். அழகர் மலைக்கு வந்த பெருமாளுக்கு உற்சவ சாந்தி நடைபெற்றது. அத்துடன் அழகர் கோவில் சித்திரை திருவிழா நிறைவடைகிறது. இனி அழகரைப் பார்க்க ஒரு வருடம் ஆகுமே என்பது மதுரைவாசிகளின் ஏக்கமாகும்.